பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-ன் தாக்கத்தைச் சமாளிக்க, பழங்குடியினர் நலன்களைப் பாதுகாக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு சம்மேளனம் கடிதம்

Posted On: 03 APR 2020 1:14PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், பழங்குடியினர் நலனையும், மூங்கில் அல்லாத வன உற்பத்திப் பொருள்களையும் பாதிக்காமல் தடுக்கவேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள், அனைத்து மாநிலங்களின் இணைப்பு முகமைகள் ஆகியவற்றிற்கு, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு சம்மேளனம் (The Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) கடிதம் எழுதியுள்ளது. கொவிட்-19 தொற்றினால், உலகம் முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது என TRIFED மேலாண்மை இயக்குநர் திரு.பிரவிர் கிருஷ்ணா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். அனைத்து தொழில், வர்த்தகப் பிரிவினர், சமுதாயத்தின் அனைத்து பிரிவினர் உள்பட ஏறக்குறைய, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல மண்டலங்களில், மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள்களுக்கு (Non-timber forest products - NTFP) உச்ச பருவமான இந்த நிலையில், பழங்குடியினரும் பாதிப்புக்கு விலக்கு அல்ல. 

இச்சூழலில், அனைவரையும் குறிப்பாக பழங்குடியினரைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான அளவுக்கு இல்லாமல், சில குறிப்பிட்ட இடங்களில் மாநிலங்கள் தகவல்களைப் பரப்பியுள்ளன. மூங்கில் அல்லாத வன உற்பத்திப் பொருள்கள் விளையும் இடங்களைப் பட்டியலில் சேர்க்க மாநிலங்கள் விரும்பலாம். இந்த இடங்களை மனிதர்கள் எட்டக்கூடியவை என்று கூடிய விரைவில் உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இணைப்பு முகமைகளை  TRIFED கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தலின் போது மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள்கள் தொடர்பாக செய்ய வேண்டியவை,  செய்யக்கூடாதவை:

  • நேர்மையற்ற  சந்தை சக்திகள் பழங்குடியினரை ஏமாற்றி மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள்களை மிகவும் குறைவான விலைக்கு விற்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ள முயற்சிக்கலாம். எனவே, குறிப்பாக, மிகுந்த பாதிப்பு ஏற்படுவதற்கு இலக்கான பகுதிகளில், சிறு வன உற்பத்தித் திட்டத்தை அதிக ஆற்றலுடன் அமல்படுத்துவது அவசியம்.
  • மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள் சேகரிப்பாளர்கள் தங்கள் வேலையின் போது சுகாதாரத்தைப் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். பொருள்களைச் சேகரிப்பதற்கு முன்பும், பின்பும் தங்கள் கைகளைக் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த  வேண்டும்.
  •  வன் தன் விகாஸ் மையங்கள் உள்பட மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள் தொடக்க முறைப்படுத்தல் மையங்களின் நுழைவாயிலில், கை கழுவும் கிருமி நாசினிகள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும். மையத்துக்கு வந்து பணியைத் தொடங்கும் முன்பு ஒவ்வொருவரும் தங்கள் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பதப்படுத்தும் மையங்களில் பணியாற்றுபவர்கள் கும்பலாக அமரக்கூடாது. ஒவ்வொருக்கும் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி அவசியம். மையங்களில் இடப்பற்றாக்குறை நிலவினால், அவர்களுக்கு, பணி நேரங்களில் மாற்றம் அளித்தோ அல்லது தூய்மையான சூழலில் வீட்டில் இருந்தவாறோ பணியாற்றச் சொல்லலாம்.
  • எவருக்காவது எந்த வகையிலாவது சளி அல்லது இருமல் இருந்தால், அவர்களை மையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. சேகரிப்போர் மற்றும் பதப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர், சளி, இருமல் உள்ளவர்களிடம் இருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • சேகரிப்போரில் யாருக்காவது (அல்லது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு) கொவிட்-19 தொற்று அறிகுறி லேசாகத் தென்பட்டாலும், அவர்களை சோதனைக்கு உட்படுத்துவதுடன், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தவேண்டும்.
  • மூங்கில் அல்லாத பிற வன உற்பத்திப் பொருள்களைப் பார்சல் செய்யும் பொருள்கள் சுத்தமானதாகவும், சேதம் இல்லாததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான், இதைக் கையாளுபவர்கள் உற்பத்திப் பொருள்களைத் தொடாமல் இருக்க முடியும்.
  • இயன்றவரை, பணப்பரிவர்த்தனையைக் குறைத்துக் கொண்டு, தொகையை சேகரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த வேண்டும். ரூபே போன்ற அரசு தளங்களின் மூலம், சேகரிப்பாளர்கள் ரொக்கமில்லாத பணப் பரிவர்த்தனை முறையைக் கடைப்பிடிக்குமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 

*****



(Release ID: 1610681) Visitor Counter : 175