பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு படுகொலை தினத்தன்று ஜனநாயக பாதுகாவலர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் நமது ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்தியுள்ளது

Posted On: 25 JUN 2025 9:32AM by PIB Chennai

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், சாமானிய மக்கள், சிறையில் அடைக்கப்பட்ட தினமான ஜூன் 25, அரசியல் சட்ட படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

நமது அரசியலமைப்பு கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் கற்றல் அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், இது நமது ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்தியது என்றார்.

1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களை நினைவில் வைத்துள்ளவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களின் பாதிப்புகளை அறிந்தவர்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுமாறு திரு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக அவர் பதிவிட்டிருப்பதாவது:

“அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றில் 50 ஆண்டுகளை இந்த நாள் குறிக்கிறது. இந்திய மக்கள் இந்த தினத்தை அரசியல் சட்ட படுகொலை தினம் என குறிப்பிடுகிறார்கள். இந்நாளில் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்த மாண்புகள் கைவிடப்பட்டன, அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, பல அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சாமானிய மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருந்த அந்த காலகட்டம் ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டதாக இருந்தது.”

“நமது அரசியல் சட்ட உணர்வு மதிக்கப்படாத நிலையை, நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டதை, நீதிமன்றங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியை இந்தியர் எவரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு 42-வது திருத்தம் முதன்மையான உதாரணமாகும். ஏழை எளிய, விளிம்புநிலை மக்கள் குறி வைக்கப்பட்டதோடு அவர்களின் கௌரவமும் பாதிக்கப்பட்டது.  #SamvidhanHatyaDiwas”

“நமது அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் நாம் வலியுறுத்துவோம். நமது வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடைவோம். ஏழை எளிய மக்களின் கனவுகளை நனவாக்குவோம். #SamvidhanHatyaDiwas”

“அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது நான் ஆர்எஸ்எஸ்-ல் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் எனக்கு ஓர் அனுபவ பாடமாக இருந்தது. நமது ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாக்கும் உணர்வை அது வலுப்படுத்தியது. அதே சமயம், பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களின் அனுபவங்களில் சில புத்தக வடிவில் புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் தொகுத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தாமே ஒரு வீரராக இருந்த திரு எச் டி தேவகௌடா இதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.

@BlueKraft  

@H_D_Devegowda

#SamvidhanHatyaDiwas”

“அவசரநிலை ஆண்டுகளின் போது எனது பயணத்தை ‘அவசரநிலை நாட்குறிப்புகள்’ வரிசைப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் பல நினைவுகளை அது மீண்டும் கொண்டுவருகிறது.

அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களை நினைவில் வைத்துள்ளவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களின் பாதிப்புகளை அறிந்தவர்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். #SamvidhanHatyaDiwas”

***

 

(Release ID: 2139414)

AD/TS/SMB/SG/KR


(Release ID: 2139458)