பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர சபாகரில் நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்


"இளைஞர் சக்தியே வளர்ந்த பாரதத்தின் அடிப்படை"

"மகாதேவரின் ஆசீர்வாதத்துடன், ' வளர்ச்சியின் முரசு ' கடந்த 10 ஆண்டுகளாகக் காசியில் எதிரொலிக்கிறது"

"காசி நமது நம்பிக்கையின் புனித யாத்திரை மட்டுமல்ல, அது இந்தியாவின் நித்திய நனவின் துடிப்பான மையமாகும்"

"விஸ்வநாத் தாம் ஒரு தீர்க்கமான திசையை வழங்கி இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்"

"புதிய காசி புதிய இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது"

"இந்தியா என்பது ஒரு கருத்து, சமஸ்கிருதம் அதன் முக்கிய வெளிப்பாடு. இந்தியா ஒரு பயணம், சமஸ்கிருதம் அதன் வரலாற்றின் முக்கிய அத்தியாயம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, சமஸ்கிருதம் அதன் பிறப்பிடம்"

"இன்று, காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கான முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைச் சுற்றி நவீனத்துவம் எவ்வாறு விரிவடைகிறது என்பதை இன்று உலகம் காண்கிறது"

"காசி மற்றும் காஞ்சியில் வேதங்களைப் பாராயணம் செய்வது 'ஒரே பாரதம், உ

Posted On: 23 FEB 2024 11:36AM by PIB Chennai

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுதந்திர சபாகரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டி  குறித்த கையேட்டையும், காபி டேபிள் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத அறிவுப் போட்டி , காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி மற்றும் காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில்  வென்றவர்களுக்கு விருதுகளை வழங்கிய பிரதமர், வாரணாசியைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக் கருவிகள் மற்றும் தகுதி உதவித்தொகைகளையும் வழங்கினார். காசி நாடாளுமன்ற புகைப்படக் கலை போட்டி காட்சியகத்தையும் பார்வையிட்ட பிரதமர், "சன்வர்த்தி காசி" என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இளம் அறிஞர்கள் மத்தியில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ஞானம் என்ற கங்கையில் நீராடுவது போன்ற உணர்வு உள்ளது என்றார். பண்டைய நகரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் இளம் தலைமுறையினரின் முயற்சிகளை அவர் பாராட்டினார். அமிர்த காலத்தின் மூலம் இந்திய இளைஞர்கள் நாட்டைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்பது பெருமையும், மனநிறைவும் அளிக்கிறது என்று அவர் கூறினார். "காசி என்றென்றும் நிலைத்திருக்கும் அறிவின் தலைநகரம்" என்று கூறிய பிரதமர், காசியின் ஆற்றலும், வடிவமும் அதன் புகழை மீண்டும் பெற்று வருவது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். காசி நாடாளுமன்ற அறிவு போட்டி, காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி,  காசி நாடாளுமன்ற  சமஸ்கிருத போட்டி ஆகிய விருதுகளை இன்று வழங்கியதைக் குறிப்பிட்ட அவர், வெற்றியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வெற்றியாளர்கள் பட்டியலில் இடம் பெற முடியாதவர்களையும் அவர் ஊக்குவித்தார். "எந்தவொரு பங்கேற்பாளரும் தோற்கடிக்கப்படவில்லை அல்லது பின்தங்கவில்லை, மாறாக, ஒவ்வொருவரும் இந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டுள்ளனர்" என்று கூறிய பிரதமர், பங்கேற்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று குறிப்பிட்டார். காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக தமது கனவை முன்னெடுத்துச் சென்ற ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திர் நியாஸ், காசி வித்வத் பரிஷத் மற்றும் அறிஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இன்று வெளியிடப்பட்டுள்ள காபி டேபிள் புத்தகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் காசியின் புத்துயிர் பெற்ற கதையைத் தாங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் காசியின் முன்னேற்றத்தை அங்கீகரித்த பிரதமர், நாம் அனைவரும் மகாதேவரின் விருப்பத்தின் கருவிகள் மட்டுமே என்று கூறினார்.  மகாதேவரின் ஆசீர்வாதத்துடன், கடந்த 10 ஆண்டுகளாக காசியில் ' வளர்ச்சியின் முரசு ' எதிரொலிக்கிறது என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பற்றிப் பேசிய பிரதமர், சிவராத்திரி மற்றும் ரங்பரி ஏகாதசிக்கு முன்னதாக காசி வளர்ச்சி திருவிழாவை இன்று கொண்டாடுகிறது என்றார். 'கங்கையின் வளர்ச்சி ' மூலம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒவ்வொருவரும் பார்த்ததாக அவர் கூறினார்.

"காசி என்பது நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல, இந்தியாவின் நிரந்தர உணர்வின் துடிப்பான மையம்" என்று பிரதமர் கூறினார். உலகில் இந்தியாவின் பண்டைய பெருமை பொருளாதார வலிமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆனால் அதன் கலாச்சார, ஆன்மீக மற்றும் சமூகச் செழுமைக்குப் பின்னால் உள்ளது என்று அவர் கூறினார். காசி மற்றும் விஸ்வநாதர் தாம் போன்ற 'தீர்த்தங்கள்' நாட்டின் வளர்ச்சியின் 'வேள்விச்சாலை ' என்று கூறிய அவர், இந்தியாவின் அறிவு பாரம்பரியத்திற்கும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக இடங்களுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். காசியின் உதாரணத்தின் மூலம் தமது கருத்தை விளக்கிய பிரதமர், காசி சிவனின் பூமி மட்டுமல்ல, காசி புத்தரின் போதனைகளின் இடமாகவும் உள்ளது என்று கூறினார்; சமண தீர்த்தங்கரர்கள் பிறந்த இடமாகவும், ஆதி சங்கராச்சாரியாருக்கு ஞானம் பெற்ற இடமாகவும் அது உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் காசிக்கு வருவதால் காசியின் பன்முக ஈர்ப்பு பற்றியும் அவர் எடுத்துரைத்தார். "இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட இடத்தில் புதிய லட்சியங்கள் பிறக்கின்றன. புதிய சிந்தனைகள் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை வளர்க்கின்றன" என்று பிரதமர் மேலும் கூறினார்.

