பிரதமர் அலுவலகம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னத்தின் மாதிரியை திறந்துவைத்தார்

"வரலாறு உருவாக்கப்படும் போது, வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகத்தையும் பெறுகிறார்கள்"

"இந்த நாள் வருங்கால சந்ததியினரால் விடுதலையின் அமிர்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூரப்படும்"

"செல்லுலார் சிறைச்சாலையின் அறைகளில் இருந்து, மிகுந்த வேதனையும், வலியும் நிறைந்த குரல்கள் இன்றும் கேட்கின்றன"

"வங்கத்தில் இருந்து, தில்லியில் இருந்து, அந்தமான் வரை, நாட்டின் ஒவ்வொரு பகுதியும் நேதாஜியின் பாரம்பரியத்தை போற்றி வணங்குகிறது"

"நமது ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னால் உள்ள நேதாஜியின் பிரமாண்ட சிலை மற்றும் கடமைப் பாதை நமது கடமைகளை நினைவூட்டுகின்றன."

"கடல் பல்வேறு தீவுகளை இணைப்பது போல, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வு, அன்னை இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையையும் ஒன்றிணைக்கிறது"

"தேசிய பாதுகா

Posted On: 23 JAN 2023 2:12PM by PIB Chennai

பராக்ரம தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, ​​நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது என்றார். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், “வரலாறு உருவாகும்போது, ​​வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள்” என்றார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுவதாகவும், அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாகவும், இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், இங்கு முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதாகவும், இந்தியாவின் முதல் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். வீர் சாவர்க்கரும் அவரைப் போன்ற பல மாவீரர்களும் இந்த மண்ணில் நாட்டிற்காக தவம் செய்து தியாகத்தின் உச்சத்தை தொட்டவர்கள் என்றும் அவர் கூறினார். "அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன" என்று அவர் கூறினார். அந்தமானின் அடையாளம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளுக்குப் பதிலாக அடிமைத்தனத்தின் அடையாளங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது என்று  கூறிய பிரதமர், “நமது தீவுகளின் பெயர்களில் கூட அடிமைத்தனத்தின் முத்திரை இருந்தது” என்றார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் பிளேயர் சென்று மூன்று முக்கிய தீவுகளின் பெயரை மாற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், “இன்று ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவாகவும், ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் தீவுகளாகவும் மாறிவிட்டது” என்று தெரிவித்தார். ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் ஆகிய பெயர்கள் நேதாஜியால் வழங்கப்பட்டவை என்றும், சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் அரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​எங்கள் அரசு இந்த பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூறப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பறப்பதாக அவர் எடுத்துரைத்தார்.  இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும் என்று அவர் தெரிவித்தார். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றம் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது என்று கூறினார். அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது என்று கூறினார். வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பணிகள் சுதந்திரத்திரத்திற்குப் பிறகு, உடனே விளக்கியிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், கடந்த 8-9 ஆண்டுகளில் அவர்கள் அப்பணியை செய்ததாகக் கூறினார்.  1943-ம் ஆண்டு நாட்டின்  இந்தப்பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நாடு அதிகப் பெருமையுடன் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.  ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டு நிறைவையொட்டி  செங்கோட்டையின் கொடி ஏற்றப்பட்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக நேதாஜியின் வாழ்க்கை முறை குறித்து கோப்புகளை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், அப்பணி முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்யப்பட்டதாக கூறினார். இன்று நமது ஜனநாயக அமைப்பிற்கு முன்பாக நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை அமைந்துள்ளது, நமது கடமைகளை அவை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.

