பிரதமர் அலுவலகம்

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .

பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
“இன்று உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் கடந்த காலத்தில் ஏற்பட்ட நேர இழப்பை ஈடு செய்ய முயற்சிக்கிறது. நாங்கள் இரு மடங்கு வேகத்தில் வேலை செய்கிறோம்"
“கான்பூர் மெட்ரோவுக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியது, எங்கள் அரசு அதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியதோடு, பணிகளையும் முடித்தது”
“இன்று கான்பூர் மெட்ரோவையும் சேர்த்தால், உத்தரப்பிரதேசத்தில் மெட்ரோவின் நீளம் 90 கிலோ மீட்டரை தாண்டியுள்ளது. 2014-ல் இது 9 கிமீ ஆகவும், 2017-ல் 18 கிமீ ஆகவும் இருந்தது”
“மாநிலங்களின் மட்டத்தில், சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையை அகற்றுவது முக்கியம். அதனால்தான் அனைவருடன், அனைவரின் நலன் என்ற தாரகமந்திரத்தை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது”
"இரட்டை எஞ்சின் அரசிற்கு பெரிய இலக்குகளை எவ்வாறு அமைப்பது மற்றும் அவற்றை எவ்வாறு அடைவது என்பது தெரியும்"


Posted On: 28 DEC 2021 3:53PM by PIB Chennai

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கான்பூர் மெட்ரோ ரெயில் இணைப்புக்காகவும், குழாய் திட்டத்தை துவக்கியதற்காகவும் கான்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். நகரத்துடனான தமது நீண்ட தொடர்பை நினைவுகூர்ந்த அவர், பல்வேறு உள்ளூர் சிறப்பம்சங்கள் மற்றும் கான்பூர் மக்களின் மகிழ்ச்சியான மற்றும் அன்பான இயல்பைப் பற்றிய நகைச்சுவை மிகுந்த குறிப்புகளோடு தமது உரையைத் தொடங்கினார். தீன் தயாள் உபாத்யாயா, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் சுந்தர் சிங் பண்டாரி போன்ற தலைவர்களை உருவாக்கியதில் நகரத்தின் பங்கையும் அவர் குறிப்பிட்டார். இன்றைய நாளை, அதாவது செவ்வாய்க்கிழமையைகுறிப்பிட்டு, உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியில் மற்றொரு பொன்னான அத்தியாயம் சேர்க்கப்படுவதற்கு பங்கி வாலே ஹனுமான் ஜியின் ஆசீர்வாதங்களை அவர் கோரினார். “இன்று உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் கடந்த காலத்தில் ஏற்பட்ட நேர இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறது. நாங்கள் இரட்டிப்பு வேகத்தில் வேலை செய்கிறோம்,'' என்றார் அவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் குறித்த உருவகத்தை மாற்றியமைத்ததை பற்றி பிரதமர் குறிப்பிட்டார். சட்ட விரோத ஆயுதங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மாநிலம், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களித்து, பாதுகாப்பு வழித்தடத்தின் மையமாக உள்ளது என்றார் அவர். காலக்கெடுவை கடைபிடிக்கும் பணி கலாச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை முடிக்க இரட்டை எஞ்சின் அரசுகள் இரவு பகலாக உழைக்கின்றன என்றார். “கான்பூர் மெட்ரோவுக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியது, எங்கள் அரசே அதை அர்ப்பணிக்கிறது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியது, எங்கள் அரசே அதன் பணியை நிறைவு செய்தது,” என்று திரு. மோடி விளக்கினார். உத்தரப்பிரதேசத்தில் அமையவுள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம், மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலை மற்றும் உத்திரபிரதேசத்தில் உருவாகி வரும் பிரத்யேக சரக்கு வழித்தட மையம் போன்ற முக்கிய சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மெட்ரோ ரயிலின் மொத்த நீளம் 9 கி.மீ ஆக இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2014 மற்றும் 2017-க்கு இடையில், மெட்ரோவின் நீளம் மொத்தம் 18 கி.மீ மட்டுமே அதிகரித்தது. இன்று கான்பூர் மெட்ரோவையும் சேர்த்தால், மாநிலத்தில் தற்போது மெட்ரோவின் நீளம் 90 கி.மீ.யை தாண்டியுள்ளது, என்றார் அவர்.

கடந்த காலத்தின் சீரற்ற வளர்ச்சியைக் குறிப்பிட்ட பிரதமர், பல தசாப்தங்களாக, ஒரு பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு, மற்றொன்று பின்தங்கியது என்றார். "மாநிலங்களின் மட்டத்தில், சமூகத்தில் உள்ள இந்த சமத்துவமின்மையை அகற்றுவது முக்கியமானது. அதனால்தான் அனைவருடன், அனைவரின் வளர்ச்சி என்ற தாரகமந்திரத்தோடு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது” என்று அவர் வலியுறுத்தினார். மாநிலத்தின் தேவைகளை புரிந்து கொண்டு இரட்டை எஞ்சின் அரசு உறுதியான பணியை செய்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடையவில்லை. அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் திட்டம் மூலம் உ.பி.யின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான தண்ணீரை வழங்குவதில் இன்று ஈடுபட்டுள்ளோம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இரட்டை எஞ்சின் அரசு, உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருகிறது. இரட்டை எஞ்சின் அரசுக்கு பெரிய இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது, மற்றும் அவற்றை எவ்வாறு அடைவது என்பது தெரியும். மின்சார பரிமாற்றம், மின்சார நிலவரம், நகரங்கள் மற்றும் நதிகளின் தூய்மை ஆகியவற்றில் முன்னேற்றம் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டில் மாநிலத்தில் இருந்த நகர்ப்புற ஏழைகளுக்கு வெறும் 2.5 லட்சம் வீடுகளே இருந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 17 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெருவோர வியாபாரிகள் முதன்முறையாக அரசின் கவனத்தைப் பெற்றனர், மற்றும் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 700 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர். பெருந்தொற்றின் போது மாநிலத்தில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்க அரசு ஏற்பாடு செய்தது. 2014-ல் நாட்டில் வெறும் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தன. இப்போது 30 கோடிக்கு மேல் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1.60 கோடி குடும்பங்கள் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை குறிப்பிட்டு பிரதமர் பேசுகையில், மாஃபியா கலாச்சாரத்தை ஒழித்துள்ள திரு .யோகி அரசால் உ.பி.யில் முதலீடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வணிகம் மற்றும் தொழில் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, கான்பூரில் ஒரு மெகா தோல் குழுமம் மற்றும் ஃபசல்கஞ்ச் ஆகியவற்றிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு வழித்தடம் மற்றும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ போன்ற திட்டங்கள் கான்பூரின் தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கும் என்றார் அவர். சட்டத்தின் மீதுள்ள பயம் காரணமாக குற்றவாளிகள் பின்வாங்குவதாகவும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வ சோதனைகள் மூலம் சட்டவிரோத பணம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களின் செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

 

                                                                                *********************

 

 



(Release ID: 1785881) Visitor Counter : 239