பிரதமர் அலுவலகம்

போலந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

Posted On: 22 AUG 2024 12:49AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி போலந்தின் வார்சாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.

இந்திய சமூகத்தினர் பிரதமருக்கு சிறப்பான வரவேற்க்கு அளித்தனர். பிரதமர் தமது உரையில், 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் போலந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இந்தியா-போலந்து உறவுகளை வலுப்படுத்த அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா, பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜனநாயகத்தில் இந்தியா, போலந்திடையே பகிரப்பட்ட மதிப்புகள் இரு நாடுகளையும் நெருக்கமாக்குகின்றன என்று அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து பிரதமர் தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். ஆபரேஷன் கங்கை திட்டத்தின் வெற்றியில் அவர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். இந்தியாவுக்கான சுற்றுலாவின் விளம்பரத் தூதராக இந்திய சமூகத்தினர் மாறி அதன் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். டோப்ரி மகாராஜா, கோலாப்பூர் மற்றும் மான்டே காசினோ நினைவிடங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகளுக்கு பிரகாசமான எடுத்துக்காட்டுகள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிறப்புப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜம்சாஹேப் நினைவு இளைஞர் பரிமாற்றத் திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது போலந்து அரசு அளித்த உதவியை அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தக்க முன்னேற்றம் குறித்து பிரதமர் பேசினார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக நாடு மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் அவர் பேசினார். புதிய தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, பசுமை வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதில் போலந்தும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கை குறித்துப் பேசிய பிரதமர், உலக நலனுக்கு பங்களிப்பு செய்வதிலும், மனிதாபிமான நெருக்கடிகளின்போது முன்னின்று செயல்படுவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார்.

***

PLM/DL



(Release ID: 2047736) Visitor Counter : 20