வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 100வது ஜி20 கூட்டம்

Posted On: 17 APR 2023 10:19AM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ்,100வது ஜி20 கூட்டத்தை ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இன்று வாரணாசியில் வேளாண் துறையின் தலைமை விஞ்ஞானிகளின் கூட்டமானதே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடக்கும் 100வது ஜி20 கூட்டமாகும். 2வது சுகாதார பணிக்குழுக் கூட்டம் கோவாவிலும், இரண்டாவது டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுக் கூட்டம் ஐதராபாத்திலும், விண்வெளி  பொருளாதார தலைவர்களுக்கான முன்நிகழ்வு கூட்டம் ஷில்லாங்கிலும் இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 16 நவம்பர் 2022ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு.நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஓராண்டுகால ஜி20 தலைமைத்துவ பொறுப்பு 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டு வரும் 30 நவம்பர் 2023 வரை இருக்கும். முன்னதாக 8 நவம்பர் 2022ல் ஜி20 இலச்சினையும், ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் “வசுதெய்வ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” போன்றவற்றை பிரதமர் முன்மொழிந்து தொடங்கி வைத்தார். நமது தேசியக்கொடியின் வண்ணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜி20 இலச்சினை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பூமிக்கு ஆதரவான நமது அணுகுமுறை மற்றும் வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

ஜி20ன் உறுப்பு நாடுகள், (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக்குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 உறுப்பினர்களின் பங்களிப்பு சுமார் 85 சதவீதமாகும். மேலும், இது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 75 சதவீதமாகும். அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்காகும்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தில் நேரடியாக பங்குபெறும் நடவடிக்கை மிக அதிக அளவில் அமையப்பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஜி20 தொடர்பான கூட்டங்களில் சுமார் 110 நாடுகளைச் சேர்ந்த 12,300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஜி20 உறுப்பு நாடுகள், 9 அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளும் இதில் அடங்கும். இன்றைய தேதியில், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 41 நகரங்களில் 100 ஜி20 கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முழுமையான ஆதரவும், பங்களிப்புடன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. எந்தவொரு ஜி20 தலைமைத்துவ பொறுப்பின் கீழ் இல்லாத வகையில், இந்தியாவின் 60 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட ஜி20 தொடர்பான வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. அனைத்து 13 பிரதிநிதி பணிக்குழுக்கள், 8 நிதி பணிநிலைக் குழுக்கள், 11 அலுவல் குழுக்கள் மற்றும் 4 முன்முயற்சிகள் போன்றவைகள் நிலையான சந்திப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு, புதிய “ஸ்டார்ட் அப் 20” அலுவல் குழு, புதிய முன்முயற்சியான தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை கூட்டம் போன்றவைகள் நமது ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் செயல் வடிவம் பெற்றுள்ளது. தனியார் துறை, கல்வி, சமூகம், இளைஞர், பெண்கள் மற்றும் பாராளுமன்றங்கள், தணிக்கை அதிகாரிகள் மற்றும் நகர நிர்வாகங்கள் போன்றவைகளிடையே பேச்சு வார்த்தை நடுத்துவதற்கு ஒரு தளத்தை இந்த 11 அலுவல் குழுக்கள் ஏற்படுத்தி தருகின்றன.

