பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் காராக்கட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
30 MAY 2025 2:55PM by PIB Chennai
சுயமரியாதையும், கடின உழைப்பும் கொண்ட பீகாரின் சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜித்தன் ராம் மாஞ்சி அவர்களே, திரு லாலன் சிங் அவர்களே, திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு சிராக் பாஸ்வான் அவர்களே, நித்யானந்த ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரி அவர்களே, விஜயகுமார் சின்ஹா அவர்களே, இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பீகாரின் எனது அருமை சகோதர சகோதரிகளே!
இந்தப் புனித பூமியான பீகாரின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வாய்ப்பை இன்று நான் பெற்றிருக்கிறேன். ரூ.50,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருப்பதோடு நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துக் கூற இங்கு நீங்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருக்கிறீர்கள். பீகார் மக்களின் அன்பை நான் எப்போதும் பெற்றிருக்கிறேன். தாய்மார்களுக்கும் சகோரிகளுக்கும் நான் சிறப்பு மரியாதை செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அருமை சகோதர சகோதரிகளே,
பீகார் என்பது வீர் குமார் சிங்கின் பூமியாகும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தங்களின் இளமையை தேசத்தின் பாதுகாப்பிற்காக ராணுவத்திலும், எல்லைப் பாதுகாப்புப் படையிலும், தியாகம் செய்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூரில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துணிவையும், அசைக்க முடியாத வீரத்தையும் உலகம் பார்த்தது. எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள வீரம் செறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள், பாறை போல் உறுதியாக இருந்து அன்னை இந்தியாவை பாதுகாக்கிறார்கள். தாய்நாட்டிற்கு சேவை செய்யும் புனிதமான கடமையை நிறைவேற்றும் போது எல்லைப்பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் இம்தியாஸ் மே 10 அன்று எல்லையில் உயிர்த் தியாகம் செய்தார். பீகாரின் புதல்வரான அவருக்கு நான் மதிப்புமிகு அஞ்சலி செலுத்துகிறேன். இந்தியாவின் வலிமை என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூரில் எதிரிகள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இது அம்பறாத்தூணியிலிருந்து எய்யப்பட்ட ஒரு அம்புதான். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம், நிறுத்தப்படவில்லை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் இந்தியா அதனை வளையிலிருந்து வெளியே இழுத்து நசுக்கும்.
நண்பர்களே,
ஒரு காலத்தில் பாட்னாவில் ஒரே ஒரு விமான நிலையத்தை மட்டும் பீகார் பெற்றிருந்தது. இன்று தர்பங்கா விமான நிலையமும், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இப்போது இங்கிருந்து தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்களில் செல்ல முடியும். பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்பது பீகார் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இப்போது அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை பாட்னா விமான நிலைய முனையக் கட்டடத்தை தொடங்கி வைக்கும் பெருமையை நான் பெற்றேன். இந்தப் புதிய முனையம் ஒரு கோடி பயணிகளைக் கையாளும் அளவில் இருக்கும். பீக்தா விமான நிலையத்திற்கு ரூ.1,400 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
பீகார் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க எங்கள் அரசு தொடர்ந்து பாடுகிறது. பிரதமரின், விவசாயிகள் கௌரவ நிதியின் கீழ், 75 லட்சம் விவசாயிகள் நிதியுதவி பெறுகின்றனர். எங்கள் அரசு மக்கானா வாரியத்தை அறிவித்துள்ளது. பீகாரின் மக்கானாவுக்கு புவிசார் குறியீட்டை நாங்கள் வழங்கியுள்ளோம். இது மக்கானா விவசாயிகளுக்கு பெரும் பயனை தந்துள்ளது. பீகாரில் உணவுப் பதப்படுத்தலுக்கான தேசிய நிறுவனம் அமைக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2, 3 நாட்களுக்கு முன் கரீப் பருவ நெல் உட்பட 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு நல்ல விலையைப் பெறுவதோடு அவர்களின் வருவாயையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
பீகாரில், பாபா சாஹேப் அம்பேத்கர், கர்ப்பூரித் தாக்கூர், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் கனவுகளை நாங்கள் நனவாக்குவோம். வளர்ச்சியடைந்த பீகார், வளர்ச்சியடைந்த இந்தியா என்பது எங்கள் இலக்காகும். நாம் ஒருங்கிணைந்து வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்போம். உங்களின் கரங்களை உயர்த்தி முஷ்டிகளை மடக்கி என்னோடு சேர்ந்து கூறுங்கள்.
பாரத் மாதா கி ஜே
உங்கள் குரல் வெகுதூரத்தை சென்றடைய வேண்டும், எல்லையில் நிற்கும் நமது சகோதரர்கள் அதைக் கேட்டு பெருமிதம் கொள்ள வேண்டும்.
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
உங்களுக்கு மிக்க நன்றி
-----
(Release ID: 2132659)
AD/TS/SMB/KPG/KR
(Release ID: 2133246)