பிரதமர் அலுவலகம்

‘மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டிற்காக’ நிதியமைச்சரையும், அவரது குழுவினரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்

“நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் வந்துள்ளது”

“பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்”

“அதிகப்படியான அடிப்படைக் கட்டமைப்பு, கூடுதல் முதலீடு, அதிக வளர்ச்சி, கூடுதல் வேலைகளுக்கான வாய்ப்புகளால் பட்ஜெட் நிறைந்துள்ளது”.

“இந்த பட்ஜெட்டின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக ஏழைகளின் நலன் உள்ளது”
“வேளாண்மையை லாபகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டும் புதிய வாய்ப்புகளால் நிறைந்தும் பட்ஜெட் அம்சங்கள் உள்ளன”

Posted On: 01 FEB 2022 3:57PM by PIB Chennai

நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் வந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்என்று அவர் கூறினார்.

  மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் தமது கருத்துக்களை தெரிவித்த பிரதமர், “அதிகப்படியான அடிப்படைக் கட்டமைப்பு, கூடுதல்  முதலீடு, அதிக வளர்ச்சி, கூடுதல் வேலைகளுக்கான வாய்ப்புகளால் பட்ஜெட் நிறைந்துள்ளதுஎன்றார். இது புதிய வேலை வாய்ப்பு துறையை  மேலும் திறந்துவிடும். சமகால பிரச்சனைகளை இந்த பட்ஜெட் தீர்ப்பது மட்டுமின்றி இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.

  விவசாயிகளுக்கான ட்ரோன்கள், வந்தே பாரத் ரயில்கள், டிஜிட்டல் கரன்சி, 5ஜி சேவைகள், தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புமுறை போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் நவீனத்தையும், தொழில்நுட்பத்தையும் நாடியிருப்பது நமது இளைஞர்களுக்கு, நடுத்தர வகுப்பினருக்கு, ஏழைகளுக்கு, தலித்களுக்கு, பின்தங்கிய வகுப்பினருக்குப் பெருமளவு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

இந்த பட்ஜெட்டின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக ஏழைகளின் நலன் உள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த பட்ஜெட், கான்கிரீட் வீடு, கழிப்பறை, அனைத்து ஏழை வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம் நவீன இணைய தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது.

 நாட்டில் முதல் முறையாக, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு போன்ற பிராந்தியங்களில் ‘பர்வத் மாலாதிட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தத் திட்டம் இந்த மலைப்பகுதிகளில் நவீனப் போக்குவரத்து முறைகளை உருவாக்கும்.

 லட்சக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை மையமாக இருக்கும் கங்கையின் தூய்மையோடு உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த நதியின் கரையோரங்களில் இயற்கை வேளாண்மையை அரசு ஊக்கப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். இது விவசாயிகளின் நலனுக்கு முக்கியமான நடவடிக்கை என்றும் கங்கையை ரசாயனம் அற்றதாக மாற்றவும் இது உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண்மையை லாபகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டும் புதிய வாய்ப்புகளால் நிறைந்தும் பட்ஜெட் அம்சங்கள் உள்ளன. புதிய வேளாண் தொழில்கள் ஊக்குவிப்புக்கான சிறப்பு நிதி, உணவு பதன தொழில்துறைக்கான திட்டம் போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் மூலம் விவசாயிகளின் கணக்குகளில் 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக பரிமாற்றம் செய்யப்பட இருப்பதாக பிரதமர் கூறினார்.

  கடன் உத்தரவாதத்தில் பெருமளவு அதிகரிப்பு செய்வதோடு பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. “ பாதுகாப்பு மூலதன பட்ஜெட்டின் 68 சதவீதம் உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் இந்தியாவின் குறு சிறு நடுத்தர தொழில்துறை பெருமளவு பயனடையும். 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள மக்கள் முதலீடு பொருளாதாரத்திற்கு புதிய உந்துதலை அளிப்பதோடு சிறு மற்றும் இதர தொழில்துறைகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்என்று அவர் கூறினார்.

‘மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டிற்காக நிதியமைச்சரையும், அவரது குழுவினரையும் பாராட்டி பிரதமர்  பேட்டியை நிறைவு செய்தார்.

***************



(Release ID: 1794441) Visitor Counter : 167