குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கை குறித்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுடன் குடியரசு துணைத்தலைவர் கலந்துரையாடல்

பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, சிவில் சமூக அமைப்புகளை ஊக்குவித்து, அரசுடன் இணைந்து பணியாற்ற தனியார்துறைக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தல்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல் குடிமகன்கள் என்ற முறையில், நெருக்கடியான இத்தருணத்தில் உங்கள் தலைமை மிகவும் முக்கியம்- ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களிடம் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
தொற்றுப் பரவலைத் தடுக்க சமூக விலகல் முக்கியமானதாகும்
அரசுகள் விதித்துள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடக்குமாறு அனைத்து பொதுமக்களுக்கும் குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்

நூல்களைப் படியுங்கள், தியானம் & யோகா செய்யுங்கள், மூத்தோர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்-மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுரை

கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மத, ஆன்மிகத் தலைவர்கள், திரைப்பட, விளையாட்டுத்துறை பிரமுகர்களை ஈடுபடுத்துங்கள்.

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் வாய்ப்புகளைக் கண்டறிய ஆளுநர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்.

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2020 2:33PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு, கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, சிவில் சமூக அமைப்புகளை ஊக்குவித்து, அரசுடன் இணைந்து பணியாற்ற தனியார்துறைக்கு வழிகாட்ட வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளை இன்று கேட்டுக் கொண்டார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அழைத்திருந்த காணொளி மூலமான உரையாடலின் போது, மாநிலங்களின் முதற் குடிமக்களாகிய அவர்களுக்கு, தேசிய அளவிலான இந்த நெருக்கடியான சூழலில், தத்தம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உற்சாகமூட்டி, வழிகாட்டும் தனித்துவமான முக்கிய பொறுப்பு உள்ளதாக குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

‘’உங்களது தலைமை முக்கியமானது, உங்கள் வழிகாட்டுதலும், உற்சாகமூட்டும் திறனும் மிகவும் மதிப்புமிக்கது’’ என்று அவர் கூறினார்.

தற்போதைய அவசரத் தேவையாக, கொவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்க, இடங்களை ஒதுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், பிற கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள் போன்ற புதிய பங்குதாரர்களை ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று திரு.நாயுடு கூறினார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், ஆளுநர்கள் அவற்றின் கல்வி ஆண்டின் அட்டவணையில் மாற்றம் இல்லாதவாறு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்று திரு. நாயுடு விருப்பம் தெரிவித்தார்.

கொவிட்-19 நோயாளிகளுக்கு என சில படுக்கைகளை தனியார் மருத்துவமனைகள் ஒதுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். ஏழைகள், மூத்தகுடிமக்கள், நோய் பாதித்தவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறு செஞ்சிலுவை சங்கம் போன்ற சிவில் சமூக அமைப்புகளை அவர் வலியுறுத்தினார்.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியா ஒரே அணி (Team India) என்ற எழுச்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொற்று பரவுவதை முறியடிக்க சமூக விலகல் அவசியம் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், ‘’நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், கொரோனோ உள்ளே வந்து விடும்’’ என்று கூறி, மக்கள் வீட்டில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் உணர்த்தியதை ஆளுநர்களுக்கு நினைவுபடுத்தினார்.

கொவிட்-19ஐ முறியடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, மத, ஆன்மிகத் தலைவர்கள், திரைப்பட, விளையாட்டுத்துறை பிரபலங்கள், பல்வேறு மொழிகளில் புலமை பெற்ற இலக்கியவாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரமுகர்களை இது குறித்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். 

உள்கட்டமைப்பையும், வள ஆதாரங்களையும் கொண்டுள்ள தனியார் துறை, அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதில் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும் திரு. நாயுடு கேட்டுக்கொண்டார்.

முக்கியமான சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் மிகத்திறமையாக செயல்பட்டுள்ளதாகப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், மக்களுக்கு ஆதிகாரப்பூர்வமான தகவல்களைத் தருவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்கள் மீது, பொது முடக்கம் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நடவடிக்கை சலுகைகளைப் பாராட்டினார்.

அனைத்துப் பகுதிகளிலும், பால், பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பண்ணைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அரசுகள் விதித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை அனைத்து குடிமக்களும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நூல்களைப் படித்தல், தியானம்,  யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுதல், குடும்பத்தில் உள்ள மூத்தோர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுதல் போன்ற மனதை வளப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரத்தைக் கழிக்குமாறு அவர் அறிவுரை கூறினார்.
 
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப், பீகார், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர்கள், தில்லி துணைநிலை ஆளுநர், சண்டிகர் நிர்வாகி மற்றும் பலர் இந்தக் காணொளியில் கலந்து கொண்டனர்.  


(வெளியீட்டு அடையாள எண்: 1608612) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam