பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
வளர்ச்சிக்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும் சிக்கிம்@50 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நகர்ப்புற
எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் தொடங்கி வைக்கிறார்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
28 MAY 2025 10:00AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.
மே 29 - ம் தேதி, சிக்கிம் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு காலை 11 மணியளவில் "சிக்கிம்@50: வளர்ச்சிக்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும் பகுதி மற்றும் இயற்கையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இடம்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சிக்கிம் மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் உரையாற்றுகிறார்.
பின்னர், மேற்கு வங்கம் செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2:15 மணியளவில் அலிப்பூர்துவாரில் உள்ள அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதனைத்தடுத்து, பீகார் செல்லும் பிரதமர், பட்னா விமான நிலையத்தின் புதிய விமான முனையதிற்கான கட்டிடத்தை மாலை 5:45 மணியளவில் திறந்து வைக்கிறார்.
மே 30 - ம் தேதி காலை 11 மணிக்கு, பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகிறார்.
அதன்பிறகு, உத்தரபிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பிற்பகல் 2:45 மணிக்கு கான்பூரில் சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சிக்கிம் மாநிலத்தில் பிரதமர்
சிக்கிம் மாநிலமாக உருவெடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, "சிக்கிம்@50 : வளர்ச்சிக்கான நோக்கத்தை பூர்த்தி செய்து, இயற்கையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இடமாக திகழும் சிக்கிம்" என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். சிக்கிம் மாநிலத்தின் கலாச்சார செழுமை, பாரம்பரியம், இயற்கையின் மகிமை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில் "நேசம், வளமை மற்றும் வலிமையான சிக்கிம்" என்ற கருப்பொருளில், அம்மாநில அரசு ஒரு ஆண்டு காலத்திற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பணிகளையும் தொடங்கி வைக்கிறார். நம்சி மாவட்டத்தில் ரூ.750 கோடிக்கும் கூடுதல் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதி கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனை; கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள சங்கச்சோலிங்கில் பயணிகள் ரோப்வே சேவை; கோங்டாக் மாவட்டத்தில், சங்க்கோலாவில் உள்ள அடல் அம்ரித் உத்யானில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி-யின் சிலை திறப்பு உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள் இதில் அடங்கும்.
சிக்கிம் மாநிலம் உதயமாகி 50 ஆண்டு கால நினைவைப் போற்றும் வகையில் நினைவு நாணயம், மற்றும் அஞ்சல்தலை ஒன்றையும் பிரதமர் வெளியிடுகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர்
நாட்டின் நகர்ப்புற எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1010 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்த திட்டம், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேலைவாய்ப்புத் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப சுமார் 19 அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக நிலையங்களை அமைப்பது வாகனப் போக்குவரத்திற்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வசதியான, நம்பகமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவு குறைந்த எரிபொருள் விநியோகத்தை வழங்குவதுடன், அந்த பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
பீகாரில் பிரதமர்
மே 29-ம் தேதி, பட்னா விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் முனையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய முனையம், ஆண்டுக்கு 1 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ரூ. 1410 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான புதிய சிவில் என்கிளேவ் பிஹ்தா விமான நிலையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். பட்னா அருகே கல்வி மையமாக விரைவான வளர்ச்சி கண்டு வரும் அந்நகரத்திற்கு பிஹ்தா விமான நிலையம் உறுதுணையாக அமையும். பட்னாவில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி, பட்னா) மற்றும் என்ஐடி பட்னா வளாகம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 30-ம் தேதி, கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும், முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்தும் வைக்கிறார்.
இந்தப் பிராந்தியத்தில் மின்சார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, பீகார் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.29,930 கோடி செலவில் நபிநகர் அதிநவீன அனல்மின் நிலையம் அமைப்பதற்கான இரண்டாம் கட்ட செயல்திட்டத்திற்கும் (3x800 மெகாவாட் உற்பத்தித் திறன்) பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதுடன், அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அப்பகுதியில் குறைந்த விலையில் மின்சாரம் விநியோகம் செய்வதற்கும் உதவிடும்.
