பிரதமர் அலுவலகம்

தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 02 MAR 2022 2:00PM by PIB Chennai

வணக்கம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக  புதிய  மரபு ஒன்றை நாம் தொடங்கியிருப்பதை  நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒன்று பட்ஜெட் தாக்கல்  ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே நடைபெறுகிறது. அதன் அமலாக்கம் ஏப்ரல் ஒன்று முதல் தொடங்குகிறது. எனவே, இரண்டு மாதங்கள் நமக்கு அவகாசம் உள்ளது. பட்ஜெட் அடிப்படையில்  தனியார்,  அரசு, மாநில அரசு, மத்திய அரசு, அரசின் பல்வேறு துறைகள் போன்று சம்பந்தப்பட்ட அனைவரும் எவ்வாறு மிகவும் விரைந்து விஷயங்களைப் புரிந்து கொள்வது  என்பதை உறுதி செய்ய நாம் முயற்சிக்கிறோம்.  இதிலிருந்து வரும் ஆலோசனைகள் அரசு தனது முடிவை எளிமையாக்க உதவுகின்றன. அமலாக்கத்திற்கான திட்டமிடலும், சிறப்பாக இருக்கிறது. சில நேரங்களில் கால்புள்ளி, முற்றுப்புள்ளி போன்ற சிறு சிறு விஷயங்களால் கோப்புகள், மாதக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. இதையெல்லாம் தவிர்க்க இளைஞர்களே, உங்களுடன்  இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். உங்களின் ஆலோசனைகளை  நாங்கள் கோருகிறோம். இந்த பட்ஜெட்டில் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான முடிவுகள் பற்றி நீங்கள் காணவேண்டும்.  இந்த முடிவுகள் அனைத்தும் உண்மையில் முக்கியமானவை.  பட்ஜெட் அறிவிப்புகளின் அமலாக்கம் விரைந்து நடைபெற வேண்டும், இந்த திசையில்  இந்த இணையவழிக் கருத்தரங்கு கூட்டு முயற்சியாகும்.  

நண்பர்களே,

எங்கள் அரசுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் தனித்தனியான துறை அல்ல. பொருளாதாரத் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதே போல் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்தல் தொடர்பான பார்வையில் நவீன தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கினை வகிக்கிறது.  நாட்டின் சமானிய குடிமக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. நாட்டினை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இன்று காலை அமெரி்க்க அதிபர் பைடனின்,  பேச்சு நீங்கள்  கேட்டிருப்பீர்கள், அவர்கூட,  தற்சார்பு அமெரிக்கா பற்றி பேசுகிறார்.  ‘அமெரிக்காவில் உற்பத்தி’ என்பதற்கு அவர் மகத்தான  அழுத்தம் தந்திருக்கிறார். எனவே, உலகின் புதிய நடைமுறை துவக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிகிறோம்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவுகளுக்கான நடைமுறைகள், ட்ரோன்கள், செமி கடத்திகள், விண்வெளி தொழில்நுட்பம், மரபணு ஆய்வு, மருந்து தயாரிப்பு, 5ஜி வரையிலான தூய்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது. வலுவான 5ஜி செயல்முறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உத்தேசங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம், பிஎல்ஐ திட்டங்களுக்கு தெளிவான வரைபடத்தை பட்ஜெட் அளித்துள்ளது. இந்தத் துறையில் தனியார் துறையினர் தங்களின் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

நண்பர்களே,

அறிவியல் அனைவருக்குமானது, தொழில்நுட்பம் உள்நாட்டுக்கானது என்று கூறப்படுகிறது. அறிவியல் பற்றிய இத்தகைய  கோட்பாடுகளை நாம் அறிந்துள்ளோம். ஆனால் “வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு கட்டுமானம், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், கண்ணாடி இழை வடங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டுக்கு உலகளாவிய சந்தை விரிவாகியுள்ளது. இந்த பட்ஜெட் அனிமேஷன் காட்சிப் பதிவுகள், பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. அதே போல் இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகளின் தேவை பற்றியும் தெரிவிக்கிறது. வெளிநாடுகளை சார்ந்திருப்பது  குறைக்கப்பட வேண்டும். இந்த வகையில், மிகுந்த விழிப்புணர்வுடன் நமது முயற்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும். ஃபின்டெக்  என்பது கடந்த காலத்தில் இந்தியாவில் வியப்பை ஏற்படுத்தியது. நமது நாட்டில் இத்தகைய துறைகளை மக்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்கமாட்டார்கள்.  ஆனால் இன்று நமது கிராமங்கள்கூட, நிதிசார்ந்த செயல்பாடுகளை செல்பேசி மூலம் செயல்படுத்துகிறார்கள்.   இதன் பொருள் நவீன தொழில்நுட்பத்தை மேலும் மேலும் அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

நண்பர்களே,

புவிசார் தரவுகள் மற்றும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான விதிகள் மாற்றத்தை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள தனியார் துறையினர் முன்வரவேண்டும். “நமது தற்சார்பு நிலைத்தன்மையிலிருந்து கொவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டும்.

நண்பர்களே,

மூன்றாவது பெரிய புதிய தொழில் நடைமுறை இந்தியாவின் உள்ளது. இந்தத் துறைக்கு அரசிடமிருந்து முழுமையான உதவிக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு திறன் வழங்குதல், மறுதிறன் அளித்தல், திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இணையப்பக்கம் ஒன்றுக்கும் இந்த பட்ஜெட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நம்பகமான திறன், ஆதாரங்கள், பணம் செலுத்துதல், கண்டுபிடிப்பு படிநிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏபிஐ மூலமாக இளைஞர்கள் சரியான வேலைகளையும், வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

நாட்டில் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக 14 முக்கியத் துறைகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடிமக்கள் சேவைகளில் கண்ணாடி இழை பயன்பாடு, இ-கழிவு மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம், மின்சார வாகனப் போக்குவரத்து போன்ற துறைகளில் நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை வழங்க துறை சார்ந்தவர்களின் தெளிவான வழிகாட்டுதல் தேவை.

உங்களுக்கு நன்றி!

*****



(Release ID: 1802680) Visitor Counter : 212