பிரதமர் அலுவலகம்

முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

"எளிதாக தொழில் செய்வது, எளிதாக வாழ்வது போல நாட்டின் அமிர்தப் பயணத்தில் எளிதாக நீதி பெறுவதும் முக்கியமாகும்"

"கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன"

"நமது நீதித்துறை பழங்கால இந்திய நீதியின் மாண்புகளை மதிப்பதுடன் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை உண்மைகளுக்கு பொருத்தமான அர்ப்பணிப்புடனும் உள்ளது"

Posted On: 30 JUL 2022 11:20AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது  அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள்  மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின்  தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.

மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் சட்ட உதவிக்கான இடத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த முக்கியத்துவம் நாட்டின் நீதித்துறையின் மீது குடிமக்களின் நம்பிக்கையில் பிரதிபலிக்கிறது. எந்தவொரு சமூகத்திற்கும் நீதித்துறை அணுகல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது நீதி வழங்கல். நீதித்துறை உள்கட்டமைப்பும் இதில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றில் இந்தியாவின் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நீதித்துறை நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தின் அதிக சக்தியை அறிமுகப்படுத்த இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது என்று வலியுறுத்தினார்.  “இ-கோர்ட்ஸ் மிஷனின் கீழ், நாட்டில் மெய்நிகர் நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றங்களுக்காக 24 மணி நேர நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மக்களின் வசதிக்காக நீதிமன்றங்களில் காணொலி  உள்கட்டமைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது” என்றார் அவர். நாட்டில் காணொலி  மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.  "நமது நீதித்துறையானது பழமையான இந்திய நீதி விழுமியங்களுக்கு அர்ப்பணிப்புடன் உள்ள அதே நேரத்தில், 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை உண்மைகளுடன் பொருந்தவும் தயாராக உள்ளது" என்பதை இது நிரூபிக்கிறது. மேலும், ஒரு சாமானிய குடிமகன் அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.  தங்கள் அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்புகள், விதிகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் அவர்  அறிந்திருக்க வேண்டும். தொழில்நுட்பமும் இதில் பெரும் பங்கு வகிக்க முடியும்’’ என்று அவர் கூறினார்.

அமிர்த காலம் என்பது கடமையின் காலம் என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இதுவரை புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் நாம் பணியாற்ற வேண்டும் என்றார். விசாரணைக் கைதிகள் மீதான உணர்திறன் பிரச்சினையை திரு மோடி மீண்டும் எழுப்பினார். அத்தகைய கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்டப்பணிகள் அதிகாரிகள் ஏற்கலாம் என்றார். விசாரணைக் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு, விசாரணைக் குழுவின் தலைவர்கள் என்ற முறையில், மாவட்ட நீதிபதிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான பிரச்சாரத்தை மேற்கொண்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தை பிரதமர் பாராட்டினார். மேலும் வழக்கறிஞர்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பார் கவுன்சில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால்  விஞ்ஞான் பவனில் ஜூலை 30-31 வரை மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகளின் முதல் தேசிய அளவிலான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தன்மையையும் ஒத்திசைவையும் கொண்டு வருவதற்காக ஒரு ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நாட்டில் மொத்தம் 676 மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் உள்ளன. அவை அதிகாரத்தின் தலைவராக செயல்படும் மாவட்ட நீதிபதியின் தலைமையில் உள்ளன. மாவட்ட சட்ட சேவை ஆணையங்கள் மற்றும் மாநில சட்ட சேவைகள் ஆணையங்கள் மூலம் பல்வேறு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் நடத்தப்படும் லோக் அதாலத்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீதிமன்றங்களின் சுமையை குறைக்க மாவட்ட சட்ட சேவை ஆணையங்களும் பங்களிக்கின்றன.

 

***************



(Release ID: 1846479) Visitor Counter : 303