இந்தப் பகுதியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், இணைப்புச் சாலைகளை அமைப்பதற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், (தேசிய நெடுஞ்சாலை - 119ஏ)-ல் பட்னா-அர்ரா-சசாரம் பிரிவின் நான்கு வழிச்சாலை, வாரணாசி-ராஞ்சி-கொல்கத்தா நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை-319பி) மற்றும் ராம்நகர்-கச்சி தர்கா பாதை (தேசிய நெடுஞ்சாலை-119டி) ஆகிய பகுதிகளில் ஆறு வழிச்சாலை, பக்சர் - பராலி இடையே கங்கை ஆற்றின் மேல் புதிய மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சாலைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் அம்மாநிலத்தில் தடையற்ற அதிவேக வாகனப் போக்குவரத்துக்கானச் சாலை வசதிகளை உருவாக்குவதுடன் வர்த்தகம் மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பையும் அதிகரிக்க உதவிடும்.
தேசிய நெடுஞ்சாலை - 22 - ல் சுமார் ரூ.5,520 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பட்னா - கயா - தோபி பிரிவின் நான்கு வழிச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை - 27 - ல் உள்ள கோபால்கஞ்ச் நகரில் நான்கு வழிச் சாலையையும் பிரதமர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.
நாடு முழுவதும் ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ.1330 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சோன் நகர் - முகமது கஞ்ச் இடையேயான 3-வது ரயில் வழித்தடத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர்
உத்தர பிரதேச மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,120 கோடி மதிப்பீட்டில் சன்னிகஞ்ச் மெட்ரோ நிலையம் முதல் கான்பூர் மத்திய மெட்ரோ நிலையம் வரையிலான பகுதியில் மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். இதில் முக்கிய நகர்ப்புற அடையாளங்கள் மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் பூமிக்கடியில் ஐந்து புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன், 14 திட்டமிடப்பட்ட ரயில் நிலையங்களும் அடங்கும். கூடுதலாக, ஜி.டி. சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்தப் பகுதியில் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. கௌதம புத்தா நகரில் உள்ள யமுனா விரைவுச்சாலை, தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் பிரிவு 28 - ல் 220 கி.வாட் துணை மின்நிலையம் ஆகியவற்றிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பெருநகர நொய்டாவில் உள்ள எகோடெக் - 8 மற்றும் எகோடெக்-10 - ல் ரூ.320 கோடிக்கும் கூடுதல் செலவில் அமைக்கப்பட்டுள்ள 132 கி.வாட் துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் எரிசக்தித் திறனை மேம்படுத்தும் வகையில் கான்பூரில் ரூ.8,300 கோடி செலவில் 660 மெகா வாட் பங்கி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மின்சார விநியோகத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில், ரூ.9,330 கோடி மதிப்பீட்டில் கடம்பூர் அனல் மின் திட்டத்தின் மூன்று 660 மெகா வாட் மின் உற்பத்திக்கான அலகுகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
கான்பூரில், கல்யாண்பூர் பங்கி மந்திரில் அருகே உள்ள பங்கி சாலையில் பங்கி மின் நிலையத்தையொட்டிய ரயில்வே கிராசிங் மற்றும் பங்கி அணைக்கட்டு கிராசிங் மீது கட்டப்பட்டுள்ள ரயில் மேம்பாலங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இது பங்கி அனல் மின் நிலைய விரிவாக்க திட்டங்கள் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற சரக்குப் போக்குவரத்திற்கு உதவிடும் அதே வேளையில், உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை கணிசமான அளவில் குறைக்க உதவிடும்.
கான்பூரில் உள்ள பிங்கவானில் ரூ.290 கோடி மதிப்பில் 40 எம்எல்டி (நாளொன்றுக்கு ஒரு மில்லியன் லிட்டர்) திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இது கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தவும், நீர் பாதுகாப்பு, நீடித்த வள மேலாண்மையை ஊக்குவிக்கவும் உதவிடும்.
இந்தப் பகுதியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், கான்பூர் நகர் மாவட்டத்தில் தொழில்துறை மேம்பாட்டிற்காக கௌரியா பாலி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்; மேலும், கான்பூர் நகர் மாவட்டத்தில் பாதுகாப்பு வழித்தடத்தின் கீழ் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் உள்ள நர்வால் மோட் (ஏஎச்-1) முதல் கான்பூர் பாதுகாப்பு முனை (4 வழிச்சாலை) வரை இணைக்கும் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதன் மூலம், பாதுகாப்பு வழித்தடத்திற்கான இணைப்பை கணிசமான அளவில் மேம்படுத்துவதுடன், தளவாடங்கள் மற்றும் அணுகலை மேம்படுத்த உதவிடும்.
பிரதமரின் ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சாரத் திட்டம் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார்.
***
(Release ID: 2131864)
AD/SM/SV/KPG/RR/DL
(Release ID: 2131976)
Read this release in:
Malayalam
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada