உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் 30வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.


2015 முதல் ரூ. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்திற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 56 திட்டங்களுக்கு ரூ.2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

Posted On: 03 SEP 2022 5:07PM by PIB Chennai

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற 30வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், லட்சத்தீவுகளின் நிர்வாகிகள், தென் மண்டல கவுன்சில் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தமது தொடக்க உரையில், இயற்கை அழகின் உறைவிடமான கேரள மாநிலத்தின்  மக்களுக்கு 'ஓணம்' வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் கேரளாவின் முக்கிய பண்டிகை மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தின் முக்கியப் பண்டிகை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஆண்டாகக் கொண்டாடப்படுவதால், நாட்டின் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது என்றும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக்கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் தங்கள் மாநில உறவுகள், ஜாதி, மதம் போன்றவற்றைக் கடந்து உயர்ந்து, தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்றும் அவர் கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் திரு ஷா நன்றி தெரிவித்தார். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த எட்டு ஆண்டுகளில் மண்டல கவுன்சில்களின் தன்மை மாறியுள்ளது என்றும், கூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முன், மண்டல சபைகள் ஒரு வருடத்தில் சராசரியாக இரண்டு கூட்டங்களை நடத்தியது, இந்த அரசாங்கம் 2.7 ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக, நிலைக்குழுக்கள் 1.4 அமர்வுகளைக் கொண்டிருந்தன, இந்த அரசாங்கமும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதாவது, 2.75 ஆக அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை, மண்டல கவுன்சில் கூட்டங்களில் 104 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 555 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, இதில் 64 சதவீத பிரச்சனைகள் பரஸ்பர ஒப்புதலுடன் தீர்க்கப்பட்டன. 9 கடலோர மாநிலங்களில் 4 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 4 ஆகியவை தெற்கு மண்டல கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன, அதாவது மொத்தம் 7,500 கிமீ நீளமுள்ள கடற்கரையில், சுமார் 4,800 கிமீ இந்த மாநிலங்களின் கீழ் வருகிறது. இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் 7 பெரிய துறைமுகங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாக  திரு ஷா கூறினார். இதன் மூலம், இப்போது இந்தியாவில் உள்ள மொத்தமுள்ள 3,461 மீனவக் கிராமங்களில், 1,763 மீனவக் கிராமங்கள் இந்த மண்டலத்தில் உள்ளன, மேலும் கடல்சார் பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

    

தென்னிந்தியாவின் மீது பிரதமருக்கு சிறப்புப் பற்று உள்ளது, அதனால்தான் 2014-ல் பிரதமரான பிறகு, சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள்  முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடலோர மாநிலங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 7,737 கோடி ரூபாய் செலவில் நீலப் புரட்சிக்காக பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா செயல்படுத்தப்படுகிறது. 2015 முதல்  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற தென் மண்டல கவுன்சிலின் 30வது கூட்டத்தில் 26 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது, 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டது, இதில் ஆந்திரா மறுசீரமைப்பு தொடர்பான 9 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.  ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அந்த மாநிலங்கள் தங்களுக்குள் தீர்த்து கொள்ளுமாறு திரு ஷா வலியுறுத்தினார், இது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மை பயக்கும், அதோடு முழு தென் பிராந்தியத்தின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதன் நிலைக்குழுவின் 12வது கூட்டத்தில், மொத்தம் 89 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாகவும், இதில் 63 பிரச்சனைகள் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் கூறிய திரு அமித் ஷா, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றார்.

பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய, மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது, மாநிலங்களுக்கு இடையே பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக்காக  ஒரு மன்றத்தை உருவாக்குவது ஆகியவை மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கூறினார். பொதுவான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு ஒத்துழைப்பு அமைப்பை அமைத்தல். நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார் என்றும், அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குவதாகவும் திரு ஷா கூறினார்.

உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 12 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு கியூஆர் கோட் பிவிசி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு ஷா தெரிவித்தார். இதன் மூலம் கடலோர மாநில மீனவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது மட்டுமின்றி கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனால் தண்டனை விகிதம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்காகும். இதற்காக தென் மண்டல கவுன்சில் உறுப்பு நாடுகள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஐந்து கிலோமீட்டருக்குள் வங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். வங்கிகள் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசின் திட்டங்களின் பலன்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும் என்று திரு அமித் ஷா கூறினார்.

******



(Release ID: 1856551) Visitor Counter : 310