பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ. 7,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


இந்தியன் ஆயிலின் 518 கிலோமீட்டர் ஹால்டியா-பரோனி கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

கரக்பூரில் உள்ள வித்யாசாகர் தொழிற் பூங்காவில் ஆண்டுக்கு 120 டிஎம்பிஏ திறன் கொண்ட இந்தியன் ஆயிலின் எல்பிஜி நிரப்பும் ஆலையை அவர் தொடங்கி வைத்தார்

கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

ரூ.2,680 கோடி மதிப்பிலான முக்கிய ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மேற்கு வங்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் தொடர்பான மூன்று திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

"21 ஆம் நூற்றாண்டின் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து இலக்கு நிர்ணயித்துள்ளோம்"

"மேற்கு வங்கத்தில் ரயில்வேயை நாட்டின் பிற பகுதிகளைப் போலவே அதே வேகத்தில் நவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது"

"சுற்றுச்சூழலுடன் இணக்கமான வளர்ச்சியை எவ்வாறு செய்ய முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியது"

"ஒரு மாநிலத்தில் உள்கட்டமைப

Posted On: 01 MAR 2024 3:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, துறைமுகங்கள், எண்ணெய் குழாய்கள், சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளுடன் தொடர்புடையவையாகும்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், 21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் விரைவான வளர்ச்சி குறித்தும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்ற தீர்மானம் குறித்தும் குறிப்பிட்டார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை அளிக்கப்படுவதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். "நாங்கள் எப்போதும் ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டு வந்துள்ளோம், அதன் முடிவுகள் இப்போது உலகிற்கு தெரியும்" என்று அவர் கூறினார். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வருவது, அரசின் சரியான திசை, கொள்கைகள் மற்றும் முடிவுகளின் சரியான தன்மையைக் குறிக்கிறது என்ற உண்மையை அவர் வலியுறுத்தினார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சரியான நோக்கம்தான் என்று அவர் மேலும் கூறினார்.

ரயில்வே, துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் ஜல் சக்தி ஆகிய துறைகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு ரூ.7,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, மேற்கு வங்கத்திலும் ரயில்வேயை நவீனப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது" என்று கூறிய பிரதமர், ஜார்கிராம் – சல்கஜரி இடையே ரயில் இணைப்பை மேம்படுத்தவும், இப்பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில் துறையை ஊக்குவிக்கவும் மூன்றாவது ரயில் பாதை அவசியம் என்பதை அவர் குறிப்பிட்டார். சோண்டாலியா – சம்பாபுகூர் மற்றும் டன்குனி – பட்டாநகர் – பால்டிகுரி ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் திட்டம் குறித்தும் அவர் பேசினார். கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மூன்று திட்டங்கள் குறித்தும் பிரதமர் பேசினார்.

"சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார். கச்சா எண்ணெய் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் வழியாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் விளைவாக, சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிடைக்கிறது. எல்பிஜி நிரப்பும் ஆலை 7 மாநிலங்களுக்கு பயனளிக்கும்.  இப்பகுதியில் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் என்றார் அவர்.

"ஒரு மாநிலத்தில் உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்குவது வேலைவாய்ப்புக்கான பல வழிகளைத் திறக்கும்" என்று வலியுறுத்திய பிரதமர், மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒதுக்கீடு பற்றி தெரிவித்தார். இது 2014-க்கு முன்பு இருந்ததை விட, மூன்று மடங்கு அதிகமாகும். ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நிலுவையில் உள்ள திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மேற்கு வங்கத்தில் 3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றும், அமிர்த ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் தாரகேஷ்வர் ரயில் நிலைய மறு மேம்பாடு உட்பட சுமார் 100 ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், 150-க்கும் மேற்பட்ட புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்க மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சியடைந்த பாரதம்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக குடிமக்களுக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு. சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

சுமார் ரூ. 2,790 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தியன் ஆயிலின் 518 கி.மீ ஹால்டியா-பரவுனி கச்சா எண்ணெய்க் குழாயை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தக் குழாய் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்கிறது. இந்தக் குழாய் இணைப்பு பரவுனி சுத்திகரிப்பு ஆலை, போங்கைகான் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி சுத்திகரிப்பு ஆலைக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கச்சா எண்ணெயை வழங்கும்.

கரக்பூரில் உள்ள வித்யாசாகர் தொழில் பூங்காவில் ஆண்டுக்கு 120 மில்லியன் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.200 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட எல்பிஜி நிரப்பும் ஆலை பிராந்தியத்தின் முதல் எல்பிஜி நிரப்பும் ஆலையாக இருக்கும். இது மேற்கு வங்கத்தில் சுமார் 14.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்கும்.

கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் பெர்த் எண் 8 என்.எஸ்.டி.யின் புனரமைப்பு மற்றும் கொல்கத்தா டாக் சிஸ்டத்தின் பெர்த் எண் 7 & 8 என்.எஸ்.டி.யின் இயந்திர மயமாக்கல் ஆகியவை அடங்கும். சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்ள ஹால்டியா கப்பல்துறை வளாகத்தின் எண்ணெய் படகுத்துறைகளில் தீயணைப்பு முறையை மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக நிறுவப்பட்ட தீயணைப்பு வசதி என்பது அதிநவீன வாயு மற்றும் சுடர் சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு அதிநவீன முழு தானியங்கி அமைப்பாகும். இது உடனடி ஆபத்து கண்டறிதலை உறுதி செய்கிறது.

சுமார் ரூ.2680 கோடி மதிப்பிலான முக்கியமான ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, நகர்வை மேம்படுத்தி, சரக்குப் போக்குவரத்தின் தடையற்ற சேவையை எளிதாக்கி, இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேற்கு வங்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான மூன்று திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.

***

PKV/RS/KV



(Release ID: 2010642) Visitor Counter : 78