தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

1952-ஆம் ஆண்டின் ஊழியர் வைப்பு நிதி மற்றும் இதர வகை ஏற்பாடுகளுக்கான சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் அவை செலுத்த வேண்டிய தொகையை தாமதமாகச் செலுத்தும் போது, அபராத விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Posted On: 15 MAY 2020 5:14PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கென அரசினால் அறிவிக்கப்பட்ட நீடித்த ஊரடங்கின் விளைவாகவும், இந்தப் பெருந்தொற்றினால் உருவாகியுள்ள இதர வகையான இடையூறுகளின் விளைவாகவும் 1952-ஆம் ஆண்டின் ஊழியர் வைப்புநிதி மற்றும் இதரவகை ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு, முறையாக செயல்பட முடியாமலும், உரிய நேரத்தில் தங்களது சட்டபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியாமலும் உள்ளன.

எந்தவொரு காலப்பகுதிக்குமான பங்களிப்புகளை அல்லது நிர்வாகக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துவதில் நிறுவனங்கள் சந்தித்த இடையூறுகளை கவனத்தில் கொண்டு நடைமுறை அல்லது பொருளாதார காரணங்களின் விளைவாக ஏற்பட்ட இத்தகைய தாமதத்தை ஊழியர் வைப்பு நிதிக்கான அலுவலகம் தவறாகக் கருதாது; இதுபோன்ற தாமதங்களுக்கு தண்டனை அபராதங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற தாமதங்களுக்கு தண்டனை அபராதங்கள் எதுவும் விதிக்கக் கூடாது எனவும், எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்திய வகையில் ஊழியர் வைப்பு நிதி அலுவலகத்தின் கள அலுவலகங்களுக்கு 15.05.2020 தேதியிட்ட சுற்றறிக்கை சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. ஊழியர் வைப்புநிதி அலுவலகத்தின் இணைய தளத்தின் முகப்புப்பக்கத்தில் கோவிட்-19 என்ற தலைப்பின் கீழ் இதனைக் காணலாம்.

மேற்கூறிய நடவடிக்கையானது ஊழியர் வைப்புநிதி முறையின் கீழ் வரும் 6.5 இலட்சம் நிறுவனங்கள் விதிமுறைகளின் படி நடந்து கொள்வதை எளிதாக்கும் என்பதோடு, தண்டனை அபராதங்களை செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்தும் அவற்றை விடுவிக்கிறது.



(Release ID: 1624369) Visitor Counter : 208