பிரதமர் அலுவலகம்

'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


"இந்திய வரலாற்றில் நாடு ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருக்கும் காலம் இது"

"இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நேரம் தான், சரியான நேரம் "

"தேசிய முயற்சிகள் சுதந்திரம் என்ற ஒரே இலக்கை நோக்கிக் குவிந்தபோது நமது சுதந்திரப் போராட்டம் மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது"

"இன்று, உங்கள் இலக்குகள், உங்கள் தீர்மானங்களின் குறிக்கோள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்"

'ஐடியா' என்பது 'ஐ' என்பதில் தொடங்குவது போல, 'இந்தியா' என்பதும் 'ஐ' என்பதில் தொடங்குகிறது, வளர்ச்சியின் முயற்சிகள் சுயத்திலிருந்து தொடங்குகின்றன"

"மக்கள், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தங்கள் கடமையைச் செய்யத் தொடங்கும் போது, நாடு முன்னேறும்"

"நாட்டின் மக்களான நமக்குத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தகாலத்தின் 25 ஆண்டுகள் நமக்குமுன் உள்ளன. 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும்"

"இளைஞர் சக்தி மாற்றத்திற்கான முகவர், மாற்றத்தின் பயனாளர் என இரண்டுமாகவும் உள்ளது"

"முன்னேற்றத்திற்கான ச

Posted On: 11 DEC 2023 11:40AM by PIB Chennai

'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சிக்காக இன்றைய பயிலரங்கை ஏற்பாடு செய்த அனைத்து ஆளுநர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய பிரதமர், இந்தத் தீர்மானம் காரணமாக இன்றைய நாள் ஒரு சிறப்புவாய்ந்த தருணமாகும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் 2047 இலக்கை அடைவதில் நாட்டின் இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கும் அனைத்துப் பங்கெடுப்பாளர்களையும் ஒன்றிணைப்பதில் அவர்களின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார். ஒரு தனிநபரின் ஆளுமை மேம்பாட்டில் கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, மக்களின் மேம்பாட்டால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும் என்றார். தற்போதைய காலகட்டத்தில் ஆளுமை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இளைஞர்களின் குரல் பயிலரங்கம் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டின் வாழ்க்கையிலும், நாடு அதன் வளர்ச்சிப் பயணத்தில் அதிவேக முன்னேற்றங்களை அடையும் ஒரு காலகட்டத்தை வரலாறு வழங்குகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை, "இந்த அமிர்தகாலம் தொடர்கிறது." இந்திய வரலாற்றில் நாடு ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருக்கும் காலம் இதுவாகும்". ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வளர்ந்த நாடுகளாக மாறிய பல  அண்டை நாடுகளை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.  "இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நேரம் தான் சரியான நேரம்" என்று கூறிய அவர், இந்த அமிர்தகாலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

சுதந்திரத்திற்கான மகத்தான போராட்டத்தை, உத்வேகத்தின் ஆதாரமாகப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். சத்தியாக்கிரகம், புரட்சிப் பாதை, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி, சமூக, கல்வி சீர்திருத்தங்கள் போன்ற ஒவ்வொரு முயற்சியும் சுதந்திரத்தை நோக்கியதாக இருந்தது. இக்காலகட்டத்தில் காசி, லக்னோ, விஸ்வ பாரதி, குஜராத் வித்யாபீடம், நாக்பூர் பல்கலைக்கழகம், அண்ணாமலை, ஆந்திரா மற்றும் கேரள பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் தேசத்தின் விழிப்புணர்வை வலுப்படுத்தின. தேசத்தின் சுதந்திரத்திற்காக ஒரு தலைமுறையின் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் சுதந்திரத்தின் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு முயற்சியும், செயலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காகவே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் இலக்குகளின் குறிக்கோள், உங்கள் தீர்மானங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் - இந்தியாவை வேகமாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும் என்றும், வளர்ந்த நாடாக மாறுவதற்கான முன்னேற்றத்திற்குக் குறிப்பிட்ட துறைகளை அடையாளம் காண வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பொதுவான இலக்கை அடைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆற்றலை செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். கருத்துகளின் பன்முகத்தன்மையைக் குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  வளர்ச்சியடைந்த இந்தியா@2047 தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்க ஒவ்வொருவரும் தங்கள் வரம்புகளைத் தாண்டி பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று திரு. மோடி கேட்டுக்கொண்டார். இந்த இயக்கத்துடன் அதிகமான இளைஞர்களை இணைக்க நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலும் சிறப்பு பிரச்சாரங்களை நடத்துமாறு அவர் பரிந்துரைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா தொடர்பான யோசனைகளுக்கு இணையத்தளம் தொடங்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர், 5 வெவ்வேறு தலைப்புகளில் ஆலோசனைகளை வழங்க முடியும் என்று தெரிவித்தார். சிறந்த 10 ஆலோசனைகளுக்குப் பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. MyGov-இல் உங்கள் ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். "இந்தியா ஒரு 'நான்' என்பதில் இருந்து தொடங்குவது போல யோசனையும் 'நான்' என்பதில் இருந்து தொடங்குகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியின் எண்ணம், (ஐ) 'நான்' என்பதிலிருந்து மட்டுமே தொடங்க முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

