பிரதமர் அலுவலகம்

நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 03 APR 2020 9:22AM by PIB Chennai

எனதருமை சக குடிமக்களே,

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நாடுதழுவிய முடக்கநிலை அமலில் இன்று 9வது நாளை எட்டியிருக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் காட்டிய ஒழுங்கும், உத்வேகமும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளன, அவற்றின் உண்மையான அர்த்தத்தை வெளிக்காட்டுபவையாக உள்ளன.

முடிந்த வரையில் இந்தச் சூழ்நிலையை சிறப்பாகக் கையாள்வதில் அரசும், நிர்வாகமும், பெருமளவில் மக்களும் ஒன்றுபட்டு மகத்தான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் முன்களத்தில் நிற்பவர்களுக்கு மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை நீங்கள் நன்றி தெரிவித்த விதம், இன்று எல்லா நாடுகளுக்கும் ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது. பல நாடுகள் இப்போது அதே போல செய்யத் தொடங்கியுள்ளன.

மக்கள் ஊரடங்காக இருந்தாலும், மணிகள் ஒலிப்பதாக இருந்தாலும், கைகள் தட்டுவதாகவோ அல்லது தட்டுகளை தட்டுவதாகவோ இருந்தாலும், சோதனையான காலக்கட்டங்களில் நாட்டின் ஒட்டுமொத்த வலிமையையும் பறைசாற்றும் வகையில் அவை அமைந்திருந்தன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாடு ஒன்றுபட்டு நிற்கும் என்ற நம்பிக்கையை பலப்படுத்துவதாக அவை இருந்தன. உங்களுடைய இந்த தேசத்தின் கூட்டு செயல்பாடுகள் முடக்கநிலை அமல் காலத்தில் மேலும் சிறப்பாக இருப்பதைக் காண முடிகிறது.

நண்பர்களே, இன்றைக்கு, இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலையில், அவர்கள் வீடுகளில் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுவது யாருக்கும் இயல்பானதுதான். இதுபோன்ற ஒரு பெரிய போராட்டத்தை தாங்களாக எப்படி எதிர்கொள்ள முடியும் என்று சிலருக்குக் கவலையாக இருக்கலாம். இதுபோல இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டுமோ என்ற கவலையும் பலருக்கும் உள்ளது.

நண்பர்களே, இது நிச்சயமாக முடக்கநிலைக்கான காலம். பெரும்பாலும் நாம் நிச்சயமாக வீடுகளிலேயே இருக்க வேண்டிய காலம். ஆனால் நாம் யாரும் தனிமையில் இல்லை. 130 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதுதான் நம் ஒவ்வொருவரின் பலமாக உள்ளது. இந்த கூட்டு வலிமையின் மகத்துவம், மிடுக்கு, தூய்மை நிலை ஆகியவற்றை அவ்வப்போது உணர்வதற்கான காலமாக இது இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

நண்பர்களே, நமது நாட்டில் குடிமக்கள் தான் இறைவனைப் போல கருதப்படுகிறார்கள். எனவே, இதுபோன்ற பெரிய போராட்டத்தை நாடு எதிர்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற கூட்டு வலிமை மக்களிடம் அவ்வப்போது பல மடங்கு பெருகிட வேண்டும். இந்த அனுபவம் நமது தார்மிக நம்பிக்கையை அதிகரிக்கும், நல்ல வழி காட்டுதலும், தெளிவும் கிடைக்கும், பொதுவான இலக்கு எதுவெனத் தெரியும், அதை அடைவதற்கான சக்தி கிடைக்கும்.

நண்பர்களே, கொரோனா நோய்த் தொற்றால் இருள் பரவியுள்ள நிலையில், ஒளி மற்றும் நம்பிக்கையை நோக்கி நாம் தொடர்ந்து முன்னேறிட வேண்டும். நம்மில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை, ஏழை சகோதர சகோதரிகளை, ஏமாற்ற சூழ்நிலையில் இருந்து நம்பிக்கையான சூழ்நிலைக்குக் கொண்டு வருவதற்கு நாம் தொடர்ச்சியாக பாடுபட வேண்டும். இந்த நெருக்கடியால் உருவாகியுள்ள இருளுக்கும், நிச்சயமற்ற நிலைக்கும் முடிவு கட்ட வேண்டும். ஒளி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறுவதன் மூலம் இதைச் செய்ய முடியும். நான்கு திசைகளிலும் ஒளியின் ஐஸ்வர்யத்தைப் பரவச் செய்வதன் மூலம் இந்த தீவிர இருளை நாம் வென்றாக வேண்டும்.

