பிரதமர் அலுவலகம்

பீகார் மாநிலம் பெட்டியாவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த பீகார் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

பீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.12,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்தியன் ஆயிலின் 109 கி.மீ. தூர முசாபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் எல்பிஜி நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

நகர எரிவாயு விநியோகத் திட்டங்கள் மற்றும் தானியம் சார்ந்த எத்தனால் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பெட்டியா ரயில் நிலைய மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்

நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா, ரக்சவுல் - ஜோக்பானி இடையே இரண்டு புதிய ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

"இரட்டை என்ஜின் அரசின் கீழ், பீகார் அதன் பழைய பெருமையை மீண்டும் பெறும் பாதையில் வேகமாக நகர்கிறது"

" வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த பீகார் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை எடுக்க பெட்டியா, சம்பரனை விட சிறந்த இடம் இருக்க முடியாது"

"பீகார் வளமாக இருந்த போதெ

Posted On: 06 MAR 2024 5:05PM by PIB Chennai

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ரூ.12,800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பெட்டியா மண் சுதந்திரப் போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என்றும் மக்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். "இந்த மண் மோகன் தாசை மகாத்மா காந்தியாக உருவாக்கியது" என்று குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியடைந்த பீகார், வளர்ச்சியடைந்த பாரதம் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை எடுத்துச் செல்ல பெட்டியா, சம்பரன் ஆகியவற்றை விட சிறந்த இடம் இருக்க முடியாது என்றார். வளர்ச்சியடைந்த பீகார் நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டதைப் பாராட்டிய பிரதமர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"பீகார் நிலம் பல நூற்றாண்டுகளாக நாட்டிற்கு மகத்தான தலைமையைக் காட்டியுள்ளது. தேசத்திற்காக பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது" என்று கூறிய பிரதமர், பீகாரின் செழிப்புடன் இந்தியா வளம் பெற்றுள்ளது என்றும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நிறைவேற்ற மாநிலத்தின் வளர்ச்சியும் சமமாக முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார். வளர்ச்சியடைந்த பீகார் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைக்கப்பட்டதன் மூலம் புதிய வேகத்தைக் கண்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, ரயில்வே, சாலை, எத்தனால் ஆலைகள், நகர எரிவாயு விநியோகம் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட இன்றைய திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பீகாரின் தீர்மானத்தை நிறைவேற்ற இந்த வேகத்தைப் பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பீகாரில் நிலவும் கடுமையான பிரச்சினைகளில் ஒன்றான மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் பரம்பரை அரசியல் காரணமாக மாநிலத்திலிருந்து இளைஞர்கள் வெளியேறி வருவதை பிரதமர் குறிப்பிட்டார். "பீகாரின் இரட்டை அரசின் முயற்சி பீகாரிலேயே மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகும்" என்று பிரதமர் கூறினார். இன்றைய திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகள் வேலை தேடும் இளைஞர்கள் என்று அவர் கூறினார். கங்கை நதியின் குறுக்கே பாட்னாவில் திகா – சோன்பூர் ரயில் மற்றும் சாலைப் பாலத்திற்கு இணையாக கங்கை ஆற்றின் குறுக்கே ஆறு வழி கேபிள் பாலம் தொடங்கி வைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், பீகாரில் ரூ. 22,000 கோடி ஒதுக்கீட்டில் கங்கை ஆற்றின் மீது 5 பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். "இந்த பாலங்களும், அகலமான சாலைகளும் வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன" என்று பிரதமர் கூறினார். நவீன உள்கட்டமைப்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ரயில் பாதைகளும், கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும் ரயில்களும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், இதன் மூலம் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பீகாரில் நவீன ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலைகள் தற்போதைய அரசால் தொடங்கப்பட்டவை என்று அவர் கூறினார். டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பல வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற டிஜிட்டல் வசதிகள் இல்லை என்று கூறிய பிரதமர், டிஜிட்டல் சேவைகளை விரைவாக ஏற்றுக்கொண்டதற்கு இந்திய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார். "ஒவ்வொரு அடியிலும் இந்திய இளைஞர்களுடன் நிற்பதற்கான உத்தரவாதத்தை மோடி வழங்கியுள்ளார்" என்று பிரதமர் மோடி கூறினார், "இன்று, பீகார் இளைஞர்களுக்கு இந்த உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்." மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சூரிய வீடாக மாற்ற அரசு முக்கியத்துவம் அளிப்பதை பிரதமர் எடுத்துரைத்தார், அங்கு மொட்டை மாடிகளில் சூரிய சக்தி தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு விற்க முடியும், இது குடிமக்களுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். வாரிசு அரசியலின் தீமைகள் குறித்து மக்களை எச்சரித்த பிரதமர், ஜன் நாயக் கர்பூரி தாக்கூர், ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, பாபா சாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளை நினைவு கூர்ந்தார்.

