சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘மின்னணு ரத்த சேவைகள்’ கைபேசிச் செயலியை டாக்டர். ஹர்ஷ்வர்தன் தொடங்கிவைத்தார்

Posted On: 25 JUN 2020 3:36PM by PIB Chennai

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள ‘ மின்னணு ரத்த சேவைகள்’ கைபேசிச் செயலியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன், புதுதில்லியில் இன்று காணொளிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஆவார். 

பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2015-இல் தொடங்கிவைத்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும்  அதிநவீன கணக்கீட்டு மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இ-ரக்டோஷ் குழுவினரால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஹர்ஷ்வர்தன்,  “மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் தொடங்கிவைத்த டிஜிட்டல் இந்தியா திட்டம், தற்போது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் ஒருங்கிணைந்த அங்கமாக மாறிவிட்டது.  ரத்த தானத்திற்கான இந்தச் செயலி, ரத்த தான சேவைகளைப் பூர்த்தி செய்வதில், டிஜிட்டல் இந்தியா திட்டம் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்“  என்றார்.   “பலரது குடும்பத்தில் நிலவும் மருத்துவச் சூழ்நிலை காரணமாக, ரத்த தானம் குறித்த சேவைகள் அவர்களுக்கு அடிக்கடி தேவைப்படுகிறது.   இந்தச் செயலி மூலம்,  ஒரு ரத்த வங்கியில் இருந்து ஒரே நேரத்தில் 4 யூனிட் ரத்தம் கோரி பதிவு செய்வதுடன், 12 மணி நேரம் காத்திருந்தால் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  இந்திய செஞ்சிலுவைச் சங்க தேசிய தலைமையகத்தில், ரத்தம் கோரி பதிவு செய்வதை இந்தச் செயலி எளிதாக்குகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.   நாடு, பெருந்தொற்றை  எதிர்கொண்டு வரும் நேரத்தில்,  நேரடியாக ரத்தம் தேவைப்படுவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த செல்போன் செயலி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், தாமாக முன்வந்து ரத்த தானம் செய்த குருதிக் கொடையாளிகள் அனைவருக்கும் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் பாராட்டுத் தெரிவித்தார்.  

இந்த கைபெசிச் செயலியைத் தொடங்கி வைத்த பிறகு,  இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம், டாக்டர்.ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்றது.   அப்போது, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்முயற்சிகளைப் பாராட்டிய டாக்டர்.ஹர்ஷ்வர்தன்,  “கோவிட்-19  பெருந்தொற்று காலத்தில்,  இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அரசுடன் இணைந்து முக்கிய பங்கு வகிப்பதாகவும்,   குறிப்பாக, போதுமான அளவிற்கு பாதுகாப்பான ரத்தத்தை விநியோகிக்க ஏதுவாக, ரத்த தானம் வழங்குவோருக்கு  அனுமதிச் சீட்டு வழங்குவதோடு,  ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறினார்.

*****



(Release ID: 1634413) Visitor Counter : 241