விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 17-வது தவணையாக சுமார் ரூ. 20,000 கோடியை 2024 ஜூன் 18 அன்று வாரணாசியில் பிரதமர் விடுவிக்கிறார்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தகவல்
Posted On:
15 JUN 2024 3:10PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஜூன் 18 அன்று வாரணாசியில் 17-வது தவணையை விடுவிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் 30,000 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு கிருஷி சகி (வேளாண் தோழிகள்) என்ற சான்றிதழ்களை பிரதமர் வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உத்தரபிரதேச அரசுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை அடைய விவசாயம் மிக முக்கியமான அடித்தளம் என்று அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விவசாயம் உள்ளது என்று திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். தற்போதும் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் விவசாயத்தின் மூலமே உருவாக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் 17வது தவணையாக ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை வாரணாசியில் இருந்து பிரதமர் விடுவிக்க இருப்பதாகவும் இதன் மூலம் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும் என்பதை அமைச்சர் குறிப்பிட்டார். இதில் பயனாளிகளைப் பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் இதுவரை நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 3.04 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் நேரலையில் இணைந்து பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார். 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.
3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும், இதில் சுமார் ஒரு கோடி லட்சாதிபதி பெண்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 2 கோடி பேர் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கிருஷி சகி எனப்படும் வேளாண் தோழிகள் அதன் ஒரு பரிமாணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கிருஷி சகி திட்டம் முதல் கட்டமாக குஜராத், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
***
AD/PLM/DL
(Release ID: 2025607)
Visitor Counter : 228
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada