பிரதமர் அலுவலகம்

9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


மூன்று தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 11 DEC 2022 5:58PM by PIB Chennai

9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், கோவா, தேசிய யுனானி மருத்துவ நிறுவனம், காசியாபாத், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி, தில்லி ஆகிய மூன்று தேசிய ஆயுஷ் நிறுவனங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன்,  மலிவு விலையில் ஆயுஷ் சேவைகள் கிடைப்பதை எளிதாக்கும். சுமார் ரூ. 970 கோடி செலவில் சுமார் 500 மருத்துவமனை படுக்கைகளுடன்  உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், மாணவர்களின் எண்ணிக்கையை சுமார் 400 ஆக அதிகரிக்கும்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் அனைத்து பிரதிநிதிகளையும் உலகம் முழுவதிலுமிருந்து அழகான கோவாவுக்கு வரவேற்று, உலக ஆயுர்வேத மாநாட்டின்  வெற்றிக்காக அனைவரையும் வாழ்த்தினார். விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் அமிர்த கால பயணம் நடந்து கொண்டிருக்கும் போது, உலக ஆயுர்வேத மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் அறிவியல், அறிவு மற்றும் கலாச்சார அனுபவத்தின் மூலம் உலக நலனை உறுதி செய்வதே அமிர்த காலத்தின் முக்கிய தீர்மானங்களில் ஒன்று என்றும், அதற்கு ஆயுர்வேதம் வலுவான மற்றும் பயனுள்ள ஊடகம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்பைக் குறிப்பிட்டு, ஜி-20-ன்  'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆயுர்வேதத்தின் பரந்த அங்கீகாரத்தை உறுதி செய்ய மேலும் நீடித்த பணிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இன்று திறக்கப்பட்ட மூன்று தேசிய நிறுவனங்கள் ஆயுஷ் சுகாதார அமைப்புக்கு புதிய வேகத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

ஆயுர்வேதத்தின் தத்துவ அடிப்படைகளைப் பற்றிக் கூறிய பிரதமர், இந்தியாவில் ஆயுர்வேதம் தொடர்பான பல பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக தாம்  இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயுர்வேதம் தொடர்பான நிறுவனங்களை ஊக்குவித்ததாகவும், குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகவும் கூறினார். இதன் விளைவாக, உலக சுகாதார நிறுவனம் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையத்தை நிறுவியது என அவர் குறிப்பிட்டார்.  ஆயுஷின் தனி அமைச்சகம் நிறுவப்பட்டது, இது ஆயுர்வேதத்தின் மீதான ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்க வழிவகுத்தது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் வழியில், ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேதமும் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் கண்டுபிடிப்பு மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டை நினைவுகூர்ந்த பிரதமர், பாரம்பரிய மருத்துவத் துறையில் இந்தியாவின் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.  சர்வதேச யோகா தினத்தை ஆரோக்கியத்தின் உலகளாவிய திருவிழாவாக உலகம் கொண்டாடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் யோகா இழிவாகப் பார்க்கப்பட்டது, ஆனால் இன்று அது முழு மனிதகுலத்திற்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் ஆதாரமாக மாறியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா ஆளுநர் திரு பிஎஸ் ஶ்ரீ:ரன் பிள்ளை, மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஶ்ரீபத் யெசோ நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

******

SRI / PKV / DL



(Release ID: 1882573) Visitor Counter : 171