பிரதமர் அலுவலகம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ஜார்க்கண்டில் ரூ.17,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

தியோகர் – திப்ருகர் ரயில் சேவை, டாடா நகர் மற்றும் பதம்பஹர் (தினசரி) இடையே மெமு ரயில் சேவை மற்றும் ஷிவ்பூர் ரயில் நிலையத்திலிருந்து நீண்ட தூர சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சத்ராவில் உள்ள வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் அலகு 1-ஐ (660 மெகாவாட்) நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரித் துறை தொடர்பான திட்டங்களை அர்ப்பணித்தார்

"சிந்த்ரி ஆலை மோடியின் உத்தரவாதமாக இருந்தது- இன்று இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது"

"புத்துயிர் பெற்றுள்ள 5 ஆலைகள் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும்- இது இந்தியாவை இந்த முக்கியமான துறையில் தற்சார்பை நோக்கி விரைவாகக் கொண்டு செல்லும்"

"கடந்த 10 ஆண்டுகளில் அரசு, பழங்குடி சமூகம், ஏழைகள், இளைஞர்கள் மற

Posted On: 01 MAR 2024 12:46PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் உரம், ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளை உள்ளடக்கியது. எச்யுஆர்எல் மாதிரியை ஆய்வு செய்த பிரதமர், சிந்த்ரி ஆலை கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று ரூ. 35,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறியதுடன், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிந்த்ரி உரத் தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான தது தீர்மானத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இது மோடியின் உத்தரவாதம் என்றும், இன்று இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார். 2018-ம் ஆண்டு இந்த உர ஆலைக்கு அடிக்கல் நாட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா பயணத்தில் இன்றைய முன்முயற்சியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு 360 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுவதாகவும், 2014-ம் ஆண்டின் இந்தியா 225 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை மட்டுமே உற்பத்தி செய்து வந்தது என்றும் அவர் கூறினார். பெரிய அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அப்போது ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். எங்கள் அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில், யூரியா உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ராமகுண்டம், கோரக்பூர் மற்றும் பரோனி உரத் தொழிற்சாலைகளுக்கு புத்துயிரூட்டுவது குறித்தும் பிரதமர் பேசினார். இந்தப் பட்டியலில் சிந்த்ரியும் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தால்ச்சர் உர ஆலையும் தொடங்கப்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த ஆலையை தாம் நாட்டுக்கும் அர்ப்பணிக்கவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இந்த 5 ஆலைகளும் மொத்தம் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் என்றார். இது இந்தியாவை இந்த முக்கியமான துறையில் தற்சார்பை நோக்கி விரைவாக கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.

புதிய ரயில் பாதைகளின் தொடக்கம், தற்போதுள்ள ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் பல்வேறு ரயில்வே திட்டங்கள் தொடங்கப்படுவதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே புரட்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். தன்பத் சந்திரபுரா ரயில் பாதை இப்பகுதிக்கு புதிய வடிவம் கொடுத்திருப்பதையும், பாபா பைத்யநாத் ஆலயத்தையும், மா காமாக்யா சக்தி பீடத்தையும் இணைக்கும் தியோகர் திப்ருகர் ரயில் சேவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். வாரணாசியில் வாரணாசி - கொல்கத்தா ராஞ்சி விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர், இது சத்ரா, ஹசாரிபாக், ராம்கர் மற்றும் பொகாரோ போன்ற இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதாகக் கூறினார். பயண நேரம் குறைவதுடன், சரக்கு போக்குவரத்தையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துடனான பிராந்திய இணைப்பை ஊக்குவிப்பதுடன், இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியின சமூகம், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக அரசு அதிகளவில் பணியாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவித்தார். நேற்று வெளிவந்த சமீபத்திய காலாண்டிற்கான பொருளாதார புள்ளி விவரங்களையும்  அவர் எடுத்துரைத்தார். அக்டோபர் முதல் டிசம்பர் 2023 வரையிலான நிதியாண்டில் பதிவான  8.4 சதவீத வளர்ச்சி விகிதம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான திறனைக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார். வளர்ச்சியடைந்த பாரத்தை உருவாக்க வளர்ச்சியடைந்த ஜார்க்கண்டை உருவாக்குவதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய பிரதமர், இந்த மாநிலம் வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஆதரவை எடுத்துரைத்தார். வளர்ச்சியடைந்த பாரத்தின் தீர்மானங்களுக்கான ஆற்றல் ஆதாரமாக பகவான் பிர்சா முண்டாவின் பூமியான ஜார்க்கண்ட் மாறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

தன்பத் செல்ல வேண்டியிருப்பதால் சிறிய உரையை நிறைவு செய்துகொள்வதாக பிரதமர் கூறினார். கனவுகளும், தீர்மானங்களும் மேலும் வலுப்பெறும் என்று கூறிய அவர், ஜார்க்கண்ட் மக்களுக்கு நல்வாழ்த்துகளை கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு சம்பாய் சோரன், மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ. 8900 கோடிக்கும் அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த உர ஆலை யூரியா துறையில் தன்னிறைவை நோக்கிய ஒரு படியாகும். இது நாட்டின் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், நாட்டில் ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்கும். கோரக்பூர் மற்றும் ராமகுண்டம் ஆகிய இடங்களில் முறையே டிசம்பர் 2021 மற்றும் நவம்பர் 2022ஸ்-ல் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உர ஆலைகளின் மறுமலர்ச்சிக்குப் பிறகு, நாட்டில் புதுப்பிக்கப்படும் மூன்றாவது உர ஆலை இதுவாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ. 17,600 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் திட்டங்களை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சோனே நகர்-ஆண்டலை இணைக்கும் 3-வது மற்றும் 4-வது வழித்தடங்கள்; டோரி- ஷிவ்பூர் முதல் மற்றும் இரண்டாவது மற்றும் பிராடோலி-ஷிவ்பூர் மூன்றாவது ரயில் பாதை (டோரி-ஷிவ்பூர் திட்டத்தின் ஒரு பகுதி); மோகன்பூர் - ஹன்ஸ்திஹா புதிய ரயில் பாதை; தன்பாத்-சந்திரபுரா ரயில் பாதை ஆகியவை  இந்தத் திட்டங்களில் அடங்கும். இவை மாநிலத்தில் ரயில் சேவைகளை விரிவுபடுத்தி, இப்பகுதியில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த நிகழ்ச்சியின் போது மூன்று ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தியோகர் - திப்ருகர் ரயில் சேவை, டாடாநகர் மற்றும் பதம்பஹர் (தினசரி) இடையே மெமு ரயில் சேவை மற்றும் ஷிவ்பூர் நிலையத்திலிருந்து நீண்ட தூர சரக்கு ரயில் ஆகியவை அந்த மூன்று ரயில்கள் ஆகும்.

சத்ராவில் வடக்கு கரண்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் அலகு (660 மெகாவாட்) உட்பட ஜார்க்கண்டில் உள்ள முக்கியமான மின் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்பகுதியில் மேம்பட்ட மின்சார விநியோகத்திற்கு வழிவகுக்கும். இது வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரித் துறை தொடர்பான திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

***

PKV/PLM/AG/KV

 



(Release ID: 2010582) Visitor Counter : 76