தங்களுடைய ஆளுமைகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் குறித்த காலத்தில் பொதுமக்களுடன் இணைத்து, திறமையான லட்சியங்களை ஏற்படுத்தி, பகிர்ந்து கொண்ட நாடுகளே வளர்ச்சி மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் போட்டியில் மிகவும் முன்னேறிய நாடுகள் என்று குறிப்பிட்ட பிரதமர், விடுதலைப்பெருவிழாவின் அமிர்த காலத்தில் இந்தியா அதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

21 தீவுகளுக்கு பெயரிடப்பட்டதற்கு பின்பு உள்ள ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிறப்புமிக்க செய்தியை எடுத்துரைத்த பிரதமர், இது இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகத்தை குறிப்பிடும் செய்தியாகும் என்று கூறினார்.  தாய்நாடான இந்தியாவைப் பாதுகாக்க பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேர் அனைத்தையும் தியாகம் செய்ததாக குறிப்பிட்ட பிரதமர், இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிக்க வீரர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளை, பேச்சுகளைக் கொண்ட, பலதரப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டவர்கள் என்று தெரிவித்தார்.  ஆனால் தாய் நாட்டிற்காக அவர்களை  பாரதத்தாய் ஒன்றிணைத்ததாக கூறினார். பல்வேறு தீவுகளை கடல் இணைப்பது போல், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு பாரதத்தாயின் ஒவ்வொரு குழந்தையையும் ஒருங்கிணைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.  மேஜர் சோம்நாத் ஷர்மா, பிரு சிங், மேஜர் ஷேத்தன் சிங் முதல் கேப்டன் மனோஜ் பாண்டே, சுபேதர் ஜோகிந்தர் சிங், நாயக் ஆல்பர்ட் ஏக்கா வரையும்,  வீர் அப்துல் ஹமித், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், முதல் அனைத்து 21 பரம் வீரர்களும், தேசமே முதன்மை, இந்தியாவே முதன்மை என்று உறுதிபூண்டிருந்ததாக கூறினார். இந்த உறுதி இந்தத் தீவுகளில் அழியாத பெயர்களாக தற்போது இடம் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  அந்தமானில் உள்ள மலைக்கு கார்கில் போரில் பங்கேற்ற கேப்டன் விக்ரம் பத்ரா பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மறு பெயரிடப்படும் நிகழ்வானது பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்கள் மற்றும் இந்திய ஆயுதப்படைக்கும் அர்ப்பணிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று  பிரதமர் கூறினார்.  சுதந்திரப் போராட்டக்காலத்திலிருந்தே நமது ராணுவத்தினர் பல்வேறு போர்களைச் சந்தித்து, அனைத்து வகையிலும் தங்களது வீர, தீரச் செயல்களை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். அத்தகைய வீரர்களையும், ராணுவத்தினரையும் போற்றிப் பாராட்டுவது நம் நாட்டின் கடமையாகும்.  அத்தகைய நடவடிக்கை இன்று முழுமை பெறுகிறது. அதாவது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத தீவுகளுக்கு ராணுவ வீர்ர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் வைப்பது மிகச் சரியான நடவடிக்கையாகும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்பது நீர், இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல், வீரம், பாரம்பரியம், சுற்றுலா, ஆக்கம் மற்றும் ஊக்கம் போன்றவற்றின் தொகுப்பாகும். இத்தகைய பெருமைமிக்க ஆற்றலைக் கண்டறிந்து பெருமைகளைப் பறைச்சாற்றவேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டைக் காட்டிலும், 2022-ல் அந்தமானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரித்து சுற்றுலா தொடர்பான வருவாய் அதிகரித்துள்ளது.  அந்தமானுக்கும் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலர் இங்கு வந்து வரலாற்று அனுபவங்களைக் கண்டு உணர்கின்றனர்.  அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பழமையான மலைவாழ் பாரம்பரியம் குறித்து மிகப் பெருமையாக பேசினார். அங்கு அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவகம் குறித்து பேசிய பிரதமர், நமது ராணுவத்தினரின் வீர தீரத்திற்கு உரிய மரியாதை வழங்கப்படுவது அங்கு பயணிக்கும் இந்தியர்கள் மத்தியில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றார்.

