பிரதமர் அலுவலகம்

பாதுகாப்பு, விண்வெளி மேம்பாடு: பிரதமர் ஆலோசனை

Posted On: 30 APR 2020 10:26PM by PIB Chennai

இந்திய பாதுகாப்புத் தொழில்துறை வலிமையானதாகவும் தற்சார்புற்றதாகவும் ஆக்க உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி விரிவான விவாதத்தை மேற்கொண்டார். “கோவிட் 19” தொற்று பரவியுள்ள இத்தகைய சூழ்நிலையில் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்க முன் முயற்சி எடுக்கும் வகையிலும் அதே சமயம், ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்திலும் இந்த விவாதம் அமைந்தது. நாட்டில் உள்ள ஆயுத, தளவாட  தொழிற் சாலைகளின் செயல்பாடுகளைச் சீர்திருத்துவது, கொள்முதல் நடைமுறையையை ஒழுங்குபடுத்துவது, நிதி ஒதுக்கீட்டில் போதிய கவனம் செலுத்துவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமையாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பது, அதிக முக்கிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் பிரதமர் தலைமயிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையிலும் விண்வெளித் துறையிலும் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை உள்ளிட்டவற்றில் இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் ஈடம்பெறச் செய்வது குறித்து பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், இந்தியாவின் தற்சார்பு, ஏற்றுமதி மேம்படுத்துதல் என்ற இரட்டை குறிக்கோள்களை எட்டும் விதத்தில் தனியார் துறை – அரசுத் துறையின் தீவிரப் பங்களிப்பு ஆகியவை குறித்தும் பிரதமர் விவாதித்தார். பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

அதே சமயம் பாதுகாப்புச் செலவினங்களைச் சிக்கனமாகக் கையாள்வது குறித்தும் அதன் மூலம் சேமிக்கப்படும் நிதி பாதுகாப்பு முதலீட்டைப் பெறுவதற்குப் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்கான கொள்முதல் நடைமுறையில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள்,  உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரித்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம், இந்தியாவில் உற்பத்திக்கான போதிய வசதிகளை அமைத்து உலகளாவிய அசல் இயந்திர உற்பத்திக்கு உதவுவது, உலகளாவிய விநியோக சங்கலியில்  இந்தியாவை நிலைபெறச் செய்தல் ஆகிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் தலைவராகத் திகழ தரமானவற்றை ஏற்றுமதி செய்விதல் கவனம் வேண்டும் என்றும் அதிநவீன உபகரணங்கள் / அமைப்புகள் / தளங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பிரமதர் வலியுறுத்தினார்.

இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ‘உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வோம்‘  என்ற சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும், பாதுகாப்பு சாதனங்களை வடிவமைத்தல், தயாரித்தல், உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கு உள்நாட்டிலேயே உரிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் செயல்படவேண்டும் என அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்முயற்சிகள் தேவை என பிரதமர் வலியுறுத்தினார். உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தித் தர இணைப்பில் இடம்பெறுவதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான சூழலை உருவாக்குவதற்கும் இந்தியாவுக்கான அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கவும் முன்முயற்சி எடுக்க பிரதமர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர், மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.


(Release ID: 1619965)