பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்


சிவானில் குடிநீர், ரயில் போக்குவரத்து, மின்சாரத் துறை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார்

கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மர்ஹவுரா தொழிற்சாலையில் கட்டமைக்கப்பட்ட நவீன ரயில் என்ஜினை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார்

ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் மாநில அளவிலான நிகழ்வுக்கு பிரதமர் தலைமை தாங்குவார்

புவனேஸ்வரில் ரூ.18,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார்

விசாகப்பட்டினத்தில் 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்குவார்

சர்வதேச யோகா தினம் 2025-ன் மையப் பொருளான “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பது தனிநபர் மற்றும் உலக நலனுக்கு இடையேயான இணக்கத்தை வலியுறுத்துகிறது

Posted On: 19 JUN 2025 5:44PM by PIB Chennai

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

இதன் பின்னர் ஒடிசாவின் புவனேஸ்வருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் பிற்பகல் 4.15 மணிக்கு ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் மாநில அளவிலான நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். ரூ.18,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் அவர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.

ஜூன் 21 அன்று ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மாலை 6.30 மணியளவில் சர்வதேச யோகா தினம் – பெருந்திரள் யோகா பயிற்சி நிகழ்வில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்வில் கூடியிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

பீகாரில் பிரதமர்

பீகாரில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் ஊக்கமளிக்க சிவானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார்.

இந்தப் பிராந்தியத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.400 கோடி மதிப்பில் புதிய வைஷாலி – தியோரியா ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர், இந்த வழித்தடத்தில் புதிய ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். வடக்கு பீகாரில் போக்குவரத்து தொடர்பை அதிகப்படுத்தும் வகையில் முசாபர்பூர், பேட்டியா வழியாக பாடலிபுத்திரம் – கோரக்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் போக்குவரத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

“மேக் இன் இந்தியா – உலகுக்கான தயாரிப்பு” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மர்ஹவுரா தொழிற்சாலையில் கட்டமைக்கப்பட்ட நவீன ரயில் என்ஜினை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது ரயில் என்ஜின் இதுவாகும். உயர் குதிரைதிறன் கொண்ட என்ஜின்கள், நவீன குளிர் சாதன உந்துவிசை அமைப்பு, நுண்ணிய நடைமுறை அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்றவற்றுடன் இந்த ரயில் வண்டி கட்டமைக்கப்பட்டுள்ளது.

கங்கை நதியை பாதுகாத்தல், புனரமைத்தல் என்ற தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

பீகாரில் பல நகரங்களைச் சேர்ந்த குடிமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு ரூ.3000 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகம், துப்புரவு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இந்தப் பிராந்தியத்தில் மின்சாரக் கட்டமைப்பை பெருமளவில் அதிகரிக்க மணிக்கு 500 மெகாவாட் திறன் கொண்ட மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். முசாபர்பூர், மோதிஹரி, பேட்டியா, சிவான் உட்பட மாநிலத்தின் 15 மின்தொகுப்பு துணை நிலையங்களில் மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணை நிலையத்திலும் நிறுவப்பட்டுள்ள மின்கலத்தின் திறன் மணிக்கு 20 முதல் 80 மெகாவாட் வரை இருக்கும். ஏற்கனவே சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை மின்தொகுப்புகளுக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் கூடுதல் செலவில் மின்சாரம் வாங்குவதை தவிர்த்து மின் விநியோக நிறுவனங்கள் குறைந்த செலவில் பயன்பாட்டாளர்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும்.

பீகாரில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 53600-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீடு கடிதத்தை பிரதமர் வழங்குகிறார்.  இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6,600-க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குகிறார்.

ஒடிசாவில் பிரதமர்

ஒடிசா மாநில அரசு பதவியேற்று ஒராண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், புவனேஸ்வரில் பிரதமர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின்  அனைத்துத் துறைகளிலும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குடிநீர் வழங்கல், பாசன வசதி, வேளாண் உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புறச் சாலைகள் மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதிய ரயில் வழித்தடம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும்.

தேசிய ரயில்வே கட்டமைப்புடன் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கும் வகையில், முதல் முறையாக புத் மாவட்டத்திற்கு ரயில்போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தும் வகையில் புதிய ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

தூய்மை எரிசக்தி, நீடித்த போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மண்டல நகர்ப்புற போக்குவரத்து அமைப்பின் கீழ், 100 மின்சார பேருந்துகளின் சேவைகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.

ஒடிசா மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த தொலைநோக்கு ஆவணத்தையும் பிரதமர் வெளியிடுகிறார். வரும் 2036-ம் ஆண்டின் சிறப்பைக் குறிக்கும் வகையிலான அறிக்கையையும்  (நாட்டின் முதலாவது மொழி வழி மாநிலமாக உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில்) 2047-ம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வை (நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் போது) வளர்ச்சியை உள்ளடக்கிய எதிர்கால இலக்குகளை மையமாகக் கொண்ட வரைவுத் திட்ட அறிக்கையையும் அவர் வெளியிடுகிறார். 

நாட்டின் வளர்ச்சிக்காக ஒடிசா மாநிலத்தின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் பாரபுத்ரா வரலாற்றுச் சிறப்புமிக்க கிராம முன்னேற்றத் திட்டத்திற்கான முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மாநிலம்  உருவான தினத்திலிருந்து வாழ்வியல் நினைவுகளை எடுத்துரைக்கும் நோக்கிலும் ஒடிசாவின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும் கலாச்சார சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும் அருங்காட்சியகம் சிலைகள், நூலகங்கள், பொது இடங்கள் மற்றும் வரலாற்று விளக்க மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஒடிசா மாநிலத்தின் தற்சார்பு நிலை மற்றும் வளத்தின் அடையாளமாக 16.50 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகள் உருவெடுத்துள்ளது மற்றும் மாநிலம் முழுவதும்  பெண் சாதனையாளர்களை போற்றும் வகையிலும் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்.

ஆந்திரப்பிரதேசத்தில் பிரதமர்

11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நாடுதழுவிய  யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.  விசாகப்பட்டினத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் 5 லட்சம் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் பங்கேற்கிறார்.  நாடு முழுவதும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் யோகா சங்கம நிகழ்ச்சிகளை  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிகள், குடும்பத்துடன் யோகா, இளைஞர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட யோகா என்ற கருத்தாக்கத்துடன் நடைபெறவுள்ளது. இந்த  மாபெரும் யோகா தின நிகழ்ச்சியில் பெருமளவிலான மக்கள் பங்கேற்கும் வகையில், மைகவ், மைபாரத் செயலிகளில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினக்கொண்டாட்டங்கள், ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட உள்ளது. நோய்களிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் என்ற இந்தியாவின் தத்துவத்தில் வேரூன்றியுள்ள விழுமியத்துடனும், உலகில் உள்ள அனைவருக்குமான நலவாழ்வு என்ற தொலைநோக்குப் பார்வையுடனும் இந்த யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் புதுதில்லி, சண்டிகர், லக்னோ, மைசூரு, நியூயார்க் (ஐநா தலைமையகம்), ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் யோகா தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச யோகா தினம் சக்திவாய்ந்த உலக அளவிலான சுகாதார இயக்கமாக உருவெடுத்துள்ளது.

***

(Release ID: 2137732)
AD/SMB/SV/RR/KPG/DL


(Release ID: 2137776)