பிரதமர் அலுவலகம்

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்

மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் அமையவுள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் தொடங்கிவைத்தார்

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியின் சின்னத்தை திறந்து வைத்து, அருங்காட்சியகத்தில் ஒரு நாள், இந்திய அருங்காட்சியகங்களின் பதிவேடு, கடமைப்பாதையின் கையடக்க வரைபடம், அருங்காட்சியக அட்டைகளை வெளியிட்டார்

“அருங்காட்சியகம் கடந்த காலத்தின் ஊக்கத்தை வழங்குவதுடன் வருங்காலத்தை நோக்கிய கடமை உணர்வையும் அளிக்கிறது”

“நாட்டில் ஒரு புதிய கலாச்சார உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது”

“ஒவ்வொரு மாநிலம், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவின் பாரம்பரியத்துடன் உள்ளூர் மற்றும் கிராமப்புற அருங்காட்சியகங்களை பாதுகாக்கும் சிறப்பு பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டு வருகிறது”

“பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து புத்த பகவானின் பக்தர்களை ஒன்றுபடுத்தியுள்ளது”

“நமது பாரம்பரியம் உலக ஒற்றுமையின் முன்னோடியாக மாறக்கூடும்”
“வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை, பொருட்களை பாதுகாக்கும் உணர்வு சமுதாயத்தில் உருவாக்குவோம்”

