பிரதமர் அலுவலகம்

ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை

Posted On: 18 AUG 2023 3:35PM by PIB Chennai

மேதகு தலைவர்களேவணக்கம்!

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்தியாவிற்கும், எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். உங்களை வரவேற்பதில் என்னுடன் 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மற்றவர்கள் உள்ளனர்.

நண்பர்களே,  

ஆரோக்கியத்தை ஒரு முக்கியமான அம்சமாகக் கருதிய காந்தியடிகள், 'ஆரோக்கியத்தின் திறவுகோல்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். ஆரோக்கியமாக இருப்பது என்பது மனதையும் உடலையும் இணக்கத்துடனும் சமநிலையுடனும் வைத்திருப்பதாகும் என்று அவர் கூறினார். உண்மையில், ஆரோக்கியம் தான் வாழ்க்கையின் அடித்தளம். இந்தியாவில் சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'ஆரோக்கியமே இறுதிச் செல்வம், நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியும்'.

நண்பர்களே,

கோவிட் -19 தொற்றுநோய் நாம் எடுக்கும் முடிவுகளின் மையப் புள்ளியாக சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டியுள்ளது. மருத்துவம் மற்றும் தடுப்பூசி விநியோகங்களில் அல்லது எங்கள் மக்களை தாயகம் அழைத்து வருவதில் சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பையும் இது எங்களுக்குக் காட்டியது. மைத்ரி தடுப்பூசி முன்முயற்சியின் கீழ், உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா 300 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வழங்கியது. மீள்திறன் இந்த காலத்தின் மிகப்பெரிய கற்றல்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலகளாவிய சுகாதார அமைப்புகளும் நெகிழ்திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அடுத்த சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், தயாராகவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் இது மிகவும் முக்கியமானது. தொற்றுநோய்களின் போது நாம் பார்த்தது போல, உலகின் ஒரு பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மற்ற அனைத்து பகுதிகளையும் பாதிக்கும்.

நண்பர்களே,

இந்தியாவில், நாங்கள் ஒரு முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். நாங்கள் சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகிறோம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறோம், அனைவருக்கும் மலிவு சுகாதாரத்தை வழங்குகிறோம். சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய கொண்டாட்டம் முழுமையான ஆரோக்கியத்திற்கான உலகளாவிய விருப்பத்திற்கு சான்றாகும். இந்த ஆண்டு, 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அறியப்படும் சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னா, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. முழுமையான ஆரோக்கியம்  அனைவரின் மீள்திறனை மேம்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவது இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். மேலும், ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்துவது அதன் திறனைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும். பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய களஞ்சியத்தை உருவாக்குவது நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும் இயற்கையாகவே இணைக்கப்பட்டுள்ளன. சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், போதுமான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை ஆரோக்கியத்தின் முக்கிய காரணிகளாகும். காலநிலை மற்றும் சுகாதார முன்முயற்சியைத் தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக நான் உங்களை பாராட்டுகிறேன். ஏஎம்ஆர் எனப்படும் நுண்ணுயிர் எதிர் நடவடிக்கைகள் வலுவிழத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை. .எம்.ஆர் என்பது உலகளாவிய பொது சுகாதாரம் மற்றும் இதுவரையிலான அனைத்து மருந்து கண்டுபிடிப்பு முன்னேற்றங்களுக்கும் ஒரு பெரிய சவால். ஜி 20 சுகாதார பணிக்குழு 'ஒரு ஆரோக்கியம்' என்பதற்கு முன்னுரிமை அளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற எங்கள் தொலைநோக்குப் பார்வை, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு - முழு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நல்ல ஆரோக்கியத்தை எதிர்பார்க்கிறது. யாரும் விடுபட்டு விடக்கூடாது என்ற காந்தியடிகளின் செய்தியை இந்த ஒருங்கிணைந்த பார்வை சுமந்து செல்கிறது.

நண்பர்களே,

சுகாதார முன்முயற்சிகளின் வெற்றிக்கு பொதுமக்களின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணியாகும். இது எங்கள் தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். காசநோயை ஒழிப்பதற்கான எங்கள் லட்சியத் திட்டமும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. காசநோயை ஒழிப்பதற்கான நண்பர்களாக மாறவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் . இதன் கீழ், கிட்டத்தட்ட 1 மில்லியன் நோயாளிகள் குடிமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது, உலகளாவிய இலக்கான 2030 க்கு முன்பே காசநோய் ஒழிப்பை அடைவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்.

நண்பர்களே,

டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எங்கள் முயற்சிகளை சமமாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான ஒரு பயனுள்ள வழியாகும். தொலைதூரத்திலிருந்து வரும் நோயாளிகள் தொலை மருத்துவம்  மூலம் தரமான கவனிப்பைப் பெறலாம். இந்தியாவின் தேசிய தளமான -சஞ்சீவினி இதுவரை 140 மில்லியன் தொலை மருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவின் கோவின் தளம் மனித வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக எளிதாக்கியது. இது 2.4 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதையும், உலகளவில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழ்களை நிகழ்நேரத்தில் கிடைப்பதையும் நிர்வகித்தது. டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய முன்முயற்சி பல்வேறு டிஜிட்டல் சுகாதார முன்முயற்சிகளை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். நமது கண்டுபிடிப்புகளை மக்கள் நலனுக்காக வெளியிடுவோம். நிதி மோசடி செய்வதைத் தவிர்ப்போம். தொழில்நுட்பம் சமமாக கிடைக்க வழிவகை செய்வோம். இந்த முன்முயற்சி உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளை சுகாதார பராமரிப்பு வழங்கலில் உள்ள இடைவெளியை நிரப்ப அனுமதிக்கும். உலகளாவிய சுகாதார பாதுகாப்பை அடைவதற்கான எங்கள் இலக்கை நோக்கி இது நம்மை ஒரு படி நெருக்கமாக அழைத்துச் செல்லும்.

நண்பர்களே,

மனித நேயத்தின் மீதான ஒரு பண்டைய இந்திய விருப்பத்துடன் நான் நிறைவு செய்கிறேன்: 'அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், அனைவரும் நோயிலிருந்து விடுபடுங்கள்'. உங்கள் ஆலோசனைகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

நன்றி!

----

(Release ID: 1950094)

ANU/SM/PKV/KRS



(Release ID: 1950249) Visitor Counter : 121