பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 OCT 2023 9:05PM by PIB Chennai

என் அன்பு நண்பர்களே,

140 கோடி நாட்டின் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்!

1951-ம் ஆண்டு இதே இடத்தில், இதே மைதானத்தில்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது எவ்வளவு அற்புதமான தற்செயல் நிகழ்வு. இன்று, நீங்கள் காட்டிய தைரியம், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் நீங்கள் கொண்டு வந்த வெற்றிகளால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. 100 பதக்கங்களைக் கடக்க இரவு பகலாக உழைத்தீர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களைப் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.

இன்று, ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக, நமது விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரையும், உதவி ஊழியர்கள் அதிகாரிகளையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். குறிப்பாக உங்கள் பெற்றோருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன், உங்கள் பெற்றோரும் பாராட்டுக்கு உரியவர்கள். அவர்கள் இல்லாமல் பயிற்சியில் இருந்து போட்டியின் களம் வரை இந்தப் பயணம் சாத்தியமில்லை.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் வரலாறு படைத்திருக்கிறீர்கள். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் வென்ற பதக்க எண்ணிக்கை பாரதத்தின் வெற்றிக்கு சாட்சியாக மாறியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பாரதத்தின் மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதில் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் தடுப்பூசியை நோக்கிப்பணி செய்தபோது, அது வெற்றிகரமாக இருக்குமா இல்லையா என்று பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால் தடுப்பூசியின் வெற்றியால் நாட்டு மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன, மேலும் இது உலகெங்கிலும் உள்ள 150 நாடுகளுக்கு உதவியது, நமது திசை சரியானது என்று உறுதியாக உணர்ந்தேன். இன்று நீங்கள் வெற்றி பெற்றதால், நம் திசை சரியானது என்று நான் மீண்டும் உணர்கிறேன்.

இந்த முறை வெளிநாட்டில், தடகளத்தில், அதிக பதக்கங்களை வென்றது பாரதம். துப்பாக்கிச் சுடுதலில் அதிகப் பதக்கம், வில்வித்தையில் அதிகப் பதக்கம், ஸ்குவாஷ் போட்டியில் அதிகப் பதக்கம், ரோயிங் பிரிவில் அதிக பதக்கம், பெண் குத்துச்சண்டையில் அதிகப் பதக்கம், மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக தங்கப்பதக்கம், டவர் கிரிக்கெட்டில் முதல் முறையாக தங்கப்பதக்கம், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக தங்கப்பதக்கம் என பதக்கங்கள் வென்றுள்ளோம். ஏராளமான தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறீர்கள். பெண்கள் குண்டு எறிதலில் எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளோம்; அறுபத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு 4×4 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்றுள்ளோம்; நாற்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்திலும் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் பேட்மிண்டனிலும் பதக்கம் வென்றோம். அதாவது, நான்கு, ஐந்து, ஆறு தசாப்தங்களாக நாடு இந்த செய்தியைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தது; அதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்.

இந்த விளையாட்டுகளில் நமது பெண்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நமது வீராங்கனைகள்  காட்டிய ஆர்வம் பாரதத்தின் மகள்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நமது வீராங்கனைகளால் கிடைத்தவை. உண்மையில், இந்த வரலாற்று வெற்றியை நமது மகளிர் கிரிக்கெட் அணி தொடங்கியது.

பாரதத்தின் இளைஞர் திறன் ஒவ்வொரு துறையிலும் தெரிகிறது. உங்களைப் போன்ற அனைத்து வீரர்கள் மீதும் நாடு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பிக்கையில்தான் '100 பதக்கங்கள்' என்ற முழக்கத்தை  முன்வைத்தோம். அந்த ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். அடுத்த முறை இந்த சாதனையை விட இன்னும் மேலே செல்வோம். இப்போது ஒலிம்பிக் போட்டியும் நம் முன் உள்ளது. பாரிஸுக்கு விடாமுயற்சியுடன் தயாராகுங்கள். இந்த முறை வெற்றி பெற முடியாதவர்கள், ஏமாற்றமடைய தேவையில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய முயற்சிகளை மேற்கொள்வோம். நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 22 முதல் தொடங்கவுள்ளன. பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் உங்கள் மூலம் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அற்புதமான செயல்திறனுக்காகவும், அற்புதமான சாதனைக்காகவும், நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒரு முறை பாராட்டுகிறேன்.

மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டுமே. பிரதமர் திரு.நரேந்திரமோடி இந்தியில் உரை நிகழ்த்தினார்.

***

(Release ID:1966460)

ANU/SMB/BS/AG/KRS



(Release ID: 1967554) Visitor Counter : 105