மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலம் காந்திநகரில் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


செமிகான் இந்தியாவின் 2 வது மாநாட்டில் உலகளாவிய தொழில்துறை, கல்வி மற்றும் அரசின் தலைவர்கள் பங்கேற்றனர்

Posted On: 29 JUL 2023 9:29AM by PIB Chennai

மின்னணுத் துறையில் கவனம் செலுத்தி தொழில்நுட்பப் புரட்சியை இந்தியா முன்னெடுத்து வருகிறது. புரட்சியின் ஒரு பகுதியாக, செமிகண்டக்டர்கள்  தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டுள்ளன.  தகவல்தொடர்பு, பாதுகாப்பு, மோட்டார் வாகனங்கள், கணினி சாதனங்கள் உட்பட அனைத்துத்  துறைகளிலும் பயன்பாடுகளை அவை  கொண்டுள்ளன. தேச முன்னேற்றத்தின் முக்கிய தூணான 'மின்னணு' மற்றும் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியா அதன் மதிப்புத் தொடரை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும், உலகத் தரம் வாய்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை எளிதாக்கவும் தயாராக உள்ளது.

 

செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை எடுத்துக் காட்ட, செமிகான் இந்தியா 2022 மாநாடு கடந்த ஆண்டு பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 'இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பைத் தூண்டுதல்' என்ற கருப்பொருளுடன் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை நடத்துகிறது.. இந்த மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த 8,000-க்கும் அதிகமானோர்  கலந்து கொண்டுள்ளனர். செமிகான்இந்தியா 2023-ல் மைக்ரான் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், கேடன்ஸ் மற்றும் ஏஎம்டி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை சங்கமான செமி ஆகியவற்றின் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

மூன்று நாள் செமிகான் இந்தியா 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார், மேலும் தனது சிறப்பு உரையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் செமிகண்டக்டர்களின் பங்கு மற்றும் செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்க இந்தியா எவ்வாறு உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு உற்பத்தியில், குறிப்பாக செமிகண்டக்டர்களில் கவனம் செலுத்தி இந்தியாவின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைப்பதில்  பிரதமரின் பங்களிப்பை  எடுத்துரைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல்,  மின்னணு மற்றும் செமிகண்டக்டர்கள் குறித்த  பிரதமரின் தொலைநோக்கு வழிகாட்டுதலைப் பாராட்டினார்.

 

 உலகளாவிய பல்வேறுதொழில்துறை தலைவர்கள் "இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். செமிகண்டக்டர் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்ரான் சார்பாக பேசிய திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா, இந்தியாவின் உற்பத்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.  இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மைக்ரான் பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் கூறினார். செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் முக்கிய பலங்களில் வலுவான அரசு ஆதரவு மற்றும் முன்முயற்சிகள், தொழில்நுட்ப திறமைகளின் தொகுப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு மற்றும் நடந்து வரும் டிஜிட்டல் இந்தியா மாற்றம் ஆகியவை அடங்கும் என்று கேடன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிருத் தேவ்கன் கூறினார்.

 

செயற்கை நுண்ணறிவு, தூய்மையான எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங், மேம்பட்ட தரவு உருவாக்கம் மற்றும் பரிமாற்ற அமைப்புகள் மூலம் டிஜிட்டல் மாற்றம் போன்ற காரணிகளால் செமிகண்டக்டர் தொழில் வளர்ச்சியை அனுபவித்து வருவதாக அப்ளைடு மெட்டீரியல்ஸ் எஸ்பிஜி தலைவர் பிரபு ராஜா கூறினார். ஃபிளாஷ் மெமரி மற்றும் அத்தியாவசிய சேமிப்பக உள்கட்டமைப்பில் முன்னணி நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிட்டல் தலைவர் திரு சிவ சிவராம், இந்தியாவில் ஒரு செமிகண்டக்டர் விநியோக தொடரை நிறுவ, அறிவுசார் சொத்து உருவாக்கம் அவசியம் என்று கருதினார்.

 

அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைசஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி  (ஏ.எம்.டி., சி.டி.ஓ.) திரு மார்க் பேப்பர்மாஸ்டர், செயற்கை நுண்ணறிவு ஊடுருவல் நிலை  குறித்தும், இந்தியாவுக்கான அதன் மகத்தான திறன் குறித்தும் பேசினார்.  இந்த துறையில் புதுமைகளை ஏஎம்டி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஏஎம்டிக்கான உலகின் மிகப்பெரிய வடிவமைப்பு மையமாக இந்தியாவை நிறுவவிருக்கிறது என்றும் அவர் கூறினார். மூர் விதி சகாப்தத்திற்குப் பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை  ஃபாக்ஸ்கானின் தலைமை உத்தி வகுத்தல்  அதிகாரி திரு.எஸ்.ஒய்.சியாங் முன்வைத்தார். கணினி வடிவமைப்பு மற்றும் பகிர்வு, பேக்கேஜிங் மற்றும் பிசிபி தொழில்நுட்பம் மற்றும் ஐஓடி போன்ற பயன்பாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் செமிகண்டக்டர் தொழில்துறையில் வளர்ந்து வரும் தேவைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

 

கூடுதலாக, செமிகண்டக்டர் மற்றும் காட்சிச் சூழல் அமைப்பை உள்ளடக்கிய பல்வேறு பொருத்தமான கருப்பொருள்கள் குறித்து விவாதிக்க குழு விவாதங்கள் நடைபெற்றன. டாக்டர் மணீஷ் ஹூடா, எஸ்.சி.எல். திரு விவேக் சர்மா, எஸ்.டி.எம். ,டாக்டர் யீ ஷை சாங், தொழில்நுட்ப தூதர், ஐசிஇஏ; ரோஹித் கிர்தர், இன்ஃபினியன் டெக்னாலஜிஸ்; ஸ்ரீராம் ராமகிருஷ்ணன், வர்த்தகத் தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்; தர்ஷன் ஹிரானந்தனி, ஹிராநந்தனி குழுமம் ஆகியோர் இந்தியாவில் காம்பவுண்ட் செமிகண்டக்டர்கள் தயாரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவாதித்தனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிலிக்கான் கார்பைடுக்கு முன்னுரிமை அளிக்கவும், கணினி வடிவமைப்பு மற்றும் காலியம் நைட்ரைடு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் பேச்சாளர்கள் பரிந்துரைத்தனர்.

 

 தொழில்நுட்ப-நிதி எதிர்பார்ப்புகளை வலியுறுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்தும்  விவாதித்தனர். வணிகத் திட்டம் மற்றும் செயலாக்கத் திட்டத்தின் நம்பகத்தன்மை இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின்  (ஐ.எஸ்.எம்) எதிர்கால முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாக செயல்படும் என்று அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

உலகளாவிய செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியில் இந்தியாவுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது, மேலும் செமிகான் இந்தியா 2023 இந்தியாவில் செமிகண்டக்டர் சூழல் அமைப்பை வடிவமைக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க பங்கேற்பாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்கியது.

***

AP/SMB/DL



(Release ID: 1943941) Visitor Counter : 138