பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்- முதலமைச்சர் அமிர்த திட்ட ஆயுஷ்மான் அட்டைகளின் விநியோக விழாவில் பிரதமரின் உரை

Posted On: 17 OCT 2022 10:15PM by PIB Chennai

வணக்கம்!

தண்டேரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் விரைவில் வரவிருக்கின்றன. அவற்றுக்கு முன்பு, குஜராத்தில் மிகப்பெரிய சுகாதாரத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு 1.5-2 லட்சம் பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்குவதற்கான பிரச்சாரம் தொடங்கும். அரசியல் ரீதியாக நிலையான அரசு செயல்படும் போதும், அதன் பணி கலாச்சாரம் சமூக நலனிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்போதும், எத்தகைய வியக்கத்தகு விளைவுகளை நாம் கொண்டுவர முடியும் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

முந்தைய காலத்தில் திட்டங்களின் அமலாக்கம் என்பது மிகப்பெரிய அரங்கினுள் குத்துவிளக்கை ஏற்றுவது போன்ற செயல்களுடன் நிறைவடைந்தது. விஷயம் தெரிந்த ஒரு சிலரால் மட்டுமே திட்டங்களை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. உண்மையான பயனாளிகளைத் தவிர்த்து இடைத்தரகர்கள் தான் அதிகம் பயன் பெற்றனர். ஆனால் இது போன்ற நடைமுறையை நாங்கள் மாற்றி உள்ளோம். பணம் செலவழிக்கப்பட்டால், அதனால் மக்கள் பயனடைய வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏழைகளைக் கண்டறிந்து, அவர்களது பிரச்சனைகளை அரசு தீர்க்க வேண்டும்.

ஒரு திட்டத்தை வடிவமைக்கும் போது சாமானிய மக்களின் தேவைகளையும், மாற்றம் கொண்டுவர வேண்டிய விஷயங்களையும் அரசு கருத்தில் கொள்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் துயரங்கள் குறித்து சிந்தித்து அவற்றைப் போக்குவதற்கான தீர்வுகளை அரசு கண்டறிகிறது. இதன் விளைவாக சிறந்த கொள்கையை அரசு உருவாக்குகிறது.

 

நண்பர்களே,

நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் போது அவர்கள் ஆற்றல் பெறுகிறார்கள். அதனால்தான் இந்திய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் வழங்க நாம் முடிவு செய்துள்ளோம். சமையல் எரிவாயு, வீடு, குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளிலும் இன்று நாம் கவனம் செலுத்துகிறோம். ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு நமது தாய்மார்களையும் சகோதரிகளையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தினால் இந்தியாவில் எந்த பகுதியிலும் பயனடையலாம்.

சுகாதார செலவு பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868671

**************



(Release ID: 1869135) Visitor Counter : 103