பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின விழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

Posted On: 11 MAY 2023 3:16PM by PIB Chennai

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சக ஊழியர்களான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் எனது இளம் சக ஊழியர்களே, இந்திய வரலாற்றின் பெருமைமிகு நாட்களில் இன்றைய நாளும் ஒன்று.  இந்த நாளில் தான் இந்திய அறிஞர்கள் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் பெருமை பட வைத்தனர். அடல் பிகாரிப் வாஜ்பாய், இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதை இந்த நாளில் அறிவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியாவின் அறிவியல் வல்லமையை நிரூபித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தையும் நிலை நிறுத்தியது. “நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தவொரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை” என்ற அடல் பிகாரி வாஜ்பாய்-ன் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்.

நண்பர்களே         

இன்று தொடங்கப்பட்ட எதிர்காலத் திட்டங்கள்,  நவி மும்பையில் உள்ள தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவு, மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி வசதி, விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர  காந்த ஆலை அல்லது பல்வேறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைகள், அணு தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் வளர்ச்சிக்கு  உதவிடும். எல்ஐஜிஓ 21-ம் நூற்றாண்டின் மிகமுக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னெடுப்புகளில் ஒன்று. கண்காணிப்பகம் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அளிக்கும்,

நண்பர்களே,

அமிர்த காலத்தின் தொடக்க நிலையில் 2047-ம் ஆண்டிற்கான குறிக்கோள்கள் நம்மிடம் தெளிவாக உள்ளன. நாட்டை நாம் வளர்ச்சியடைந்ததாகவும், தற்சார்புடையதாகவும் மாற்ற வேண்டும். வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், நிதி வளர்ச்சிக்கான நோக்கங்கள் ஆகியவற்றுக்கு  உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நிலையிலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் இன்றியமையாதது. அந்தவகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த அணுகுமுறை என்ற வகையில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான கருவியாக தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது. ஆனால் அதன் ஆதிக்கத்தை வலியுறுத்தவில்லை. ‘பள்ளியில் இருந்து ஸ்டார்ட்அப்- இளையோரின் மனங்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு தயார்ப்படுத்துதல்’ என்ற இந்நிகழ்ச்சியின் இன்றைய கருப்பொருளே பாராட்டுதலுக்குரியது. இந்தியாவின் எதிர்காலத்தை இன்றைய இளைஞர்களும் குழந்தைகளும் தீர்மானிப்பார்கள். இன்றைய குழந்தைகள், இளைஞர்களின் ஆர்வம், சக்தி, திறன் இந்தியாவின் மாபெரும் வலிமை ஆகும்.  

நண்பர்களே,

தலைசிறந்த அறிவியல் அறிஞரும், நமது முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம், கூறிய கருத்துக்களை குறிப்பிட்ட பிரதமர்,  நடவடிக்கைகளுடன் கூடிய அறிவாற்றல் நாட்டின் வளத்திற்கு வலு சேர்க்கும்.  இந்தியா அறிவுசார் சமூகமாக வளர்ந்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்றமும் சம வேகத்தில் நடைபெறுகிறது.  இளையோரின் மனங்களை தயார்ப்படுத்துவதற்கு  கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வலிமையான அடித்தளங்கள், 35 மாநிலங்களின் 700 மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடல் ஆய்வகங்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான பண்ணைகளாக திகழ்கின்றன. இதில் 60 சதவீத ஆய்வகங்கள் அரசு மற்றும் ஊரகப்பள்ளிகளில் அமைந்துள்ளன. அடல் ஆய்வகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பு திட்டங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிகளில் இருந்து இளம்விஞ்ஞானிகள் வெளிவருவதன் அடையாளம் இது. அவர்களின் திறமைகளை கண்டறிந்து கைகோர்த்து அவர்களுடைய சிந்தனைகளை அமல்படுத்த உதவுவது அனைவருடைய கடமை. அடல் புத்தாக்க மையங்களில் நூற்றுக்கணக்கான ஸ்டார்டப் நிறுவனங்கள் உள்ளன. புதிய இந்தியாவின் புதிய ஆய்வகங்களாக இது உருவாகி வருகிறது. இந்தியாவின் தொழில்முனைவோர் விரைவில் உலகின் முன்னணி தொழில்முனைவோராக இருப்பார்கள்.

நண்பர்களே,

நம்முடைய இலக்கை நோக்கி முழு அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை அனைத்தும் நமது கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பதே மகரிஷி பதஞ்சலியின் தாரக மந்திரம். அதன்படி 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டார்டப் அப் இந்தியா இயக்கம், டிஜிட்டல் இந்தியா, தேசிய கல்விக்கொள்கை ஆகியவை இத்துறையில் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவுகின்றன.  புத்தகம் என்ற நிலையை கடந்து ஆராய்ச்சி மூலம் காப்புரிமை என்ற நிலையை அறிவியல் அடைந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 4000 காப்புரிமைகள் என்றிருந்த நிலை, தற்போது 30,000-க்கு மேலான காப்புரிமைகள்  என மாறியிருக்கின்றன.  அதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு எண்ணிக்கை 10,000 லிருந்து 15,000 ஆக அதிகரித்துள்ளது.  வர்த்தக முத்திரைகளின் எண்ணிக்கை 70,000-க்கும் குறைவாக இருந்த நிலையில், அது தற்போது 2,50,000-த்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியா இன்று அனைத்து திசைகளிலும்  முன்னேறி வருகிறது. இது தொழில்நுட்ப தலைவராக  மாறுவதற்கு தேவையானது. 2014-ம் ஆண்டில் சுமார் 150-ஆக இருந்த தொழில்நுட்ப ஆய்வு மையங்களின் எண்ணிக்கை தற்போது 650-ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்களின் சொந்த டிஜிட்டல் தொழில்களையும், புத்தொழில்களையும் தொடங்குவதால், உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான  குறியீட்டு தரவரிசையில் இந்தியா 81-ல் இருந்து 40-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை நூறிலிருந்து ஒரு லட்சம் வரை அதிகரித்துள்ளது.  இதனால், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் தொழில்களை கொண்டதாக இந்தியா மாறியுள்ளது.  உலகம் பொருளாதார ஸ்திரமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது இந்தியாவின் திறமை மற்றும் வல்லமையை வெளிப்படுத்துகிறது. கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிவியல் சமூகத்தினர், நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தனியார் துறையினருக்கு இது மிக முக்கியமான காலக்கட்டம். ஸ்டார்ட்-அப் பள்ளிகளின் பயணம்,  நம்முடைய மாணவர்களை வழிநடத்தி ஊக்குவிக்கும். எனவே நீங்கள் அனைவரும் அவர்களுக்கு உங்களது முழு ஆதரவை அளிக்க வேண்டும்.

