பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் வங்கி வைப்புத்தொகை காப்பீட்டு திட்ட டெபாசிட்தாரர்கள் இடையே பிரதமர் உரையாற்றினார்

‘’ பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கள் பணத்தை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் கடந்த சில நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். இந்தத் தொகை ரூ.1300 கோடிக்கும் அதிகமாகும்’’

‘’ இன்றைய புதிய இந்தியா பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறது, இன்றைய இந்தியா பிரச்சினைகளை தவிர்ப்பதில்லை’’

‘’ஏழைகள்,நடுத்தர பிரிவு மக்களின் கவலைகளை புரிந்து கொண்டு, உத்தரவாத தொகையை ரூ.5 லட்சமாக நாங்கள் உயர்த்தியுள்ளோம்’’

‘’ முன்பு ரீபண்டுக்கு கால வரம்பு இல்லை, இப்போது 90 நாட்களுக்குள் ரீபண்ட் வழங்குவதை எங்கள் அரசு கட்டாயமாக்கியுள்ளது’’

‘’ நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் முன்னேற்றத்துக்கு டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும். வங்கியை நாம் காப்பாற்ற விரும்பினால், டெபாசிட்தாரர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்’’

‘’ உலகின் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் தடுமாறிய போது, அநேகமாக நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தியா நேரடி உதவியை மிக விரைவாக வழங்கியது’’

‘’ஜன் தன் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட கோடிக்கணக்கான வங்கி கணக்கு

Posted On: 12 DEC 2021 1:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று ‘’ முதலில் டெபாசிட்தாரர்கள்; ரூ.5 லட்சம் வரை காலவரம்புடன் கூடிய வைப்புத்தொகை காப்பீட்டு உத்தரவாதம்’’என்னும் விழாவில் உரையாற்றினார். மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், ஆர்பிஐ ஆளுநர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சில டெபாசிட்தாரர்களுக்கு காசோலைகளையும் பிரதமர் வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர். இன்று வங்கித்துறைக்கும், நாட்டில் கோடிக்கணக்கான வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் முக்கியமான நாள்; பல பத்தாண்டுகளாக இருந்து வந்த பெரிய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை கண்ட நாள் என்று கூறினார். டெபாசிட்தாரர்கள்தான் முதலில் என்ற உணர்வு மிகவும் அர்த்தமுள்ளதாகும். பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கள் பணத்தை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் கடந்த சில நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். இந்தத் தொகை ரூ.1300 கோடிக்கும் அதிகமாகும் என்று திரு மோடி கூறினார்.

எந்தப்பிரச்சினையும் அது மோசமடைவதற்கு முன்பாக உரிய காலத்தில் எந்த நாடாக இருந்தாலும் தீர்வு காண முடியும் என்று பிரதமர் கூறினார். ஆனால், பல ஆண்டுகளாக பிரச்சினைகளை தவிர்க்கும் மனப்பான்மை இருந்து வந்ததாக அவர் கூறினார். இன்றைய புதிய இந்தியா பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறது, இன்றைய இந்தியா பிரச்சினைகளை தவிர்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வங்கி டெபாசிட்தாரர்களுக்கு காப்பீட்டு முறை 60களில் இருந்து அமலில் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், முன்பு வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகையில் ரூ.50 ஆயிரம் வரையில்தான் உத்தரவாதம் இருந்தது; பின்னர் இது ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டது. அதாவது, வங்கி மூழ்கினால், டெபாசிட் செய்தவர்கள் ஒரு லட்சம் வரை பெறுவதற்கு வழி இருந்தது. ஆனால், அந்த ந்தொகையை பெறுவதற்கு கால வரம்பு இருக்கவில்லை என்று கூறினார்.’’ ’ஏழைகள்,நடுத்தர பிரிவு மக்களின் கவலைகளை புரிந்து கொண்டு, உத்தரவாத தொகையை ரூ.5 லட்சமாக நாங்கள் உயர்த்தியுள்ளோம்’’ என்று பிரதமர் கூறினார். மற்றொரு பிரச்சினை சட்டத்தை திருத்தியதால் சமாளிக்கப்பட்டது. ‘’ முன்பு ரீபண்டுக்கு கால வரம்பு இல்லை, இப்போது 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள்  ரீபண்ட் வழங்குவதை எங்கள் அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கி திவாலானாலும், டெபாசிட்தாரர்கள் 90 நாட்களுக்குள் பணத்தை நிச்சயமாகப் பெற முடியும்’’ என்று அவர் கூறினார்.

நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகள் பெரும்பங்கு வகிப்பதாக கூறிய பிரதமர்வங்கிகளின் முன்னேற்றத்துக்கு டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும். வங்கியை நாம் காப்பாற்ற விரும்பினால், டெபாசிட்தாரர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

பல சிறிய பொதுத்துறை வங்கிளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதன் மூலம், அவற்றின் திறனும், வெளிப்படைத்தன்மையும் ஒவ்வொரு வழியிலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளை கண்காணிக்கும் போது, அது டெபாசிட்தாரர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அவர் கூறினார்.

வங்கி கணக்கில் மட்டும் பிரச்சினை இருக்கவில்லை.தொலைதூர பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குவதிலும், பிரச்சினை இருந்ததாக கூறிய பிரதமர், இன்று அநேகமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், வங்கி கிளை வசதியோ, அல்லது வங்கி பிரதிநிதி 5 கி.மீ சுற்றளவுக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது என்றார். இன்று இந்தியாவில் சாதாரண மக்கள் கூட, எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும், 24 மணி நேரமும் சிறிய பரிவர்த்தனைகளைக்கூட செய்ய முடிகிறது என்று அவர் கூறினார். 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் காலத்திலும், இந்தியாவின் வங்கி துறை சுமுகமாக செயல்பட இத்தகைய பல சீர்திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகின் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் தடுமாறிய போது, அநேகமாக நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தியா நேரடி உதவியை மிக விரைவாக வழங்கியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஏழைகள், பெண்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் போன்ற பெருமளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிரிவினருக்கு காப்பீடு, வங்கி கடன்கள், நிதி அதிகாரம் வழங்க கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பெண்களுக்கு வங்கி வசதி முன்பு எந்த வகையிலும் கிட்டவில்லை. அதனால், முன்னுரிமை அடிப்படையில் இதை நாங்கள் கையில் எடுத்தோம். ஜன் தன் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட கோடிக்கணக்கான வங்கி கணக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை  பெண்களின் கணக்குகளாகும். இதன்மூலம், பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகராரம் பெற்றுள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் செய்யப்படும் சேமிப்பு, வைப்பு, நடப்பு, ஆர்டி போன்ற அனைத்து வகை டெபாசிட்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை , அனைத்து வணிக வங்கிகளும் உறுதி செய்துள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மாநில, மத்திய, தொடக்க கூட்டுறவு வங்கிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சாதனை சீர்திருத்தம் மூலம் , வங்கி டெபாசிட் காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், முந்தைய நிதி ஆண்டின் முடிவில், பாதுகாக்கப்பட்ட கணக்குகள் மொத்த கணக்குகளில் 98.1% ஆக உள்ளது. இது சர்வதேச குறியீடான 80% க்கும் அதிகம்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780628

                                                  ******************

 

 


(Release ID: 1780657)