பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


ராஜ்கோட், பதிண்டா, ரேபரேலி, கல்யாணி, மங்களகிரி ஆகிய ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான 200-க்கும் அதிமான சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

புனேயில் 'நிசர்க் கிராம்' என்ற பெயரில் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தை தொடங்கி வைத்தார்

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் ரூ.2280 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய முந்த்ரா-பானிபட் குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்

"நாங்கள் தில்லியில் இருந்து அரசை வெளியே கொண்டுவருகிறோம், தில்லிக்கு வெளியே முக்கியமான தேசிய நிகழ்வுகளை நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது"

"புதிய இந்தியா பணிகளை விரைவாக முடித்து வருகிறது"

"தலைமுறைகள் மாறிவிட்டன என்பதை என்னால் பார்க்க முடிகிறது, ஆனால் மோடி மீதான ப

Posted On: 25 FEB 2024 6:40PM by PIB Chennai

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், சாலை, ரயில், எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலா போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கியவை.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், மாண்புமிகு ஆளுநர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் மெய்நிகர் வருகையை ஏற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அனைத்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களும் புதுதில்லியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போதைய அரசு இந்தப் போக்கை மாற்றி, மத்திய அரசை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்கிறது என்று குறிப்பிட்டார். "ராஜ்கோட்டில் உள்ள இன்றைய அமைப்பு இந்த நம்பிக்கைக்கு ஒரு சான்று" என்று கூறிய பிரதமர் மோடி, அர்ப்பணிப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஏனெனில் இது ஒரு புதிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலிருந்து ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, கர்னூல் ஐஐஐடி புத்தகயா, ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் விசாகப்பட்டினம், ஐஐஎஸ் கான்பூர் ஆகிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இன்று எய்ம்ஸ் ராஜ்கோட், எய்ம்ஸ் ரேபரேலி, எய்ம்ஸ் மங்களகிரி, எய்ம்ஸ் பதிண்டா, எய்ம்ஸ் கல்யாணி ஆகியவை தொடங்கி வைக்கப்படுவதாகக் கூறினார். குறிப்பாக இந்த 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பார்க்கும் போது, வளரும் இந்தியாவில்  வேகமாக பணிகள் நடைபெற்று வருவது தெரிகிறது என்று திரு மோடி கூறினார்.

 

ராஜ்கோட் உடனான தனது நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், 22 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தான் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார். 22 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 25-ம் தேதி அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். ராஜ்கோட் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக அவர் கூறினார். "தலைமுறைகள் மாறியிருப்பதை என்னால் காண முடிகிறது, ஆனால் மோடி மீதான பாசம் எல்லா வயது வரம்பையும் தாண்டியது" என்று நன்றியுடன் பிரதமர் கூறினார்.

 

இன்றைய நிகழ்ச்சியின் தாமதத்திற்கு மன்னிப்பு கோரிய பிரதமர், சுதர்சன் சேது உட்பட பல வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய துவாரகையில் தனது நடவடிக்கைகள் குறித்து பார்வையாளர்களிடம் கூறினார். நீரில் மூழ்கிய புனித நகரமான துவாரகையில் பிரார்த்தனை செய்த தனது தெய்வீக அனுபவத்தை அவர் மீண்டும் விவரித்தார். "தொல்லியல் மற்றும் மத நூல்களைப் படிக்கும்போது துவாரகாவைப் பற்றிய ஆச்சரியம் நம்மை நிரப்புகிறது. இன்று அந்தப் புனிதக் காட்சியை என் கண்களால் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. புனித எச்சங்களைத் தொட முடிந்தது. நான் அங்கு பிரார்த்தனை செய்தேன். அந்த உணர்வை விவரிப்பது கடினம்" என்று கூறிய பிரதமர், அந்த அனுபவத்தின் உணர்வுகலிலிருந்து இன்னும் மீளவில்லை என்றார். "அந்த ஆழத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை எண்ணி நான் ஆச்சரியப்பட்டேன். நான் பகவான் கிருஷ்ணரின் ஆசியுடனும், துவாரகாவின் உத்வேகத்துடனும் கடலிலிருந்து வெளியே வந்தேன்" என்று பிரதமர் கூறினார். "வளர்ச்சி  மற்றும் பாரம்பரியம் மீதான எனது தீர்மானம் புதிய வலிமையைப் பெற்றுள்ளது; வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எனது இலக்குடன் தெய்வீக நம்பிக்கை இணைந்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

 

 ரூ.48,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், குஜராத் கடற்கரையிலிருந்து ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக புதிய முந்த்ரா-பானிப்பட் குழாய் பதிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். சாலைகள், ரயில்வே, மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பிறகு ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று கூறிய பிரதமர், ராஜ்கோட் மற்றும் செளராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இன்று எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் அனைத்து நகரங்களிலும் உள்ள குடிமக்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

