பிரதமர் அலுவலகம்

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

“இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட”

“ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது”

“நாம் எவ்வாறு உருவாகியிருக்கிறோம் என்பதை துயரங்கள் வெளிப்படுத்தின. அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது”

“சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது”

“உலகளாவிய வழங்கல் தொடருக்குள் இந்தியா முக்கிய இணைப்பாக மாறி வருகிறது”

“தொழில்நுட்பத்திற்கான ஆர்வமும் கடுமையாக உழைப்போர் மீதான நம்பிக்கையும், சீர்திருத்தத்திற்கான மனோநிலையும் உள்ளது”

“வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் தூண்டுதலை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்”

Posted On: 29 JUL 2022 11:40AM by PIB Chennai

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், மத்திய அமைச்சர் திரு எல் முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், தங்களின் பட்டங்களை பெறுகின்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம்பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்உங்களுக்கான எதிர்காலத்தை உங்கள் மனங்களில் ஏற்கனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கான தினமும் ஆகும்என்று அவர் கூறினார். நாளைய தலைவர்கள் என்று அவர்களை அழைத்த பிரதமர், பெற்றோர்களின் தியாகம், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஆதரவு ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.

125 ஆண்டுகளுக்கு முன் மதராஸ் என்று அறியப்பட்ட இங்கு இந்திய இளைஞர்களின் சாத்தியங்கள் எவை என்பது குறித்த சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார். “ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்துடனான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் இணைப்பையும், பிரதமர் நினைவுகூர்ந்தார். “அவரது சிந்தனைகளும், மாண்புகளும் உங்களுக்கு எப்போதும் உந்துசக்தியாக இருக்கட்டும்” என்று பிரதமர் கூறினார்.

  கொவிட்-19 பெருந்தொற்று முன்னெப்போதும் காணப்படாத சம்பவமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.   ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை  எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு துயரங்களை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும். இதன் விளைவாக இந்தியாவில் அனைத்து துறைகளிலும் புதுமையான சுறுசுறுப்பு உருவாகியுள்ளது. தொழில்துறை, முதலீடு, புதிய கண்டுபிடிப்பு அல்லது சர்வதேச வர்த்தகம் என அனைத்திலும் இந்தியா முன்னிலையில் இருப்பதை காண முடிகிறது. கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்பேசி தயாரிப்பாளராக இருந்தது என்று பிரதமர் கூறினார்.  புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று  அவர் கூறினார். கடந்த ஆண்டு  83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்று சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நமது புதிய தொழில்களும் கூட பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சாதனை அளவாக நிதி ஆதாரத்தை பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக சர்வதேச வர்த்தக  ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது.

 தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில்  3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. “முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற்கான  ரசனையாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது. பரமஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள்.
2-வது அம்சம் என்பது கடுமையான பணி செய்பவர்களிடம் நம்பிக்கை கொள்வது. ஏற்கனவே சமூக நிகழ்வுகளில் ஒரு ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக்கொள்வதில் சிரமம் இருந்தது. சிலரை வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்கள் என்று கூறுவது வழக்கம், இதன் பொருள் ஊதியம் பெறும் ஊழியர்கள் என்பதாகும். தற்போது நிலைமை நேர்மாறானதாக உள்ளது. 3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை” என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம். வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்” என்று விரிவாக எடுத்துரைத்தார். “ஒரு வலுவான அரசின் பலம் என்பது அது அனைத்தையும் அறிந்திருப்பது அல்லது அனைத்தையும் செய்யமுடிந்தது அல்ல என்பதை அடக்கத்துடன் ஏற்பதில் உள்ளது” என்று அவர் மேலும் வலியுறுத்தினார். இதனால் தான் சீர்திருத்தங்கள், அனைத்து துறைகளிலும் மக்களுக்கும், அவர்களின் திறமைக்கும் மகத்தான இடத்தை உருவாக்கித்தருகின்றன.  தேசிய கல்விக்கொள்கையில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் இலகு தன்மையின் உதாரணங்களை எடுத்துரைத்த அவர், வணிகம் செய்வதை எளிதாக்க 25,000 நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறினார். “பங்குகள் வழியிலான மூலதனத்தின் மீதான வரி நீக்கம், முன்தேதியிட்ட வரிநீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு – போன்றவை முதலீடுகள் மற்றும் தொழில்துறையில் ஊக்கத்தை அளித்துள்ளன. ட்ரோன்கள், விண்வெளி, புவியியல் துறைகளின் சீர்திருத்தங்கள் புதிய வழிகளை திறந்துள்ளன” என்று அவர் கூறினார்.

  இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் இடையேயான இணைப்பை பிரதமர் கோடிட்டு காட்டினார். “உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றல்.  உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என்று குறிப்பிட்டு பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

  இந்த விழாவில் தங்கப்பதக்கம் வென்ற 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரையின் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள  13 அமைப்புக் கல்லூரிகளையும், 494 இணைப்பு கல்லூரிகளையும் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் என 3 மண்டல வளாகங்களையும் பெற்றிருக்கிறது.

***************

(Release ID: 1846071)



(Release ID: 1846114) Visitor Counter : 180