Posted On: 18 MAY 2023 12:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பிரகதி மைதானத்தில் இன்று சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை தொடங்கிவைத்தார். மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில்  அமைய உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தொழில்நுட்ப மேளா, பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துவக்கிவைத்தார். அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை நலம் என்ற இந்தாண்டின் கருப்பொருளுடனான  47-வது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தைக் கொண்டாட, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அருங்காட்சியகத் தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியப் பிரதமர், விடுதலையின் 75- ஆண்டு அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடுவதைக் குறிப்பிட்டார்.  சர்வதேச அருங்காட்சியக  கண்காட்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்கள் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகக் கூறினார். அருங்காட்சியகத்தில் நாம் நுழையும்போது, கடந்த காலத்தை நோக்கிச் செல்கிறோம். அருங்காட்சியகம் ஆதாரத்தின்  அடிப்படையிலான உண்மையான நிலையை நமக்கு அளிக்கிறது. கடந்த காலத்தில் இருந்து ஊக்கத்தையும், எதிர்காலத்தை நோக்கிய கடமை உணர்வையும் அருங்காட்சியகம் நமக்கு அளிக்கிறது. அருங்காட்சியகத்தின் இன்றைய கருப்பொருள், தற்போதைய உலகின் முன்னுரிமைகளை பறைசாற்றுவதுடன், இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாக இந்த நிகழ்ச்சியை மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்றைய முயற்சிகள், இளைய தலைமுறையினர், தங்களது பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ள வைக்கும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு, தாம் வருவதற்கு முன்பாக, அருங்காட்சியகத்திற்கு பயணம் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். பார்வையாளர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மிக அழகாக திட்டமிடப்பட்டு கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு, இந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமையும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நமது நிலத்தின் ஏராளமான பாரம்பரியம், நூற்றாண்டுகளாக நீடித்த அடிமை யுகத்தில் தொலைந்து விட்டதாக குறிப்பிட்டப் பிரதமர், ஏராளமான  பண்டைக்கால கையெழுத்து பிரிதிகளும், நூலகங்களும் எரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இது இந்தியாவிற்கான இழப்பு மட்டுமல்லாமல், உலகப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்று அவர் கூறினார். நமது நாட்டில் நீண்ட கால பாரம்பரியத்தைப் பாதுகாத்து. புத்துயிரூட்ட  சுதந்திரத்துக்கு பின்னர், மெத்தனமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை குறைகூறிய அவர், மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாதது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியதாகக் கூறினார். விடுதலையின் அமிர்த காலத்தில் மேற்கொள்ளவேண்டிய ஐந்து உறுதிமொழிகள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், நமது பாரம்பரியப் பெருமையை பறைசாற்றும் விதமாக, நாட்டில் புதிய கலாச்சார, உள்ளட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இத்தகையை முயற்சிகளில் விடுதலைக்கான இந்தியாவின் போராட்ட வரலாற்றை நாம் அறிந்துகொள்ளலாம். இதேபோல, நாட்டின் ஆயிரமாண்டு பழைமையான பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்ளலாம் என அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலம், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவின்  பாரம்பரியத்துடன் உள்ளூர் மற்றும் கிராமப்புற அருங்காட்சியகங்களை பாதுகாக்கும் சிறப்பு பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஐந்து சிறப்பு அருங்காட்சியகங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். பழங்குடியினரின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூறும் மிகச் சிறந்த தனித்துவமான முன் முயற்சியாக இது இருக்கும் என்றார் அவர்.  நாட்டில்  பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பாக, உதாரணங்களை எடுத்துரைத்தப் பிரதமர், உப்புச் சத்தியக்கிரகத்தின் போது, மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையை குறிப்பிட்டு, காந்தி எந்த இடத்தில் உப்புச் சட்டத்தை மீறினாரோ அந்த இடத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தைச் சுட்டிகாட்டினார்.  தில்லியில் உள்ள அலிப்பூர் சாலை 5-ம் எண் முகவரியில், டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் மகா பரிநிர்வாண ஸ்தலம், மறு சீரமைக்கப்பட்டு வருவதை அவர் குறிப்பிட்டார். அவர் பிறந்த மாவ் என்னுமிடத்தில் அவரது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஐந்து தீர்த்தங்கள் உருவாக்கப்படுவதுடன், அவர் வாழ்ந்த லண்டன், நாக்பூர், அவரது நினைவிடம் அமைந்துள்ள மும்பை சைத்திய பூமி ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். சர்தார் படேலின் ஒற்றுமை சிலை, பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக், குஜராத்தில் கோவிந்த் குருஜியின் நினைவிடம், வாரணாசியில் மன் மகால்  அருங்காட்சியகம், கோவாவில் கிறித்வ கலை அருங்காட்சியகம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகளை அவர் தெரிவித்தார். தில்லியில் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், அமைக்கப்பட்டுள்ள பிரதமர் சங்கிரகாலயா பற்றியும் கூறிய அவர், அந்த அருங்காட்சியகத்தை ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரு நாடு, தனது பாரம்பரியத்தை பாதுகாக்கத் தொடங்கும் போது, மற்ற நாடுகளுடன் நெருங்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து புத்த பகவானின் பக்தர்களை ஒன்றுபடுத்தியுள்ளது என்றார் அவர். கடந்த புத்த பூர்ணிமாவின் போது, மங்கோலியாவுக்கு ஐந்து புனிதச் சின்னங்களை அனுப்பியதையும், குஷி நகருக்கு  இலங்கையில் இருந்து புனிதச்சின்னங்கள் வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல, கோவாவின் புனித கெட்டேவான் மரபும், இந்தியாவில் பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் புனிதச் சின்னங்கள் அனுப்பப்பட்டபோது ஜார்ஜியாவில் காணப்பட்ட உற்சாகத்தை அவர் நினைவு கூர்ந்தார். நமது பாரம்பரியம் உலக ஒற்றுமையின் முன்னோடியாக மாறி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

நம்முடைய இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து எடுத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், பல இயற்கை சீற்றங்களின் உண்மையான முகத்தையும், அதனை இந்த பூமி எதிர் கொண்ட விதத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் மாபெரும் முயற்சியால் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிறுதானியங்களின் அளப்பறிய பயன்கள் உலக நாடுகளுக்கு முன்னெடுத்து செல்லப்பட்டிருப்பதாக கூறிய அவர், சிறு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் வரலாற்றை, எதிர்கால சந்ததிக்கு முன்னிறுத்த ஏதுவாக புதிய அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பமும், தங்களுடைய குடும்பத்தினருக்காக குடும்ப  அருங்காட்சியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இதன் மூலம் இன்று சாதாரண நிகழ்வுகளாக தோன்றும் சம்பவங்கள் எதிர்கால சந்ததிக்கு உணவுப்பூர்வமான உடைமையாக மாறும் என்றும் தெரிவித்தார். இதேபோல் பள்ளிகளும், உயர்கல்வி நிறுவனங்களும், நகரங்களும் தங்களுடைய அருங்காட்சியகங்களை அமைப்பது, எதிர்கால சந்ததிக்கு மிகப்பெரிய வரலாற்று உடைமையாக உருமாறும் என்றார்.

