ஜவுளித்துறை அமைச்சகம்

திரு சுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்தி கவுன்சில்: அமைச்சர் திரு பியூஷ் கோயல் அறிவிப்பு

Posted On: 18 MAY 2022 9:49AM by PIB Chennai

 ஜவுளி அமைச்சகம், வேளாண்மை அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், இந்திய பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதியாய் புகழ்பெற்ற மூத்த பருத்தி  நிபுணரான திரு சுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும் என்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறைநுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த கவுன்சிலின் முதல் கூட்டத்தை மே 28-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதுடன் விவாதங்களையும் கவுன்சில் நடத்தும்.

பருத்தி மதிப்பு சங்கிலியைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், ஜவுளி மற்றும் வேளாண் துறை செயலாளர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நடப்பு பருவகாலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதை எதிர்கொள்வதற்காக நூல் விலையை உடனடியாக உயர்த்துவது தொடர்பான கருத்துக்கள் கூட்டத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பருத்தி உற்பத்தி நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதும்விளைச்சலுக்கு மிகப்பெரிய இடம் இருந்தபோதும் பருத்தி உற்பத்தி குறைவாகவே உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. பருத்தி விவசாயிகள், விளைச்சலை மேம்படுத்துவதற்கு தரமான விதைகள் அவர்களை சென்றடைவதன்  அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய திரு பியூஷ் கோயல், பருத்தி மற்றும் நூல் விலைப் பிரச்சனை, பருத்தி மதிப்பு சங்கிலியில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அரசை தலையிட செய்யாமல் போட்டி மற்றும் அதிக லாபம் ஈட்டுவதை காட்டிலும் ஒத்துழைப்பின் உணர்வில் அனைத்து பங்குதாரர்களும் இதற்கு சுமுகமான தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.

 பருத்தி விவசாயிகள், நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய பருத்தி பற்றாக்குறை மற்றும் தளவாட சிக்கல்களை சமாளிப்பதற்கு, செப்டம்பர் 30, 2022 வரை ஏற்றுமதி ஒப்பந்தங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நூற்புத் துறையின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

பருத்தி மற்றும் நூலை முதலில் உள்நாட்டு தொழிலுக்கு உறுதி செய்யவும், மீதமுள்ள பருத்தி மற்றும் நூலை மட்டுமே ஏற்றுமதிக்கு வழங்க வேண்டும் என்றும் வர்த்தகம் மற்றும் நூற்பு சமூகத்திடம் திரு கோயல் கோரிக்கை விடுத்தார். நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் உள்நாட்டு தொழில்துறை பாதிப்படையும் வகையில் ஏற்றுமதி இருக்கக் கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826205

***************



(Release ID: 1826345) Visitor Counter : 250