பிரதமர் அலுவலகம்

கர்நாடக மாநிலம் தார்வர்ட் மாவட்டம் ஹுப்பள்ளியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 12 MAR 2023 8:07PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

நண்பர்களே!

ஹுப்பள்ளிக்கு இந்த ஆண்டில் ஏற்கனவே ஒருமுறை வரும் வாய்ப்பைப் பெற்றேன். ஹுப்பள்ளி சாலைகளின் இருமருங்கிலும், சகோதர, சகோதரிகள் திரண்டு என் மீது காட்டிய அளப்பரிய அன்பையும், வழங்கிய ஆசியையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.  கடந்த காலங்களில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். பெங்களூரு முதல் பெலகாவி வரை, கலாபுரகி முதல் ஷிமோகா வரை,  மைசூரு முதல் துமாக்கூரு வரை கன்னட மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு அளவில்லை. உங்களது அன்புக்கும், பரிவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்நாடக  மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிந்து இதனை நான் திருப்பிச்செலுத்துவேன். கர்நாடகாவின் இரட்டை எஞ்சின் அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டம், கிராமம் மற்றும் குக்கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகுந்த நேர்மையுடன் பாடுபடுகிறது.

நண்பர்களே!

பல நூற்றாண்டுகளாக, மலேநாடு மற்றும் பயலு சீமைப் பகுதிகளின் நுழைவாயிலாக தார்வாட் திகழ்கிறது. இது அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்று, அனைவரிடமிருந்தும் கற்று தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, தார்வாட் ஒரு நுழைவாயிலாக மட்டும் இருக்காமல், கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிரதிபலிப்பாக மாறியது. இலக்கியம் மற்றும் இசைக்கு பெயர் பெற்ற கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமாக தார்வாட் அறியப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே!

புதிய பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலை  கர்நாடகாவின் மென்பொருள் மையம் என்ற அடையாளத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கும். இதேபோல், பெலகாவியில் பல வளர்ச்சித் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சிவமோகா குவெம்பு விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் புதிய வளர்ச்சி வரலாற்றை எழுதுகின்றன.

தார்வாட்டில் உள்ள ஐஐடியின் புதிய வளாகம்,  எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களை உருவாக்கும் அதே வேளையில் தரமான கல்வியை எளிதாக்கும். புதிய ஐஐடி வளாகம் கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. தார்வாட் ஐஐடி வளாகத்தின் உயர் தொழில்நுட்ப வசதிகள் உலகின் மற்ற முன்னணி நிறுவனங்களைப் போலவே, இந்த நிறுவனத்தையும் உயரத்திற்கு அழைத்துச் செல்ல உத்வேகமாக இருக்கும். ஐஐடி தார்வாட் வளாகம் தற்போதைய அரசின்  உறுதி மற்றும் சாதனை மனப்பான்மைக்கு  ஒரு சிறந்த உதாரணம். 2019-ல் பிப்ரவரி மாதம்  அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் பல தடைகள் வந்தாலும் 4 ஆண்டு காலத்தில் பணிகளை முடிக்கப்பட்டன. அடிக்கல் நாட்டுவது முதல் திட்டப்பணிகளை தொடங்குவது வரை இரட்டை எஞ்சின் அரசு சீரான வேகத்தில் செயல்படுகிறது.

தரமான கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் அவற்றின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்பது பழைய சிந்தனை  ஆகும். இந்தச் சிந்தனை இளம் தலைமுறையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய இந்தியா இந்த சிந்தனையை நிராகரித்துள்ளது. நல்ல கல்வி எல்லா இடங்களிலும், அனைவருக்கும் சென்றடைய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தரமான நிறுவனங்கள் நல்ல கல்வியை அதிகமான மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும். அதனால்தான், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் தரமான நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளில் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 250 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதோடு, எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில் பல புதிய ஐஐஎம் மற்றும் ஐஐடி-க்கள் திறக்கப்பட்டுள்ளன.

21-ம் நூற்றாண்டில் நகரங்களை நவீனமயமாக்குவதன் மூலம் இந்தியா முன்னேறி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஹூப்பள்ளி-தார்வாட் இணைக்கப்பட்டு இன்று பல ஸ்மார்ட் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் ஆளுமை ஆகியவை ஹூப்பள்ளி -தார்வாட் பகுதியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். .

தார்வாட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரேணுகா சாகர் நீர்த்தேக்கம் மற்றும் மலபிரபா நதி ஆகியவை குழாய்கள் மூலம் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் கொண்டு வரப்படும். தார்வாட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தயாராகும் போது, மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறுவர். துபரிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை இது குறைக்கும்.

சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் இப்போது உலகிலேயே மிகப் பெரிய நடைமேடையைக் கொண்டிருப்பதால், இணைப்பின் அடிப்படையில் கர்நாடகம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் சிந்தனையைக் குறிக்கிறது. ஹோசப்பேட்டை - ஹூப்பள்ளி - தினைகாட் பகுதியின் ரயில் பாதையை மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த பார்வையை வலுப்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்ட பிறகு, டீசலை சார்ந்திருப்பது குறையும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்க முடியும். இந்த முயற்சிகள் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, சுற்றுலாவை மேம்படுத்தும்.

சிறந்த மற்றும் மேம்பட்ட உட்கட்டமைப்பு பார்ப்பதற்கு நன்றாக இருப்பது மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. சிறந்த சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் அனைத்து சமூகங்கள் மற்றும் முதியவர்கள்  பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பின் பலன்களை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அனுபவித்து வருகிறார். மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் இலக்கை அடைய சிறந்த இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணிகள்  நடந்து வருகின்றன. பிரதமர்  கிராமசாலை திட்டங்கள் மூலம், கிராமங்களில் சாலைகளின் இணைப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை இணைப்பு 55%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

நண்பர்களே!

இணைய உலகில் இந்தியா குறித்து முன்பு இந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்ததில்லை.  இன்று இந்தியா மிகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. அரசு குறைந்த செலவில் இணைய வசதியை கிராமங்களுக்கு கொண்டு சென்றதால் இது நடந்தது. கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் அகண்ட அலைவரிசை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்த வேகம் இருப்பதற்கு  இன்று நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுவதுதான் காரணம்.  முன்பெல்லாம் அரசியல் லாப நஷ்டத்தை எடை போட்டுத்தான் ரயில், சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் பிரதமர் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதனால் நாட்டில் எங்கு தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் விரைவாக உள்கட்டமைப்புகளை உருவாக்க முடியும். 

சமூக உட்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வீடுகள், கழிவறைகள், சமையல் எரிவாயு, மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காத நாட்கள் முன்பு இருந்ததுண்டு. இந்தப் பகுதிகள் தற்போது சிறப்பாக கவனிக்கப்பட்டு இன்று இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெறுகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்கள் தங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து வளங்களையும் இன்று நாங்கள் வழங்குகிறோம்.

நண்பர்களே!

கர்நாடகத்தை தொழில்நுட்ப இந்தியாவின் அடையாளமாக எதிர்காலத்தில் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். உயர்தொழில்நுட்ப இந்தியாவின் எஞ்சினாகத் திகழும் கர்நாடகத்தை  இயக்குவதற்கு இரட்டை எஞ்சின் அரசு  தான் அவசியம்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

***

(Release ID: 1906190)

SRI/PKV/AG/RR



(Release ID: 1906240) Visitor Counter : 154