ஆலோசனைகளைக் கோரும் நடைமுறையைப் பற்றி விவரித்த பிரதமர், தேசிய நலனை முதன்மையாகக் கொண்ட அமிர்தத் தலைமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கல்வி மற்றும் திறன்களுக்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மக்களிடையே தேசிய நலன் மற்றும் குடிமை உணர்வு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "மக்கள்,  எந்தப் பொறுப்பில் இருந்த போதும், தங்கள் கடமையைச் செய்யத் தொடங்கும் போது, நாடு முன்னேறும்", என்று பிரதமர் குறிப்பிட்டார். நீர் சேமிப்பு, மின்சாரத்தை சேமித்தல், விவசாயத்தில் குறைவான ரசாயனங்களைப் பயன்படுத்துதல், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான முன்னுதாரணங்களை அவர் எடுத்துக் காட்டினார். தூய்மை இயக்கத்திற்குப் புதிய ஆற்றலை அளிப்பது, வாழ்க்கை முறை பிரச்சனைகளை எதிர்கொள்வது, இளைஞர்கள் மொபைல் செல்பேசிகளுக்கு அப்பால் உலகை ஆராய்வதற்கான வழிகளை பரிந்துரைப்பது பற்றி சிந்திக்குமாறு கல்வியாளர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு அவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சமூக சிந்தனை ஆளுகையிலும் பிரதிபலிக்கிறது என்று கூறிய அவர், பட்டம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு தொழில்திறனையாவது பெற்றிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "ஒவ்வொரு தலைமையகத்திலும், ஒவ்வொரு நிறுவனத்திலும், மாநில அளவிலும் இந்தத் தலைப்புகளில் சிந்திக்கும் ஒரு விரிவான செயல்முறையை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்", என்று அவர் மேலும் கூறினார்.

'வளர்ச்சியடைந்த இந்தியா' முன்னேற்றக் காலத்தை ஒரு தேர்வுக் காலத்துடன் ஒப்பிட்ட பிரதமர், மாணவர்களிடையே நம்பிக்கை, தயாரிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் இலக்கை அடைய தேவையான ஒழுக்கத்தைப் பராமரிப்பதில் குடும்பங்களின் பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். "அமிர்தகாலத்தின் 25 ஆண்டுகள் நம் முன் உள்ளன. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்திற்காக நாம் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும். ஒரு குடும்பமாக நாம் உருவாக்க வேண்டிய சூழல் இதுதான்", என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை இளைஞர்களால் அதிகாரம் பெறுகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, அடுத்த 25-30 ஆண்டுகளில் உழைக்கும் வயது கொண்டோரின் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்றும், இதை உலகம் அங்கீகரிக்கும் என்றும் தெரிவித்தார். "இளைஞர் சக்தி, மாற்றத்தின் முகவர் மற்றும் மாற்றத்தின் பயனாளிகள்" என்று பிரதமர் மோடி கூறினார். அடுத்த 25 ஆண்டுகள் இன்றைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இளைஞர்களின் வாழ்க்கைக்குத் தீர்மானகரமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் புதிய குடும்பங்களையும் புதிய சமுதாயத்தையும் உருவாக்கப் போவது இளைஞர்கள்தான் என்று கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குத்தான் உள்ளது என்றார். இந்த உத்வேகத்துடன், நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களையும் வளர்ந்த இந்தியாவின் செயல்திட்டத்துடன் இணைக்க அரசு விரும்புகிறது என்று பிரதமர் மேலும் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கொள்கை உத்தியில் நாட்டின் இளைஞர்களின் குரலை ஒருங்கிணைப்பதை வலியுறுத்திய பிரதமர், இளைஞர்களுடன் அதிகபட்ச தொடர்பைப் பராமரிக்கும் கல்வி நிறுவனங்களின் பங்கை எடுத்துரைத்தார்.

உரையின் நிறைவில் பேசிய பிரதமர், முன்னேற்றத்திற்கான செயல்திட்டத்தை அரசு மட்டும் தீர்மானிக்காது, தேசத்தால் தீர்மானிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டினார். "நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளீடு மற்றும் சுறுசுறுப்பான பங்கேற்பு இருக்கும்", என்று கூறிய திரு மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மந்திரத்தால், அதாவது பொதுமக்களின் பங்கேற்பால் மிகப்பெரிய தீர்மானங்களைக் கூட நிறைவேற்ற முடியும் என்பதை சுட்டிக்காட்டினார். தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் இந்தியா இயக்கம், கொரோனா பெருந்தொற்றின் போது மீள்திறன் மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சக்தியை   வெளிப்படுத்துகின்றன என அவர் கூறினார். "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் மட்டுமே  வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும்" என்று பிரதமர் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை வடிவமைப்பவர்கள் மற்றும் இளைஞர் சக்தியை வழிநடத்துபவர்கள் என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கல்வியாளர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைத் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். "இது நாட்டின் எதிர்காலத்தை எழுதுவதற்கான ஒரு சிறந்த இயக்கமாகும்" என்று உரையை நிறைவு செய்த பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவின் பெருமையை மேலும் அதிகரிக்க தங்கள் பரிந்துரைகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னணி

நாட்டின் தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவதில் நாட்டின் இளைஞர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்'  என்ற முன்முயற்சி, நாட்டின் இளைஞர்களுக்கு வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப் பார்வைக்கு யோசனைகளைப் பங்களிக்க ஒரு தளத்தை வழங்கும். வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 க்கான தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள இளைஞர்களை ஈடுபடுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இந்தப் பயிலரங்குகள் இருக்கும்.

'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 என்பது சுதந்திரத்தின் 100 வது ஆண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நல்லாட்சி உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

***

ANU/SMB/BS/AG/KPG



(Release ID: 1985157) Visitor Counter : 739