மத்திய அமைச்சரவை

டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் இந்தியா மற்றும் தான்சானியா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 15 DEC 2023 7:38PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தான்சானியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  டிஜிட்டல் மாற்ற நடவடிக்கைகளில் மக்கள்தொகை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வது குறித்த இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் 09 அக்டோபர் 2023 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சியை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, அனுபவ பரிமாற்றம், தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இதன் மூலம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாடுகளுக்கு நிர்வாகத்தின் வழக்கமான செயல்பாட்டு ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்படும்.

பின்னணி:

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒத்துழைத்துச் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) செயல்படுத்துவதில் இந்தியா தமது முன்னணி நிலையை நிரூபித்துள்ளது. கொவிட் பாதிப்பின்போது பொதுமக்களுக்கு டிஜிட்டல் நடைமுறைகள் மூலம் சேவைகளை வெற்றிகரமாக இந்தியா வழங்கியுள்ளது. இதன் விளைவாக, பல நாடுகள் இந்தியாவின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியாவின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஆர்வம் காட்டுகின்றன.

*******


ANU/PKV/PLM/DL



(Release ID: 1987123) Visitor Counter : 65