பிரதமர் அலுவலகம்
இந்தியப் பிரதமரின் இந்தோனேஷிய அரசுமுறைப் பயணத்தையொட்டி இந்தியா-இந்தோனேஷியா கூட்டறிக்கை
प्रविष्टि तिथि:
07 JUL 2026 5:15PM by PIB Chennai
இந்தோனேஷியக் குடியரசின் அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோ அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, 2025 ஜனவரி 23 முதல் 26 வரை அதிபர் பிரபோவோ இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இந்தப் பயணம், இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்தப் பயணத்தின் போது, ஜகார்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேக்காவில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிபர் பிரபோவோ, பிரதமர் மோடி இடையே தனிப்பட்ட முறையிலும், தூதுக்குழு அளவிலும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் அதிபர் பிரபோவோ விருந்தளித்தார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார். யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோயில் வளாகத்தில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைப் பிரதமர் மோடியும் அதிபர் பிரபோவோவும் தொடங்கி வைத்தனர். பிரதமரை கௌரவிக்கும் வகையில் இந்தோனேசியாவில் உள்ள இந்திய சமூகம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியும் அதிபர் பிரபோவோவும் 2026 ஜூலை 7 அன்று ஜகார்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேக்காவில் அதிகாரப்பூர்வமாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், அரசியல் ஈடுபாடு, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி, முக்கிய கனிமங்கள், எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், மருந்துத் துறை, கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, இளைஞர் பரிமாற்றங்கள், மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட அம்சங்களும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுப்போக்குகளும் விவாதிக்கப்பட்டன. இந்தியா-இந்தோனேஷியா இடையே உத்தி சார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல இருதரப்பு ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் பரிமாறப்பட்டன.
இந்தியாவும் இந்தோனேஷியாவும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்ட கடல்சார் அண்டை நாடுகள் என்பதை அங்கீகரித்தும், 2018-ல் "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பு குறித்த இந்தியா-இந்தோனேஷியாவின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை" ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தும், இரு தலைவர்களும் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் தங்களின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை விரிவாகவும் நீடித்த முறையிலும், சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும் எதிர்த்துப் போராட தீர்க்கமான,ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்தச் சூழலில், உலக அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1267 தடைக் குழுவில் பட்டியலிடப்பட்டவை உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இந்தோனேஷிய வங்கிக்கும் இடையேயான உள்ளூர் நாணயப் பரிவர்த்தனை குறித்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் ஊக்குவித்து, இரு பொருளாதாரங்களுக்கு இடையேயான நிதி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இரு உள்நாட்டுக் கொள்கைகளை மதித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்காக, உணவு மற்றும் விவசாய வர்த்தகம், கூட்டு ஆய்வுகள், புத்தாக்கம் மற்றும் அறிவுப் பகிர்வு உள்ளிட்டவற்றின் மூலம் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர். விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதையும், கடல் மற்றும் மீன்வள ஒத்துழைப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படுவதையும் தலைவர்கள் எதிர்பார்த்தனர்.
இந்தப் பயணத்தின் போது தமக்கும் தமது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்குத் தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். நட்புறவு மிக்க இந்தோனேஷிய மக்களின் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வாழ்த்திய பிரதமர் மோடி, இரு தரப்பினருக்கும் வசதியான நேரத்தில் இந்தியாவிற்கு வருகை தருமாறு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282084®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2282234)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada