பிரதமர் அலுவலகம்

மும்பையில் பலவகை வளர்ச்சித் திட்டங்களை செப்டம்பர் 07, 2019 அன்று தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரை

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2019 7:13PM by PIB Chennai

எனதருமை சகோதர, சகோதரிகளே,

மும்பை நகர மக்களே வாழ்த்துக்கள்,

இங்கு நான் வருவதற்கு முன் லோகமானிய சேவா சங்கத்தில் உள்ள கணபதியின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பை நான் பெற்றேன்.  இது லோகமானிய சேவா சங்கத்தின் கணேச உற்சவ நூற்றாண்டு.  சமூகத்தை வலுப்படுத்த லோகமானியத் திலகரால் பரப்பப்பட்ட இந்த மரபு  இன்று நாடுமுழுவதும், உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. 

புதிய ஆளுநர் திரு கோஷ்யாரி அவர்களும், இங்கே உள்ளார்.  இவர் ஒரு காலத்தில் உத்ரகாண்டின் மக்கள் முதலமைச்சராக இருந்த உண்மையை இங்குள்ள வெகு சிலர் அறிந்திருப்பார்கள்.  இதைவிட முக்கியமாக ஒரு விஷயத்தைக் கூறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.  பாரதிய ஜனதாக் கட்சிக்கு நான் பணியாற்றியபோது, உத்ரகாண்டில் பணியாற்ற அனுப்பப்பட்டேன்.  அப்போது இவரது வழிகாட்டுதலில்தான் நான் பணியாற்றினேன். 

சகோதர, சகோதரிகளே,

கணேச உற்சவ உணர்வுடன் இடையறாத முயற்சியால் ஏற்பட்ட சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் இன்று மகாராஷ்டிராவில் தொடங்கப்படுகின்றன. 

மும்பையைத் தொடர்ந்து, நான் அவுரங்காபாத் செல்ல திட்டமிட்டுள்ளேன்.  அங்கேயும் பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. மும்பையிலும், அதைச்  சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  20  ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதல் மதிப்புள்ள பணிகள் இன்று தொடங்குகின்றன.  இவை புதிய மெட்ரோ தடமாக, மெட்ரோ கட்டிடமாக, மெட்ரோ நிலைய விரிவாக்கமாக, கிழக்குப் பகுதி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையுடன் பந்த்ரா-குர்லா வளாக இணைப்புத் திட்டமாக இருக்கலாம்.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் மும்பையின் அடிப்படைக் கட்டமைப்புக்குப் புதிய பரிமாணத்தைத் தருவது மட்டுமின்றி, இங்குள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் உதவும். 

சகோதர, சகோதரிகளே,

கடந்த ஐந்தாண்டுகளில் மும்பை மெட்ரோ விரிவாக்கப்பணிகளுடன் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.  மெட்ரோ வலைப்பின்னல் பணி ரூ.1.5 லட்சம் கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது.  தற்போது 11 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே மும்பை மெட்ரோ திட்டம் உள்ளது.  ஆனால், 1920, 1923, 1924-க்குள் இது 325 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.  இதன் மிகப்பெரிய பயன் என்பது இன்று மும்பை உள்ளூர் ரயில் வண்டிகளில் தினமும் எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்ய முடிவதாக இருக்கும்.  உள்ளூர் ரயில் சேவையை நவீனப்படுத்துவதோடு, மெட்ரோ விரிவாக்கமும் இணையும் போது மும்பையில் தற்போதைய தேவைகளை நிறைவு செய்வதோடு எதிர்காலத்திற்கும் தயார்படுத்துவதாக இருக்கும்.

நண்பர்களே,

நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் திட்டம் 30-35 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.  அதன் பிறகு 2014 வரை ஒருசில பெரிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.  இன்று 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அல்லது விரைவில் தொடங்கப்படவுள்ளது.  தற்போது நாடுமுழுவதும் 675 கிலோமீட்டர் தூரப் பாதை செயல்பாட்டில் உள்ளது.  இதில் 400 கிலோமீட்டர் தூரத்திற்கான மெட்ரோ சேவை கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்டது.  கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! மெட்ரோ சேவையில் பாதியளவுக்கும் அதிகமாக வெறும் ஐந்தாண்டுகளில் இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் 850 கிலோமீட்டருக்கும் அதிகமான மெட்ரோ ரயில்பாதை  தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. 

சகோதர, சகோதரிகளே,

கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய மெட்ரோ பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மும்பை, புனே, நாக்பூர் ஆகிய இடங்களில் இந்தக் காலகட்டத்தில் மெட்ரோப் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டங்களின் அதிவேகப் பணிகளுக்காக பட்னவிஸை நான் பாராட்டுகிறேன். 

நண்பர்களே,

கணேஷின் சிலைகளை நீரில் கரைக்கும் போது ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்கள் கடலுக்குச் செல்கின்றன.  நீர் மாசினை அதிகரிக்கும் இத்தகைய பொருட்கள் தண்ணீரில் வீசப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் முயற்சி செய்துள்ளோம்.  மேலும், சிலைகள் கரைக்கப்பட்ட பின் கடலில் மட்டுமின்றி மற்ற நதிகள் மற்றும் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் இல்லாமல் செய்வதற்குத் தனிப்பட்ட முறையில் செயல்படுகிறோம்.  இதனை நீங்களும் செய்வீர்களா?  உங்களிடம் இருந்து இதற்கான குரலை நான் கேட்க விரும்புகிறேன்.  செய்வீர்களா?  நிச்சயமாக? உங்களின் இத்தகைய ஆர்வம் ஒட்டுமொத்த தேசத்தை பிளாஸ்டிக் இல்லாமல் செய்வதில் பெரும் பங்களிப்பு செய்யும் எனறு நான் உறுதியாக நம்புகிறேன்.

அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

****************


(வெளியீட்டு அடையாள எண்: 1587209) வருகையாளர் எண்ணிக்கை : 191
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , Gujarati , Bengali , Kannada , English , Marathi , हिन्दी , Punjabi