அதனால் தான் வருகிற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 5 ஆம் தேதி, நாம் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா நெருக்கடியால் உருவாகியுள்ள இருளை முறியடிக்க வெளிச்சத்தின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 5 ஆம் தேதி 130 கோடி இந்தியர்களின் மகாசக்தியை நாம் மீண்டும் தட்டி எழுப்ப வேண்டும். 130 கோடி இந்தியர்களின் உறுதியை இன்னும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஏப்ரல் 5 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் அனைவரும் இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களை எனக்காக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கவனமாகக் கேளுங்கள். ஏப்ரல் 5 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு, உங்கள் வீடுகளில் உள்ள எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, வீட்டுக் கதவுகள் அருகே அல்லது பால்கனிகளில் நின்று, மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு ஏற்றுங்கள், டார்ச்கள் அல்லது செல்போன் பிளாஷ்லைட்களை 9 நிமிட நேரம் ஒளிரச் செய்யுங்கள். மீண்டும் சொல்கிறேன். மெழுகுவர்த்தி அல்லது அகல்விளக்கு, டார்ச்கள் அல்லது செல்போன் பிளாஷ்லைட்கள், ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிட நேரம் ஒளிரட்டும்.

அந்த சமயத்தில் உங்கள் வீடுகளில் எல்லா மின்விளக்குகளையும் நீங்கள் அணைத்து வைத்து, நம்மில் ஒவ்வொருவரும் எல்லா திசைகளிலும் ஒரு விளக்கை ஏற்றும்போது, ஒளியின் மகத்தான சக்தியை நாம் அறிவோம், நாம் எதிர்த்துப் போராடும் பொதுவான இலக்கு குறித்த தெளிவான வெளிச்சத்தை வெளிப்படுத்துவதாக அது இருக்கும். அந்த வெளிச்சத்தில், அந்தப் பிரகாசத்தில், அந்த மிளிர்வில், நாம் யாரும் தனியாக இல்லை, பொதுவான ஓர் உறுதிப்பாட்டில் 130 கோடி இந்தியர்கள் உறுதி கொண்டிருக்கிறோம் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே, இதுதொடர்பாக நான் இன்னொரு கோரிக்கையும் வைத்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது யாரும் வெளியில் ஒன்று கூடவோ அல்லது கூட்டமாக சேரவோ கூடாது என்பதே அந்தக் கோரிக்கை. தயவுசெய்து சாலைகளுக்கு, தெருக்களுக்கு அல்லது உங்கள் பகுதிகளுக்கு வெளியில் செல்லாதீர்கள். உங்களுடைய வீடுகளின் கதவு அருகில் அல்லது பால்கனிகளில் நின்று இதைச் செய்யுங்கள். சமூக இடைவெளி என்ற `லட்சுமணன் கோட்டை' யாரும் ஒருபோதும் தாண்டிவிடக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் சமூக இடைவெளி விதி மீறப்படக் கூடாது. கொரோனா வைரஸ் பரவும் சங்கிலித் தொடர் பிணைப்பை உடைப்பதற்கான ஒரே தீர்வு சமூக இடைவெளிதான்.

எனவே ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி. சிறிதுநேரம் தனிமையில் அமைதியாக அமர்ந்து நமது பாரதம் குறித்த பழை நினைவுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். 130 கோடி மக்களின் முகங்களை நினைத்துப் பாருங்கள். கூட்டுத் தீர்மானத்தை, 130 கோடி இந்தியர்களின் கூட்டு மகா சக்தியை அனுபவித்திடுங்கள். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் போராடும் வலிமையையும், வெற்றிக்கான நம்பிக்கையையும் தருவதாக இது இருக்கும்.

இங்கே இப்படி சொல்லப்பட்டிருக்கிறது: -

Utsaho Balwaan Arya,

Na Asti Utsaah Param Balam |

Sah Utsahasaya Lokeshu,

Na Kinchit Api Durlabham ||”

நமது எண்ணங்கள், உத்வேகம் ஆகியவற்றைக் காட்டிலும் மகத்தான சக்தி எதுவும் இந்த உலகில் கிடையாது என்பது இதன் அர்த்தம். இந்த வலிமையால் வெல்ல முடியாத விஷயம் எதுவும் இந்த உலகத்தில் கிடையாது. வாருங்கள், நாம் எல்லோரும் ஒன்று சேருவோம், இந்தக் கொரோனா வைரஸ் தாக்குதலை எல்லோரும் சேர்ந்து முறியடிப்போம், இந்தியாவை வெற்றிகரமான நாடாக ஆக்குவோம்.

மிக்க நன்றி!

 

*****
 



(Release ID: 1610576) Visitor Counter : 352