பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தியாவின் அடுத்தகட்ட எழுச்சிக்கான வலுவான அறைகூவலை பிரதமர் விடுத்தார்

प्रविष्टि तिथि: 15 AUG 2026 12:51PM by PIB Chennai

செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய அறைகூவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்தார்.

பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவிற்கான சீர்திருத்தங்கள் என்பது ஒரு கட்டாயமோ அல்லது வெறும் வார்த்தைகளோ அல்ல, மாறாக அது ஒரு உறுதியான நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று கூறினார். அரசு, சமூகம், தொழில்துறை, உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்களின் பாரம்பரிய அமைப்புமுறைகள், சிந்தனைகள், இலக்குகளை சீர்திருத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவும், நாட்டிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கவும், வலிமையின் ஏழு தூண்கள் என்ற  கருத்தாக்கத்தை பிரதமர் முன்வைத்தார். அவர் குறிப்பிட்ட ஏழு தூண்கள்:

உற்பத்தியின் ஆற்றல்

வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

விரைவுசக்தி

பாதுகாப்புக் சக்தி

பசுமை மற்றும் கடல்சார் பொருளாதாரங்கள்

இந்தியாவின் மென்சக்தி

உலகலாவிய சந்தைகளில் இந்தியத் தயாரிப்புகளின் அடையாளமாக நம்பகத்தன்மையையும் தரத்தையும் நிலைநிறுத்துமாறு உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்,  குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். போதைப்பொருள் பயன்பாட்டை இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரும் சவாலாகக் குறிப்பிட்ட பிரதமர், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒரு கூட்டுப் பொறுப்பாக அமைய வேண்டும் என்று கூறினார்.

மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் குறிப்பிட்ட அவர், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதப் பிரதிநிதித்துவம் கிடைப்பதையும், இந்தியாவின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்வதையும் அரசியல் கட்சிகள் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகைக்  கணக்கெடுப்பில் தங்கள் குடும்பத்தினர் பங்கேற்பதற்கு உதவுவதில் முன்னின்று செயல்படுமாறு இளைஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். அடிமை மனப்பான்மையை ஒழிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு குடிமக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், சுயநலத்தை விட நாட்டின் நலனே மேலானது என்றும், கடமையுணர்வே நமது அடையாளமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கனவுகளைத் தீர்மானமாகவும், தீர்மானத்தை ஆற்றலாகவும், ஆற்றலை வெற்றியாகவும் மாற்றி, ஒவ்வொரு செயலையும் வளர்ச்சியை நோக்கிய முயற்சியாக மாற்றி, ஒன்றிணைந்து முன்னேறி, கூட்டாக ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் குடிமக்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299798&reg=3&lang=1

****

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2299988) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Bengali , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati