நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்திற்காக உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2020 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பொது நிர்வாக விருதினை பெற்றுள்ளது.

Posted On: 22 APR 2022 4:52PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2020 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பொது நிர்வாக விருதினை பெற்றுள்ளது.  ஏப்ரல் 21 ஆம் தேதி குடிமைப் பணிகள் தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற பிரதமரின் பொது நிர்வாக விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி இதனை வழங்கினார். இந்த விருது, புதிய கண்டுபிடிப்புகள் (பொது) – மத்திய பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களுக்கான ரேஷன் பொருட்களை முழுமையாகவோ / பகுதியாகவோ, தடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள உணவுப் பொருட்களை மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெற முடியும்.

நாடு முழுவதும் உள்ள மக்களை மையப்படுத்திய அரசு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த, இந்த திட்டம் தேசிய சுகாதார ஆணையம், மத்திய வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

2019 ஆகஸ்ட்டில் 4 மாநிலங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2020 டிசம்பருக்குள் படிப்படியாக 32 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. 2022 பிப்ரவரி நிலவரப்படி, 77 கோடி பேர் நாடு முழுவதும் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் 5 லட்சம் நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது. ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான 121 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மாநிலத்திற்குள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, ஆண்ட்ராய்டு செயலியும், 14445 என்ற இலவச உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்திக் குறிப்பில் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819025

------



(Release ID: 1819073) Visitor Counter : 164