இதுவரை மூன்று அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதல் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் (எஃப்எம்சிபிஜி) பெங்களூரில் 24-25 பிப்ரவரி 2023 அன்று நடைபெற்றது. ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (FMM) புது தில்லியில் 1-2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. இரண்டாவது நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்எம்சிபிஜி) கூட்டம் 12-13 ஏப்ரல் 2023 அன்று வாஷிங்டன் டிசி-இல் நடைபெற்றது. உதய்பூர் (4-7 டிசம்பர் 2022) மற்றும் குமரகம் (30 மார்ச் - 2 ஏப்ரல் 2023) ஆகிய இடங்களில் இரண்டு ஜி 20 பிரதிநிதி (ஷெர்பா) கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஷெர்பா சந்திப்புகளில் அமைச்சர்கள் நிலையிலான உயரதிகாரிகளுடன் கூடிய உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். 28 வெளியுறவு அமைச்சர்கள் (18 ஜி20 உறுப்பினர்கள், 9 விருந்தினர் நாடுகள் மற்றும் ஆபிரிக்க ஒன்றிய தலைவர் - கொமொரோஸ்) மற்றும் 2 துணை வெளியுறவு அமைச்சர்கள் (ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சர்கள் கூட்டங்களில், ஜி20 நாடுகளின் ஒருமித்த கருத்து கொண்ட பகிரப்பட்ட முன்னுரிமைகளில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்நோக்கு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவதல் மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கான ஜி20 நிபுணர் குழு அமைத்தல் ஆகியவைக்கு முதல் எஃப்எம்சிபிஜி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பலதரப்பு சீர்திருத்தங்கள், வளர்ச்சி ஒத்துழைப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, புதுவைகையான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், உலகளாவிய திறன் விவர வரைபடம் உருகாக்குதல் மற்றும் பேரழிவு ஆபத்து குறைப்பு ஆகியவற்றிற்கான ஜி20 நிபுணர் குழு அமைப்பதற்கு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா தனது தலைமைத்துவத்தின் போது, உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கோரிக்கைகளை மற்றும் சவால்களை விவரித்து வருகிறது. பிரதமர் தலைமையில் உலகளாவிய தெற்கு நாடுகளின் உச்சிமாநாடு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் 125 நாடுகள் கலந்து கொண்டன, 18 நாடுகளின் தலைவர்கள்/அரசு பிரதிநிதகள் அமைச்சர்களும் இதில் அடங்குவர். மேலும், இந்தியாவின் தற்போதைய தலைமைத்துவ காலத்தில்தான் இதுவரை இல்லாத அளவிற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பங்கேற்பு அதிகமாக உள்ளது. தென்னாப்பிரிக்கா (ஜி20 உறுப்பினர்), மொரிஷியஸ், எகிப்து, நைஜீரியா, ஆபிரிக்க ஒன்றிய தலைவர் - கொமொரோஸ் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய மேம்பாட்டு முகமை - ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய கூட்டாண்மை (AUDA-NEPAD) ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை பாரம்பரிய உள்ளடக்கம், கலாச்சார செழுமையைப் பறைசாற்றும் தனித்துவமான அனுபவங்கள், வருகை தரும் பிரதிநிதிகளின் நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். சிறுதானியங்கள் அடிப்படையிலான உணவுப் பொருட்கள் விருந்தினர்களின் உணவுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகள், சிற்றுலாக்கள் ஆகியவற்றுக்கு விரிவான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய கலை வடிவங்களை பறைசாற்றும், 7,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் 150-க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்கள் பங்கேற்கும் ஏராளமான நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் நாடு தழுவிய, சமுதாயம் தழுவிய அணுகுமுறையுடன் மக்களின் பங்கேற்புடன், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் மக்களின் ஜி20 ஆக மாற்றப்பட்டது. இவற்றில் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், மாதிரி ஜி20 கூட்டங்கள், பள்ளிகள்/ பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஜி20 அமர்வுகள், முக்கிய பெரிய பண்டிகைகளில் ஜி20 அமர்வுகள், விநாடி வினா போட்டிகள், செல்ஃபி எனப்படும் சுயபடப் போட்டிகள், ஜி20 இந்தியக் கதைகள், சிவில் சமுதாயத்தினர் மற்றும் தனியார் துறையினரின் நூற்றுக்கணக்கான இதர ஜி20 கருப்பொருள் நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின்போது மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள விவாதங்களில், அனைவரையும் உள்ளடக்கிய, பரந்த வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்றம், பசுமை மேம்பாடு, சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் முறை, தொழில்நுட்ப மாற்றம், பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சீர்திருத்த பன்முனை நிறுவனங்கள், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுடன் கூடிய விசாலமான முன்னுரிமை பகுதிகள் இடம் பெறும்.

செப்டம்பர் மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற உள்ள புதுதில்லி தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கான, அனைத்தையும் உள்ளடக்கிய லட்சிய நோக்குடன் கூடிய செயல்திறன் மிக்க உறுதியான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ ஏற்பாடுகள், ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகளின் மகத்தான ஆதரவைப் பெற்றுள்ளன. இந்தியாவின் ஜி20 கூட்டங்களில் ஏராளமான பிரதிநிதிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டிருப்பது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் அழைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சமகால உலகளாவிய சவால்களை கூட்டாகச் சமாளிக்க தீர்மானித்திருப்பது ஒரு சான்றாகும்.

(Release ID: 1917183)

AD/GS/SRI/PKV/RR

*****



(Release ID: 1917218) Visitor Counter : 1082