வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மின்னணு வணிகம் (இ-காமர்ஸ்) மற்றும் ஏற்பாட்டியல் தொழில் துறையினருடன் திரு. பியூஷ் கோயல் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல்; அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு மிகவும் எளிய முறையில், பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தகவல்

Posted On: 27 MAR 2020 12:28PM by PIB Chennai

ரயில்வே மற்றும் தொழில் வணிகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இ-காமர்ஸ் மற்றும் ஏற்பாட்டியல் தொழில் துறையினருடன் காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் வியாழக்கிழமை கலந்துரையாடினார். கோவிட் - 19 முடக்கநிலை அமலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அப்போது பேசப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு மிகவும் வசதியான முறையில், மிகவும் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று அப்போது அமைச்சர் உறுதியளித்தார்.

பின்வரும் மின்னணு வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்:  ஸ்னாப்டீல்ஸ், ஷாப்க்ளூஸ், ஃப்ளிப்கார்ட், க்ரோஃபர்ஸ், நெட்மெட்ஸ், பார்ம்ஈஸி, 1எம்ஜி டெக், உடான், அமேசான் இந்தியா, பிக் பாஸ்கெட், சொமெடோ. பெரிய அளவிலான சில்லரை விற்பனை நிறுவனங்கள் தரப்பில் மெட்ரோ கேஷ் & கேரி, வால்மார்ட், ஆர்பிஜி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஏற்பாட்டியியல் நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்பிரஸ் இண்டஸ்ட்ரி கவுன்சில், டெலிஹிவெரி, சேஃபெஎக்ஸ்ப்ரஸ், பேடிஎம் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்யும் சங்கிலித் தொடர் இணைப்புகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கும், பல்வேறு வசதிகள் இயல்பான நிலையில் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுடன், தொழிற்சாலை, உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. டி.பி.ஐ.ஐ.டி. சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கலில் பல்வேறு அம்சங்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்கான தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சரக்குகள் எடுத்துச் செல்வதன் தற்போதைய நிலை, வழங்கல், உற்பத்தி நிலை, சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கச் செய்தல், முடக்கநிலை காலத்தில், இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனுக்குடன் மேற்பார்வை செய்து நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றிற்காக கட்டுப்பாட்டு அறைகளை இந்தத் துறை உருவாக்கியுள்ளது.

முடக்கநிலை காலத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு செயல்பாடுகளைப் பூர்த்தி செய்தல், பதில்கள் தாக்கல் செய்தல், கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவற்றுக்கான கெடு தேதிகளை இந்திய காப்புரிமை அலுவலகம் நீட்டித்துள்ளது. காப்புரிமை, வடிவமைப்பு உரிமை, டிரேட் மார்க் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தேதிகள் முடக்கநிலை காலத்திற்குள் அமைந்திருக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.



(Release ID: 1608519) Visitor Counter : 241