"விஸ்வநாதர் தாம் ஒரு தீர்க்கமான திசையை வழங்கும், இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்" என்று கூறிய பிரதமர், காசி விஸ்வநாதர் தாம் திறப்பு விழாவில் தாம் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்து அந்த நம்பிக்கையை இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். விஸ்வநாதர் தாம் வழித்தடம் இன்று அறிவார்ந்த அறிவிப்பைக் காண்கிறது என்று குறிப்பிட்ட அவர், நீதியின் புனித நூல்களின் பாரம்பரியத்தைப் புதுப்பிக்கிறது என்றும் கூறினார். "காசியில் பாரம்பரிய தொனிகளையும், சாஸ்திர உரையாடல்களையும் கேட்க முடியும்" என்று கூறிய பிரதமர், இது கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும், பண்டைய அறிவைப் பாதுகாக்கும் மற்றும் புதிய சித்தாந்தங்களை உருவாக்கும் என்று கூறினார். காசி நாடாளுமன்ற  சமஸ்கிருதப் போட்டி மற்றும் காசி நாடாளுமன்ற அறிவுப் போட்டி   போன்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்ளன என்று கூறிய அவர், சமஸ்கிருதம் படிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் புத்தகங்கள், உடைகள் மற்றும் தேவையான பிற ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன என்று கூறினார். ‘’ஆசிரியர்களுக்கும் உதவி வழங்கப்பட்டு வருகிறது. காசி தமிழ்ச் சங்கமம், கங்கா தீர்த்த  மகோத்சவம் போன்ற 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' இயக்கங்களின் ஒரு பகுதியாக விஸ்வநாத் தாம் மாறியுள்ளது" என்று கூறிய திரு மோடி, இந்த நம்பிக்கை மையம் பழங்குடி கலாச்சார நிகழ்வுகள் மூலம் சமூக உள்ளடக்கத்திற்கான தீர்மானத்தை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். நவீன அறிவியலின் கண்ணோட்டத்தில் பண்டைய அறிவு குறித்து காசியின் அறிஞர்கள் மற்றும் வித்வத் பரிஷத் ஆகியோரால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு மோடி தெரிவித்தார். கோயில் அறக்கட்டளை நகரின் பல இடங்களில் இலவச உணவுக்கு ஏற்பாடு செய்வதையும் அவர் குறிப்பிட்டார். "புதிய காசி புதிய இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று கூறிய பிரதமர் மோடி, நம்பிக்கை மையம் எவ்வாறு சமூக மற்றும் தேசியத் தீர்மானங்களுக்கான ஆற்றல் மையமாக மாற முடியும் என்பதை எடுத்துரைத்தார். இங்கிருந்து வெளிவரும் இளைஞர்கள் உலகம் முழுவதும் இந்திய அறிவு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் கொடியை ஏந்திச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"நமது அறிவு, அறிவியல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய மொழிகளில், சமஸ்கிருதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா என்பது ஒரு கருத்து, சமஸ்கிருதம் அதன் தலையாய வெளிப்பாடு. இந்தியா ஒரு பயணம், சமஸ்கிருதம் அதன் வரலாற்றின் முக்கிய அத்தியாயம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, சமஸ்கிருதம் அதன் பிறப்பிடம். வானியல், கணிதம், மருத்துவம், இலக்கியம், இசை மற்றும் கலைகள் குறித்த ஆராய்ச்சியில் சமஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்த காலத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த ஒழுக்கங்கள் மூலம் இந்தியா தனது அடையாளத்தைப் பெற்றது என்று அவர் கூறினார். காசி மற்றும் காஞ்சியில் வேதங்களை ஓதுவது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதற்கான குறிப்புகள் என்று அவர் கூறினார்.

"இன்று காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கான முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைச் சுற்றி நவீனத்துவம் எவ்வாறு விரிவடைகிறது என்பதை இன்று உலகம் காண்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட கோவிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டாவுக்குப் பிறகு காசியைப் போலவே அயோத்தியும் எவ்வாறு செழித்து வருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். குஷிநகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் புத்தருடன் தொடர்புடைய இடங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில், நாடு வளர்ச்சிக்கு புதிய வேகத்தை அளிக்கும் என்றும், வெற்றிக்கான புதிய வடிவங்களை உருவாக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இது மோடியின் உத்தரவாதம், மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம். வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சியின் சிறந்த புகைப்படங்களை சுற்றுலாப் பயணிகளுக்கான பட அஞ்சல் அட்டைகளாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஓவியப் போட்டி நடத்தி, சிறந்த ஓவியங்களை அஞ்சல் அட்டைகளாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். காசியின் தூதர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டி போட்டிக்கான தமது ஆலோசனையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். காசி மக்கள் அதன் மிகப்பெரிய பலம் என்று வலியுறுத்திய பிரதமர், ஒவ்வொரு காசி வாசிக்கும் ஒரு சேவகனாகவும், நண்பராகவும் உதவ உறுதி பூண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

***

ANU/PKV/KV



(Release ID: 2008336) Visitor Counter : 69