"இன்று ராஜ்கோட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது" என்று கூறிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த பாரதத்தில் விரும்பப்படும் சுகாதார வசதிகளின் ஒரு பார்வையை ராஜ்கோட் இன்று வழங்குகிறது என்பதை எடுத்துரைத்தார். நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளில் ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது. அதுவும் தில்லியில்தான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே தொடங்கப்பட்ட போதிலும், அவற்றில் சிலவற்றைக் கட்டி முடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். "கடந்த 10 நாட்களில், ஏழு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும், தொடங்கி வைக்கப்பட்டதையும் நாடு கண்டது" என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 70 ஆண்டுகளில் செய்ததைக் காட்டிலும் தற்போதைய அரசு வேகமாக நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும், அதன் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறினார். மருத்துவக் கல்லூரிகள், பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளின் துணை மையங்கள், கவலை தரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மோடியின் உத்தரவாதம் என்றால் உத்தரவாதத்தை நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  3 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டியதாகவும், இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். இதேபோல், பஞ்சாபில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார். இதே சுழற்சி ரேபரேலி, மங்களகிரி, கல்யாணி மற்றும் ரேவாரி எய்ம்ஸ் ஆகியவற்றிலும் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில் 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் எங்கு முடிகிறதோ அங்குதான் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக தொற்றுநோயை நம்பகமான முறையில் கையாள முடியும் என்று பிரதமர் கூறினார். எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தீவிர சிகிச்சை உள்கட்டமைப்பு ஆகியவற்றின் முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கம் பற்றி அவர் குறிப்பிட்டார். கிராமங்களில் சிறு நோய்களுக்காக ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் உள்ளன. 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 706 ஆக உயர்ந்துள்ளது என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 50,000 ஆக இருந்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும்,  2014-ல் 30 ஆயிரம் ஆக இருந்த முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான மருத்துவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுவார்கள் என்று அவர் கூறினார். 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரிகள், காசநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பிஜிஐ துணை மையம், தீவிர பராமரிப்பு பிரிவுகள் மற்றும் டஜன் கணக்கான இஎஸ்ஐசி மருத்துவமனைகள் போன்ற திட்டங்களும் இடம்பெற்றன.

 

"நோய்த் தடுப்பு மற்றும் அதை எதிர்த்துப் போராடும் திறனுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், ஊட்டச்சத்து, யோகா, ஆயுஷ் மற்றும் தூய்மைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பாரம்பரிய இந்திய மருத்துவம், நவீன மருத்துவம் ஆகிய இரண்டையும் ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இன்று தொடங்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இரண்டு பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். பாரம்பரிய மருத்துவ முறை தொடர்பான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் குஜராத்தில் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பணத்தை மிச்சப்படுத்தவும், சிறந்த சுகாதார வசதிகளைப் பெறவும் உதவும் முயற்சியில், ரூ .1 லட்சம் கோடியை மிச்சப்படுத்த உதவிய ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் ரூ.30 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த உதவிய மருந்துகளை 80% தள்ளுபடியில் வழங்கும் மக்கள் மருந்தக மையங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழைகள் ரூ .70,000 கோடிக்கு மேல் சேமித்துள்ளனர், மொபைல் தரவின் குறைந்த விலை காரணமாக குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .4,000 சேமித்துள்ளனர். வரி தொடர்பான சீர்திருத்தங்கள் காரணமாக வரி செலுத்துவோர் சுமார் ரூ .2.5 லட்சம் கோடி சேமித்துள்ளனர்.

 

மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் கொண்டு வந்து குடும்பங்களுக்கு வருமானத்தை உருவாக்கும் பிரதமரின் சூரியசக்தி  திட்டம் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். பயனாளிகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். மீதமுள்ள மின்சாரம் அரசால் கொள்முதல் செய்யப்படும். கட்ச் பகுதியில்  இரண்டு  பெரிய காற்றாலை மற்றும் சூரியசக்தி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

 

 தொழிலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கைவினைஞர்களின் நகரம் ராஜ்கோட் என்று குறிப்பிட்ட பிரதமர், லட்சக்கணக்கான விஸ்வகர்மாக்கள் பயனடையும் ரூ.13,000 கோடி மதிப்பிலான பிரதமரின்  விஸ்வகர்மா திட்டம் பற்றி பேசினார். குஜராத்தில் ஏற்கனவே 20,000 விஸ்வகர்மாக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு விஸ்வகர்மாவுக்கும் ரூ .15,000 உதவி கிடைத்துள்ளது. பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ .10,000 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். குஜராத்தின் சாலையோர வியாபாரிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் உதவி கிடைத்தது. ராஜ்கோட்டில் மட்டும், 30,000க்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