நண்பர்களே,

தொழில்நுட்பத்தின் சமூக சார்பை மனதில் கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். அதனால் தொழில்நுட்பம் என்பது  அதிகாரம் அளித்தலுக்கு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. பாகுபாட்டைக் களைவதற்கும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும் இது ஒரு கருவியாக மாறியுள்ளது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்பம் சென்றடையாத காலத்தில், பணம் எடுத்தல், கடன் பெறுதல் ஆகியவற்றுக்கான அட்டைகள் போன்றவை அந்தஸ்தின் அடையாளங்களாக இருந்தன. தற்போது எளிதாக கையாளும் நடைமுறை காரணமாக யுபிஐ இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. ஜிஇஎம் இணையப்பக்கம், கோ வின் இணையப்பக்கம், இ-நாம் போன்றவை அனைவரையும் உள்ளடக்கிய  முகமையாக தொழில்நுட்பங்கள் மூலம் அரசு மாற்றியுள்ளது.

நண்பர்களே

சரியான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சமூகத்திற்கு புதிய பலத்தை வழங்குகிறது. வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் சேவைகள் வழங்க தற்போது  தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது. இணைய தளம் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள், இ-கற்றல் தளங்கள், படிப்புதவி இணையப்பக்கம், மருத்துவ சிகிச்சைக்கான இ-சஞ்சீவினி, மூத்த குடிமக்களுக்கான  ஜீவன் பிரமாண் போன்றவை அனைத்து நிலைகளிலும் குடிமக்களுக்கு உதவுகின்றன. எளியமுறையில் பாஸ்போர்ட்கள், டிஜி யாத்திரை செயலி, டிஜி லாக்கர் போன்ற அரசின் முன்முயற்சிகள் சமூக நீதியை உறுதி செய்யவும், வாழ்க்கையை எளிதாக்குவதை விரிவுபடுத்தவும் பெரும் பங்காற்றுகின்றன.

நண்பர்களே,

தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் அதிவேகமாக அன்றாடம் உருவாகி வருகின்றன. இந்திய இளைஞர்கள் இந்த வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு, அதனைக் கடந்தும் செல்வார்கள். பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தற்சார்பு இலக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஐடெக்ஸ் அல்லது பாதுகாப்பு மேன்மைக்கான புதிய கண்டுபிடிப்பு பற்றி கூறியதோடு, ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14 புதிய கண்டுபிடிப்புகளை ஐடெக்ஸிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் கொள்முதல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நண்பர்களே,

பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் இளைய அறிவியல் அறிஞர்களுக்கான ஆய்வகங்கள் போன்ற புதிய முன்னெடுப்புகள் அரசின் முயற்சிகளுக்கு புதிய பாதையை அமைத்துள்ளன. புதிய சீர்திருத்தங்கள் வாயிலாக விண்வெளித்துறையில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. அதன் பிரதிபலிப்பாக எஸ்எஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி புவி வட்டப்பாதை தொழில்நுட்பங்கள் திகழ்கின்றன. குறிப்பாக விண்வெளித்துறையில் ஸ்டார்ட்-அப்களை தொடங்க இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

செமி கண்டக்டர்கள் போன்ற புதிய வழிமுறைகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற கொள்கை அளவிலான முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில், திறமை வாய்ந்த இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு தொழில்துறைக்கும், தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கும் உண்டு.

நண்பர்களே,

பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பில்  ஹேக்கத்தான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. புதிய சவால்களை மேற்கொள்ளும் மாணவர்களிடையே ஹேக்கத்தான் கலாச்சாரத்தையும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் உருவாக்க அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.  இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் திறமை வாய்ந்தவர்களுக்கு தோள் கொடுத்து அவர்கள் எவ்வித தடைகளுமின்றி வேகமாக முன்னேற வழிவகுக்க வேண்டும். அடல் புத்தாக்க ஆய்வகங்கள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்த்து வருகிறோம். வேறுபட்ட துறைகளில் அடல் சோதனை கூடங்கள் போன்று நூறு சோதனைக் கூடங்களை நாம் கண்டறிய முடியுமா?   தூய எரிசக்தி, இயற்கை வேளாண்மை போன்ற அரசு சிறப்பு கவனம் செலுத்தும். துறைகளில்  ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான இந்த முயற்சிகளின் இளைஞர்களை இயக்கமாக உருவாக்கி பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம். இதற்கான சாத்தியங்களை நனவாக்க தேசிய தொழில்நுட்ப வாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  

******

AD/ES/RJ/KRS



(Release ID: 1926303) Visitor Counter : 140