அவ்வாறு அமைக்கப்படும் அருங்காட்சியகங்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான  வாய்ப்பாக மாறும் என்று வலியுறுத்திய அவர், அதற்காக இளைஞர்களை அருங்காட்சியகப் பணியாளர்களாகக் கருதக் கூடாது என்றும் குறிப்பிட்டார். வரலாறு மற்றும் கட்டிடக்கலை துறை சார்ந்த இளைஞர்கள், உலகளாவிய கலாச்சார நடவடிக்கைகளின் அங்கமாக மாறும் வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். நம்முடைய கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொண்டதை, நிகழ்காலத்தில் பயன்படுத்த இளைஞர்கள்  முன்வரும்போது, அவர்கள் தேசத்தின் பாரம்பரியத்தையும் உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் கருவியாக அறியப்படுவார்கள் என்றார்.

பிற நாடுகளுக்குக் கலைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பது  மாபெரும் சவாலாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பண்டைய கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் கலைப் பொருட்கள் கடத்தப்படுவது  பலநூறு ஆண்டுகளாக தொடர்வதாகவும் கூறினார்.

சுதந்திரத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் இந்தியாவிலிருந்து பல கலைப்பொருட்கள் நியாயமற்ற முறையில் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தக் குற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். உலகின் பல நாடுகளும் இந்தியாவின் பொருட்களை தாயகத்திற்கு அனுப்ப முன்வந்திருப்பதாக கூறிய பிரதமர், இதற்கு உதாரணமாக பனாரஸிலிருந்து கடத்தப்பட்ட மாதா அன்னபூரணி சிலை, குஜராத்திலிருந்து திருடப்பட்ட மகிஷாசூரமர்தினி சிலை, சோழமன்னர் காலத்து நடராஜர் சிலை, உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 240 பண்டைய கலைப்பொருட்கள் பிற நாடுகளிலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சுதந்திரத்திற்கு பிறகான கடந்த 70 ஆண்டுகளில் 20க்கும் குறைவான கலைப் பொருட்களே மீட்கப்பட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் தமது அரசின் கடந்த 9 ஆண்டு ஆட்சிக்காலத்தில், கலாச்சாரக் கலைப்பொருட்களின் கடத்தல் கணிசமாக குறைந்திருப்பதாகவும்,  தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள், குறிப்பாக அருங்காட்சியத்துடன் தொடர்பு கொண்டவர்கள், இந்தத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, நம்முடைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாம் புதிய மரபை உருவாக்குவோம் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த  நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, இணை அமைச்சர்கள்,  திரு. அர்ஜூன் ராம் மேஹ்வால், திருமதி. மீனாட்சி லேகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னணி

 

அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், 47-வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், இந்த சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. “அருங்காட்சியகங்கள்- நீடித்த நல்வாழ்வு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் கலாச்சார ராஜதந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கலாச்சார மையங்களின் வெளிப்பாடாக இந்தக் கண்காட்சி அமையும்.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அருகாட்சியகக் கண்காட்சியின் சின்னம், அருங்காட்சியகத்தின் ஒருநாள் வரைகலை நாவல், இந்திய அருங்காட்சியகங்களின் தொகுப்பு, அருங்காட்சியக அட்டைகள் மற்றும் கடமைப்பாதைக்கான வரைப்படம் ஆகியவற்றையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கண்காட்சியின் சின்னத்தில் சென்னாப்பட்டினத்தின் கலையை சித்தரிக்கும் வகையில் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட நடனமாடும் சிறுமி உருவம் இடம்பெற்றுள்ளது.

 

******

AD/PKV/ES/RS/KRS

(Release ID: 1925093)



(Release ID: 1925202) Visitor Counter : 245