பிரதமர் அலுவலகம்

ஏப்ரல் 18 முதல் 20வரை குஜராத் செல்கிறார் பிரதமர்


டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார்

பனஸ்கந்தாவின் தியோதரில், பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

காந்தி நகரில் உள்ள பள்ளிக்கூட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் அவர் பார்வையிடுகிறார்

Posted On: 16 APR 2022 2:21PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.   ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.   ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.  ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  அதன்பிறகு, பிற்பகல் 3.30மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.   

பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் 

காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில் பிரதமர் பார்வையிட உள்ளார்.   இந்த மையம், ஆண்டுதோறும் 500கோடி இணைக்கும் மேற்பட்ட புள்ளிவிவரங்களை சேகரிப்பதுடன், மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக, அவற்றை பகுப்பாய்வு செய்து, பயனுள்ள வகையில், பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்திரக் கற்றல் போன்றவற்றுக்கு பயன்படுத்தும்.  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினசரி ஆன்லைன் வருகைப் பதிவை கண்காணிக்கவும், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மையப்படுத்தப்பட்ட, சுருக்கமான மற்றும் அவ்வப்போது மதிப்பீடு செய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும்.   பள்ளிகளுக்கான இந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், உலகிலேயே சிறந்த நடைமுறை என உலக வங்கியால் பாராட்டப்பட்டிருப்பதுடன், உலகின் பிற நாடுகள் இந்த மையத்தைப் பார்வையிட்டு, இத்திட்டத்தை அறிந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.  

பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில் பிரதமர் 

பனஸ்கந்தா மாவட்டம் தியோதரில், ரூ.600கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பால்பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் மையத்தை,  ஏப்ரல் 19 அன்று காலை  9.40மணியளவில் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார்.   இந்த புதிய பால்பண்ணை வளாகம் ஒரு பசுமைத் திட்டம் ஆகும்.  இந்த பால்பண்ணையில் தினந்தோறும், சுமார் 30லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுவதுடுன், 80 டன் வெண்ணெய், ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்க்ரீம், 20 டன் செறிவூட்டப்பட்ட பால் (கோயா) மற்றும் 6 டன் சாக்லேட் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.    உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை, பிரெஞ்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு டிக்கி, பட்டீஸ் உள்பட, உருளைக்கிழங்கிலிருந்து பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும்.   இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆலைகள்,  உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதோடு, அப்பகுதியில் கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.   

பனஸ் சமுதாய வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.   விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான  முக்கியமான அறிவியல்பூர்வ தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, இந்த சமுதாய வானொலி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த வானொலி நிலையம்,  சுமார் 1700 கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும்  மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும்.  

பாலான்பூரில் உள்ள பனஸ் பால்பொருள் தொழிற்சாலையில், விரிவுபடுத்தப்பட்ட பாலாடைக்கட்டி(Cheese) பொருட்கள், தயிர்-மோர்  தயாரிப்புப் பிரிவையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.  அத்துடன்,  குஜராத்தின் தமா-வில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு ஆலையையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார்.   

கிமானா,  ரத்தன்புரா-பில்தி,  ராதான்பூர் மற்றும் தாவர் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள 100டன் திறன் கொண்ட நான்கு சாண எரிவாயு ஆலைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.  

பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம்

ஏப்ரல் 19 அன்று பிற்பகல் 3.30மணியளவில், மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவீன் குமார் ஜெகநாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ராஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் முன்னிலையில், ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.   பாரம்பரிய மருந்துகளுக்கான இந்த சர்வதேச மையம், பாரம்பரிய மருந்துகளுக்காக  அமைக்கப்படும் உலகின் முதலாவது மற்றும் ஒரே சர்வதேச மையம் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த மையம்,  உலக ஆரோக்கியத்திற்கான சர்வதேச மையமாக உருவெடுக்கும்.   

சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு

குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற உள்ள சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மாநாட்டை, ஏப்ரல் 20 அன்று காலை 10.30மணியளவில் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.  மொரீஷியஸ் பிரதமர் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.   மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, 5 தொடக்க அமர்வுகள், 8 வட்டமேசைகள், 6 பயிலரங்குகள் மற்றும் 2 கருத்தரங்குகள் கொண்டதாக நடைபெறுவதுடன்,  90 தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் 100 கண்காட்சியாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.   இதுவரை கண்டறியப்படாத முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, ஸ்டார்ட்-அப்-சூழல்முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழில்களுக்கு உதவக்கூடிய இந்த மாநாடு அமையும்.   தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றினைக்கும் இந்த மாநாடு, எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான தலமாகவும் அமையும்.   

டாஹோத், ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் பிரதமர்

ஏப்ரல் 20 அன்று பிற்பகல் 3,30 மணியளவில் டாஹோத்தில் நடைபெறும் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர்,  அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில்,  ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த சம்மேளனத்தில் ஜமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சுமார் ரூ.1400கோடிக்கும் மேல் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.  நர்மதா ஆற்றுப்படுகையில், சுமார் ரூ.840கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள டாஹோத் மாவட்ட தென் பகுதி மண்டல குடிநீர் வினியோகத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்க உள்ளார்.  டாஹோத் மாவட்டம் மற்றும் தேவ்கத் மாவட்டத்தில் உள்ள சுமார் 280 கிராமங்கள் மற்றும் பரியா நகரின் குடிநீர்த் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்யும்.   ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையக் கட்டடம், மழைநீர் வடிகால், கழிவுநீர் அகற்றும் வசதி, திடக்கழிவு மேலாண்மை  மற்றும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், இத்திட்டங்களில் அடங்கும்.   பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், ரூ.120கோடி மதிப்புள்ள  திட்டங்களை, பஞ்ச்மஹால் மற்றும் டாஹோத் மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பழங்குடியினருக்கு வழங்கப்பட உள்ளது.   66 கிலோவோல்ட் கோதிய துணைமின் நிலையம், பஞ்சாயத்து இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் திறந்துவைக்க உள்ளார்.  

டாஹோத்தில் உற்ற உற்பத்திப் பிரிவில், 9000ஹெச்பி திறன்கொண்ட மின்சார ரயில் எஞ்சின் உற்பத்திப்பிரிவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.   நீராவி எஞ்சின்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக 1926-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டாஹோத் பணிமனை, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதன் மூலம், மின்சார ரயில் எஞ்சின் தயாரிப்புப் பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.   இந்தப்பிரிவு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மக்களக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்.   மாநில அரசால் ரூ.500கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படஉள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.   ரூ.300கோடி மதிப்பிலான குடிநீர் வினியோகத் திட்டம், ரூ.175 கோடி மதிப்பிலான டாஹோத் நவீன நகரத் திட்டப்பணிகள், துதிமதி ஆற்றுத் திட்டப்பணிகள், ஜெட்கோவின் கோதியா துணைமின் நிலையப் பணிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.   

*****



(Release ID: 1817307) Visitor Counter : 191