கடந்த கால ஆட்சியில் தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை மூலம் இந்தியாவின் உண்மையான சக்தியை உணரத் தவறிவிட்டனர். இமாலய மாநிலங்கள் ஆகட்டும் குறிப்பாக வடகிழக்கு, அந்தமான் நிக்கோபார் தீவுகளாகட்டும் பல ஆண்டுகளாக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.  ஏனெனில், அந்தப் பகுதிகள் தொடர்பற்ற நிலையிலும் எளிதில்  செல்ல முடியாத வகையிலும் அமைந்துள்ளது என்று தவறான கண்ணோட்டத்துடன் அணுகியதால் வந்த விளைவாகும். சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் சிஷல்ஸ் போன்ற தீவுகள் வளர்ச்சி அடைந்ததை மேற்கோள் காட்டிய பிரதமர், மேற்கூறப்பட்ட நாடுகளின் புவியியல் பரப்பளவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைவிட குறைந்ததாகும். ஆனால், அந்த தீவுகள்  ஆதாரங் களை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நன்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது என்றார்.  நமது நாட்டில் உள்ள தீவுகளுக்கும் அத்தகைய  திறனும்  ஆற்றலும் உள்ளது என்றும் அதனைப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் நமது நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார்.  மிகவேக இணையதள வசதியை அந்தமானில் ஏற்படுத்துவதற்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை பயன்படுத்தப்பட்டிருப்பதன் விளைவாக டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகளும், பல்வேறு கடினமான சேவைகளும் எளிமையாக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது. தற்போது இயற்கை சமநிலை மற்றும் நவீன ஆதாரங்கள் இரண்டும் முன்னேற்றப் பாதையில் நம் நாட்டில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். அந்தக்கால அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய பாதையை அமைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், நம் நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும் இந்தப் பகுதி மிகப் பெரிய அளவில் பங்காற்றும். தகுதி மற்றும் திறன் கொண்ட இந்தியாவை உருவாக்கி நவீன வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைவோம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் லெப்டினன்ட் கவர்னர் அட்மிரல்  டி கே ஜோஷி, பாதுகாப்புத்துறையின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றுச் சிறப்பை நினைவில் கொள்ளும் வகையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெருமைகளை உணர்வதற்கும் ரோஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பிரதமர் 2018-ல் அங்கு பயணம் மேற்கொண்ட போது பெயர் மாற்றம் செய்தார். நெய்ல் தீவு மற்றும் ஹாவ்லாக் தீவு போன்றவற்றுக்கு ஷாஹித் தீவு மற்றும் சுராஜ் தீவும்  என்றும் மறு பெயர் சூட்டப்பட்டது. நம் நாட்டின் நிகழ்கால பராக்ரமசாலிகளுக்கு உரிய மரியாதை வழங்குவதற்கு நமது பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். இந்த உணர்வை மனதில் ஏந்தியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைப்பதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த்த் தீவுகளில் மிகப் பெரிய தீவிற்கு முதல் முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீர்ரின் பெயரும் இரண்டாவது பெரிய தீவிற்கு  2-வது முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும் சூட்டப்பட்டு இந்த வகையில், அனைத்து 21 தீவுகளுக்கும் பெயரிடப்படும். நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் காப்பதற்கு தன்னுயிர் வழங்கிய நமது வீரர்களுக்கு என்றென்றும் மரியாதை செலுத்தும்  வகையில் இது அமையும்.

பெயரிடப்படாத இந்தத் தீவுகளுக்கு 21 பரம்வீர்  சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களான மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் ராணுவ தளபதி கரம்சிங் எம் எம், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் ராமரகோப ரானே, நாயக் ஜதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங், கேப்டன் ஜி எஸ் சலாரியா, லெஃப்டினெனட் கர்னல் தன்சிங் தாப்பா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைட்டான் சிங் சிக்யூஎம்எச், அப்துல் அமீது, லெஃப்டினென்ட் கர்னல், அர்தேஷிர் புர்ஜோர்ஷி தாராப்பூர், லான்ஸ் நாயக் அல்பெர்ட் யெக்கா, மேஜர் ஹோஷியர் சிங், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் அருண் கேட்ரப்பால், விமானப்படை அதிகாரி நிர்மல்ஜித் சிங் ஷக்கான், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பாணா சிங் கேப்டன் விக்ரம் பத்ரா, லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ்குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், சுபேதார் மேஜர் (ஓய்வு) கிரணடியெர் யோகந்தர்சிங் யாதவ் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள.

*** 

(Release ID: 1892959)

AP/PKV/IR/GS/AG/KPG/RJ/KRS



(Release ID: 1893035) Visitor Counter : 462