பிரதமர் அலுவலகம்
சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
16 JUN 2025 3:15PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். 2025-ம் ஆண்டு ஏப்ரல் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்ததற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இவ்விரு நாடுகளின் வலுவான உறுதிப்பாட்டை இது சுட்டிக்காட்டுகிறது. சைப்ரஸ் நாட்டின் ஒற்றுமைக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தீர்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்நாட்டின் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, அறிவியல், ஆராய்ச்சி, கலாச்சார பரிமாற்றம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட இருதரப்பு நட்புறவின் பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இவ்விரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் நிதித் தொழில்நுட்பம், புத்தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு, புத்தாக்க கண்டுபிடிப்பு, டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செலய்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். உத்திசார் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் ஐந்து ஆண்டுகால செயல்திட்டத்தை உருவாக்க இருதலைவர்களும் ஒப்புகொண்டனர். சைபர் குற்றம், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத செயல்கள், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற விவகாரங்கள் குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் பரிமாறிக்கொள்வதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலான திட்டத்திற்கு கடந்த 2025 ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா-கிரீஸ்-சைப்ரஸ் நாடுகளிடையே வர்த்தகம், முதலீட்டு குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் வரவேற்றனர். வர்த்தகம், சுற்றுலா, அறிவுசார் நடவடிக்கைகள், புத்தாக்க கண்டுபிடிப்புகள், போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்தியா- மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை அமைப்பது என்பது இப்பிராந்தியத்தில் அமைதி, வளம், ஆகியவற்றிற்கு வலுசேர்க்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் உட்பட உலக அளவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பன்முகத்தன்மை மற்றும் சீர்திருத்தத்திற்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். சீரமைக்கப்பட்ட ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் நாடாக இடம் பெறுவதற்கு சைப்ரஸ் அளித்த ஆதரவிற்காக அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிட்ஸுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடந்து வரும் மோதல் போக்குகள் உட்பட உலக அளவில் நிலவி வரும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களைப் பரஸ்பரம் இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.
இந்தியாவிற்கு வருமாறு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிட்ஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். பிரதமரின் இந்தப் பயணத்தின் போது நிக்கோசியா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகளுக்கான இருக்கையை ஏற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியா-சைப்ரஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
***
(Release ID: 2136636)
AD/TS/SV/AG/KR
(Release ID: 2136726)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam