இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பளுதூக்குதலில் இந்தியாவின் 3-வது தங்கப்பதக்கத்தை அசிந்தா ஷீலி வென்றுள்ளார்

Posted On: 01 AUG 2022 11:51AM by PIB Chennai

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஞாயிறன்று இரவு நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்கும் போட்டியின் இறுதிச்சுற்றில் 73 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலி  தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டிகளில் அவர் மொத்தம் 313 கிலோ எடைதூக்கினார் (ஸ்நாச் 143 கிலோ + க்ளின் மற்றும் ஜெர்க் 170 கிலோ). இந்த போட்டிகளில் இந்தியாவுக்கு இது 6-வது பதக்கமாகும். மேலும் 3-வது தங்கப்பதக்கம். அசிந்தாவின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு அனுராக் தாக்கூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 தங்கப்பதக்கம் வென்ற அசிந்தா ஷீலிக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். “தங்கப்பதக்கம் வென்றிருப்பதோடு, காமன்வெல்த் போட்டிகளில் மூவண்ணக்கொடியை உயரப்பறக்க செய்து அசிந்தா ஷீலி இந்தியாவை பெருமிதம் கொள்ளச்செய்திருக்கிறார். நீங்கள் தோல்வியை உடனடியாக ஒரே முயற்சியில் சரி செய்து மேல்நிலைக்கு வந்துவிட்டீர்கள். வரலாற்றை உருவாக்கியுள்ள நீங்கள் சாம்பியனாக திகழ்கிறீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!” என்று குடியரசுத் தலைவர் ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமைமிக்க அசிந்தா ஷீலி   தங்கப்பதக்கம் வென்றிருப்பது  மகிழ்ச்சியளித்தது. அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர். தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தவர். அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பிரதமர் கூறியுள்ளார்.

வீடியோ காட்சி ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.   “காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான நமது அணி புறப்படுவதற்கு முன் அசிந்தா ஷீலியுடன் நான் கலந்துரையாடினேன். அவரது  தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போது பதக்கம் ஒன்றை வென்றுள்ள நிலையில் திரைப்படம் காண அவருக்கு  நேரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்விட்டரில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பதக்கம் வென்றுள்ள அசிந்தா ஷீலிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் செய்தியில் திரு தாக்கூர் கூறியிருப்பதாவது, “பாட்டியாலாவில் உள்ள என்எஸ்என்ஐஎஸ் பயிற்சி களத்தில் திருவாளர் அமைதி என்று அறியப்பட்ட  அசிந்தா ஷீலி காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2022-ல் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இந்தியாவுக்கு பாராட்டுக்களை கொண்டுவந்துள்ள, பதக்கம் வென்ற போது போட்டியில் சாதனை படைத்துள்ள அசிந்தாவுக்கு வாழ்த்துக்கள். மொத்தம் 313 கிலோ பளு தூக்கியிருப்பது மெச்சத்தக்கது!! #Cheer4India.”

***************



(Release ID: 1846920) Visitor Counter : 165