பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், லடாக் எல்லை நிலைமை குறித்து ராணுவத் தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் மறுஆய்வு நடத்தினார்

Posted On: 17 JUN 2020 3:23PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று காலை, பாதுகாப்பு அமைச்சகத்தின் தெற்குப் குதியில் நடந்த கூட்டத்தில் லடாக் எல்லை நிலைமை குறித்து  மறுஆய்வு செய்தார். இதில் பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரத்துறை செயலாளருமான  ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைமைத்  தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, கடற்படைத்தளபதி அட்மிரல் கரம்பீர்சிங் மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் இது குறித்து  ட்வீட்டில் பதிவிட்டுள்ள திரு.ராஜ்நாத் சிங், எல்லை மோதல்களில் நிகழ்ந்த உயிர் இழப்பு குறித்து  தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வீரர்களின் வீரமரணம் ஆழ்ந்த மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. நமது வீரர்கள் தங்கள்  கடமையில் தனித்துவமிக்க உயர்வான தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தி, இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பாரம்பரிய வரிசையில்  தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வீரர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் துடிக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் நமது தேசம் அவர்களுடன்  தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் தைரியமான இதயங்களின் வீரத்தையும், தைரியத்தையும் துணிச்சலையும் எண்ணி நாம் பெருமை அடைகிறோம்” என்று பாதுப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

******



(Release ID: 1632266) Visitor Counter : 191