தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தேசிய தகவலியல் மையத்தின் பெயரில் போலியான குறுஞ்செய்தி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2022 9:16AM by PIB Chennai
தேசிய தகவலியல் மையத்தின் பெயரில் வேலை வாய்ப்பு பற்றி அனுப்பப்படும் குறுஞ்செய்தி போலியானது, அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
இத்தகைய குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல் அறிந்த தேசிய தகவலியல் மையம், இது குறித்த உடனடி விசாரணையை மேற்கொண்டு, இது ஒரு போலியான குறுஞ்செய்தி என்பதையும், தேசிய தகவலியல் மையத்தின் உள்கட்டமைப்பிலிருந்து இந்த செய்தி அனுப்பப்படவில்லை என்பதையும் கண்டறிந்தது. தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுடன் ஒருங்கிணைந்து மையத்தின் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், தனியார் குறுஞ்செய்தி சேவை வழங்குனரின் உள்கட்டமைப்பின் வாயிலாக இந்த போலியான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த குறுஞ்செய்தி தேசிய தகவலியல் மையத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவதாலும், நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்திய கூறு இருப்பதாலும், இந்த சம்பவத்தை இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழுவின் (செர்ட்-இன்) கவனத்திற்கு தகவலியல் மையம் கொண்டு சென்றது. மேலும், இத்தகைய செய்தியை அனுப்பியவர்களைக் கண்டறிவதற்காக சட்ட அமலாக்க முகமைகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலியான குறுஞ்செய்தி கிடைத்தால், incident@cert-in.org.in மற்றும் https://cybercrime.gov.in ஆகிய மின்னஞ்சல் மற்றும் மின் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
**************
SM/RB/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1873655)
வருகையாளர் எண்ணிக்கை : 272