 

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இலவச ரேஷன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உறுதியான வீடுகள், கழிப்பறைகள், மின்சாரம், எரிவாயு மற்றும் குழாய் நீர் இணைப்பு, சாதனை எண்ணிக்கையில் எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குதல், விவசாயிகளை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுதல், கரும்பு மற்றும் நெல் விவசாயிகளின் உப பொருட்களைப் பயன்படுத்த எத்தனால் ஆலைகளை அமைத்தல். ஆகியவற்றைக் குறிப்பிட்டார். மற்றும் சமீபத்தில், கரும்பின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ .340 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார், நாட்டிலும் பீகாரிலும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் கட்டப்படும். விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பெட்டியாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பரோனியில் உள்ள உரத் தொழிற்சாலை நீண்டகாலமாக மூடப்பட்டிருந்ததாகவும், அதை மீண்டும் இயக்குவதற்கு மோடிதான் உத்தரவாதம் அளித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். "இன்று இந்த உரத் தொழிற்சாலை தனது சேவைகளை வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. அதனால்தான் மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

அயோத்திதாமில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலை முன்னிட்டு பீகார் மக்களின் மகிழ்ச்சியை பிரதமர் குறிப்பிட்டார். இன்று இந்தியா தனது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அங்கீகரித்து வருவதாக அவர் கூறினார்.

 

இப்பகுதியில் இயற்கையை நேசிக்கும் தாரு பழங்குடியினர் இருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். தாரு சமூகத்திடமிருந்து ஒவ்வொருவரும் உத்வேகம் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார், "இன்று, தாரு போன்ற பழங்குடியினரிடமிருந்து உத்வேகம் பெற்று, இயற்கையைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது. அதனால்தான் நான் சொல்கிறேன், வளர்ந்த இந்தியாவை உருவாக்க, ஒவ்வொருவரின் முயற்சிகளும், ஒவ்வொருவரின் உத்வேகமும், ஒவ்வொருவரின் கற்றலும் தேவை" என்று அவர் கூறினார்.

நிறைவாக, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார், மக்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வருதல், இளைஞர்களுக்கு வேலைகள், ஏழைகளுக்கு உறுதியான வீடுகள், 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்களை இயக்குதல், ஆகியவை அரசின் முன்னுரிமைகளாகும் என்று அவர் தெரிவித்தார்.

பீகார் ஆளுநர் திரு ஆர் வி அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு விஜய் குமார் சின்ஹா, மத்திய இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

பீகார் மாநிலத்திலும், அண்டை நாடான நேபாளத்திலும் தூய்மையான சமையல் எரிவாயு அணுகலை வழங்கும் 109 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியன் ஆயிலின் முசாபர்பூர் – மோதிஹரி எல்பிஜி குழாய் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய குழாய் முனையம் நேபாளத்திற்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான   விநியோகப் புள்ளியாகவும் செயல்படும்.  இது வடக்கு பீகாரின் 8 மாவட்டங்களான கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், கோபால்கஞ்ச், சிவான், முசாபர்பூர், ஷியோகர், சீதாமர்ஹி மதுபானி ஆகிய 8 மாவட்டங்களுக்கு சேவை செய்யும். மோதிஹரியில் புதிய  ஆலை மோதிஹரி ஆலையுடன் இணைக்கப்பட்ட உணவுச் சந்தைகளில் விநியோகச் சங்கிலியை மென்மையாக்கும்.

கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், கோபால்கஞ்ச், சிவான் மற்றும் தியோரியா ஆகிய இடங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கும், தானியம் சார்ந்த எத்தனால் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தேசிய நெடுஞ்சாலை – 28ஏ-வில் பிப்ரகொத்தி – மோதிஹரி – ரக்சால் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை 104-ல்  ஷியோஹர்-சீதாமர்ஹி பிரிவை  இருவழிப்பாதையாக மாற்றுதல். கங்கை ஆற்றின் குறுக்கே பாட்னாவில் திகா – சோன்பூர் ரயில் மற்றும் சாலைப் பாலத்திற்கு இணையாக கங்கை ஆற்றின் குறுக்கே ஆறு வழி கேபிள் பாலம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பாபுத்தம் மோத்திஹரி – பிப்ரஹான் மற்றும் நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா பாதை மாற்றம் உள்ளிட்ட 62 கிலோமீட்டர் தூர ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோரக்பூர் கண்டோன்மென்ட் – வால்மீகி நகர் இடையிலான 96 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கல், பெட்டியா ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா மற்றும் ரக்சவுல்-ஜோக்பானி இடையேயான இரண்டு புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

***

(Release ID: 2011947)

PKV/AG/KRS



(Release ID: 2012013) Visitor Counter : 79