உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஐ4சி-யின் முதலாவது அமைப்பு தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றினார்; சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்

Posted On: 10 SEP 2024 3:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (4சி) முதலாவது அமைப்பு தினக் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

சைபர் மோசடி தணிப்பு மையத்தை (சி.எஃப்.எம்.சி) நாட்டுக்கு அர்ப்பணித்த உள்துறை அமைச்சர், சமன்வே தளத்தை (கூட்டு சைபர் குற்ற விசாரணை அமைப்பு) தொடங்கி வைத்தார். 'சைபர் கமாண்டோக்கள்' திட்டத்தையும், சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டையும் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். 4சி-யின் புதிய சின்னம், தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கையும் அமைச்சர் வெளியிட்டார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், சிறப்புச் செயலாளர் (உள்நாட்டுப் பாதுகாப்பு), தலைமைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல்துறை மூத்த அதிகாரிகள், பல்வேறு அரசு அமைப்புகளின் அதிகாரிகள், பல்வேறு வங்கிகள்/நிதி நிறுவனங்கள், நிதித்தொழில்நுட்பம், ஊடகங்கள், சைபர் கமாண்டோ, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி முன்முயற்சியால் 'பாதுகாப்பான இணைய வெளி' இயக்கத்தின் கீழ் 2015-ம் ஆண்டு 4சி நிறுவப்பட்டது என்றும், அதன் பின்னர் இது இணைய பாதுகாப்புக்கு இந்தியாவின் வலுவான தூணாக மாறுவதை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் திரு அமித் ஷா தனது உரையில் குறிப்பிட்டார். 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு பயணத்தில், இந்த யோசனை ஒரு முன்முயற்சியாக மாறி, பின்னர் ஒரு நிறுவனமானது. இப்போது இது சைபர் பாதுகாப்பான இந்தியாவின் மிகப்பெரிய தூணாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது என்று அவர் கூறினார்.

அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் பல அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகிறது என்று கூறிய அவர், அதனால்தான் இணைய பாதுகாப்பு என்பது டிஜிட்டல் உலகத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது என்றார். 4சியின் நான்கு முக்கிய இணைய தளங்களும் இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். சைபர் மோசடி தடுப்பு மையம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதனுடன், சைபர் கமாண்டோ, சமன்வே தளம், சந்தேகத்திற்குரியோர் பதிவேடு ஆகியவையும் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி சைபர் சந்தேக பதிவேட்டை வைத்திருப்பது எந்த நோக்கத்திற்கும் உதவாது. ஏனெனில் மாநிலங்களுக்கு அவற்றின் சொந்த எல்லைகள் உள்ளன. ஆனால் சைபர் குற்றவாளிகளுக்கு எல்லைகள் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொதுவான தளத்தை உருவாக்க தேசிய அளவில் சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டை உருவாக்குவதும், மாநிலங்களை அதனுடன் இணைப்பதும் காலத்தின் தேவை என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி வரும் நாட்களில் சைபர் குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவும் என்று திரு ஷா கூறினார்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தையும் இன்று முதல் 4சி தொடங்க உள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். 72-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள், 190-க்கும் அதிகமான வானொலி பண்பலை அலைவரிசைகள், திரையரங்குகள் மற்றும் நாட்டில் உள்ள பல மேடைகள் மூலம் இந்தப் பிரச்சாரத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். சைபர் குற்றங்களை தவிர்ப்பது எவ்வாறு என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாவிட்டால் இந்தப் பிரச்சாரம் வெற்றிகரமாக இருக்காது என்று அவர் கூறினார். சைபர் குற்ற உதவிஎண் 1930 மற்றும் 4சியின் பிற தளங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் பயன்பாட்டை அதிகரித்து, சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் என்று திரு ஷா கூறினார். இந்தப் பிரச்சாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இணைந்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வை பரப்புமாறு உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சைபர் குற்றங்கள் குறைப்பு மையம்:  இந்த அமைப்பில் முக்கிய வங்கிகள், நிதிச்சார்ந்த நிறுவனங்கள், பணப்பட்டுவாடா ஒருங்கிணைப்பாளர்கள், தொலை தகவல் தொடர்பு சேவை வழங்குவோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சட்ட அமலாக்க முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். சட்ட அமலாக்கத்தில் கூட்டமைப்புக்கு ஓர் உதாரணமாக இந்த அமைப்பு விளங்கும்.

சைபர் கமாண்டோக்கள் திட்டம்: நாட்டின் சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எதிர்கொள்வது சைபர் கமாண்டோக்கள் திட்டமாகும். பயிற்சி பெற்ற இந்த கமாண்டோக்களின் பிரிவு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் மத்திய காவல் அமைப்புகளிலும் இடம்பெற்றிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053438

***

SMB/AG/RR



(Release ID: 2053461) Visitor Counter : 20