 

இந்திய குடிமக்கள் அதிகாரம் பெறும்போது வளர்ச்சியடைந்த பாரத இயக்கம் வலுப்பெறும் என்பதைப் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். "இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக மாற்ற மோடி உத்தரவாதம் அளிக்கும்போது, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் வளம் என்பதே குறிக்கோள்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

நாட்டில் மூன்றாம் நிலை சுகாதார சேவையை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்), மங்களகிரி (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய ஐந்து இடங்களில் உள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியையும், பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள முதுகலை மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் 300 படுக்கைகள் கொண்ட துணை மையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதுச்சேரி ஏனாமில் உள்ள ஜிப்மரின் 90 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு ஆலோசனை பிரிவை அவர் தொடங்கி வைத்தார். சென்னையில் தேசிய முதியோர் மருத்துவ  மையம்;  பீகார் மாநிலம் பூர்னியாவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி; கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஆர்.டி) ஆகிய ஐ.சி.எம்.ஆரின் 2 களப் பிரிவுகள்: தமிழ்நாட்டின் திருவள்ளூரில் புதிய கூட்டு காசநோய் ஆராய்ச்சி மையம்  ஆகியவற்றையும்  அவர் தொடங்கி வைத்தார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் முதுகலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மையத்தின் 100 படுக்கைகள் கொண்ட துணை மையம் ,தில்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடம்; இம்பாலில் உள்ள ரிம்ஸில் கிரிட்டிகல் கேர் பிளாக்; ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா மற்றும் தும்காவில் உள்ள செவிலியர் கல்லூரிகள் உட்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்..

 

புனேயில் 'நிசர்க் கிராம்' என்ற தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இது இயற்கை மருத்துவக் கல்லூரியையும், 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும், பல்துறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தையும் உள்ளடக்கியது. மேலும், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் உயர்மட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி வசதிகள் இருக்கும்

 

இந்த நிகழ்ச்சியின் போது, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சுமார் 2280 கோடி ரூபாய் மதிப்பிலான 21 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் பாட்னா (பீகார்), அல்வார் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் உள்ள 2 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அடங்கும். கோர்பா (சத்தீஸ்கர்), உதய்பூர் (ராஜஸ்தான்), ஆதித்யாபூர் (ஜார்க்கண்ட்), புல்வாரி ஷெரீப் (பீகார்), திருப்பூர் (தமிழ்நாடு), காக்கிநாடா (ஆந்திரா), சத்தீஸ்கரில் ராய்கர் & பிலாய் ஆகிய இடங்களில் உள்ள 8 மருத்துவமனைகள்; ராஜஸ்தானில் நீம்ரானா, அபு சாலை, பில்வாரா ஆகிய இடங்களில் 3 மருந்தகங்கள். ராஜஸ்தானில் ஆல்வார், பெஹ்ரோர் மற்றும் சீதாபுரா, உத்தராகண்ட் மாநிலம் செலாக்கி, உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், கேரளாவில் கொரட்டி & நவைக்குளம், ஆந்திரப் பிரதேசத்தில் பிடிபிமாவரம் ஆகிய 8 இடங்களில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மருந்தகங்கள் தொடங்கப்படும் .

 

இந்தப் பிராந்தியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 300 மெகாவாட் புஜ்-2 சூரிய மின்சக்தி திட்டம், மின் தொகுப்பில்  இணைக்கப்பட்ட 600 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம்; காவ்டா சூரிய மின்சக்தி திட்டம்; 200 மெகாவாட் தயாப்பூர்-2 காற்றாலை மின் திட்டம் உட்பட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய முந்த்ரா-பானிப்பட் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். குஜராத் கடற்கரையில் உள்ள முந்த்ராவிலிருந்து ஹரியானாவின் பானிப்பட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்காக ஆண்டுக்கு 8.4 எம்எம்பிஏ நிறுவப்பட்ட திறன் கொண்ட 1194 கி.மீ நீளமுள்ள முந்த்ரா-பானிபட் குழாய் இயக்கப்பட்டது.

 

இந்தப் பிராந்தியத்தில் சாலை மற்றும் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சுரேந்திரநகர் – ராஜ்கோட் இரட்டை ரயில்பாதையைப் பிரதமர் அர்ப்பணித்தார். பழைய தேசிய நெடுஞ்சாலை 8இ-யில் பாவ்நகர் – தலாஜா (தொகுப்பு-1) நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 751-ன் பிப்லி-பாவ்நகர் (தொகுப்பு-I) தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் சந்தல்பூர் பிரிவில் சமகியாலி முதல் சந்தால்பூர்  வரை ஆறு வழிப்பாதையாக அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

*******

ANU/AD/SMB/DL



(Release ID: 2008930) Visitor Counter : 55