பிரதமர் அலுவலகம்

கோவாவின் பனாஜியில் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி வாயிலாக பிரதமரின் உரை

Posted On: 19 AUG 2022 1:52PM by PIB Chennai

வணக்கம்.
கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, கோவா அரசின் இதர அமைச்சர்களே, பெருமக்களே, தாய்மார்களே மற்றும் அன்பர்களே. இன்று மிகவும் முக்கியமான மற்றும் புனித தினம். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு வாழ்த்துகள்.

இந்த நிகழ்ச்சி கோவாவில் நடைபெற்றாலும், நாட்டு மக்களுடன் மூன்று முக்கிய சாதனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அமிர்த காலத்தில் இந்தியாவின் பிரம்மாண்டமான இலக்குகள் சம்பந்தமாக மூன்று முக்கிய சாதனைகளை நாம் படைத்துள்ளோம். முதலாவதாக இன்று நாடு முழுவதும் 10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு சுத்தமான தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,
நம் நாடு, குறிப்பாக இன்று கோவா மைல்கல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முதல் மாநிலமாக இன்று கோவா திகழ்கிறது. தாத்ரா நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையுவும் இந்த அங்கீகாரத்தை பெற்ற யூனியன் பிரதேசங்களாக உள்ளன. நம் நாட்டின் மூன்றாவது சாதனை, தூய்மையான இந்தியா திட்டத்துடன் தொடர்புடையது. சில ஆண்டுகளுக்கு முன், திறந்தவெளியில் மலம் கழிக்காத நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. பின், அடுத்த தீர்மானம் கிராமங்களுக்கு இதனினும், கூடுதல் அந்தஸ்தை தருவதாக இருந்தது. தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவையாக  மாறியுள்ளன. 

நண்பர்களே,
21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும் என்று உலகில் முன்னணி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சாமானிய மக்கள், ஏழைகள், நடுத்தர வகுப்பினர் விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர்‌என ஒவ்வொருவரும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக சேவை மற்றும் கடமை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தண்ணீர் பாதுகாப்பு ஓர் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்பதற்காக கடந்த எட்டு ஆண்டுகளில் விடுதலையின் அமிர்த காலத்தில் இந்த விஷயத்திற்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, ஒவ்வொரு பங்குதாரரின் கூட்டு முயற்சி, அரசியல் உறுதிப்பாடு மற்றும் வளங்களின் முறையான பயன்பாடு ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக உள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் என்ற நிலையை அடைவதற்காக நாடு முழுவதும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், அந்த இலக்கை நாம் நிச்சயம் அடைவோம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**********



(Release ID: 1853430) Visitor Counter : 118