பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 1, 2 மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்புத் திட்டம் ஆகியவை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 NOV 2021 3:33PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 1 மற்றும்
2-ன் கீழ்
எஞ்சியுள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை முடிப்பதற்காக 2022 செப்டம்பர் வரை நீட்டிக்கும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்புத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 1, சமவெளியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்டப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலை வசதி அமைக்க வகை செய்கிறது. மொத்தம் 1,84,444 குடியிருப்புகளில் 2,432 குடியிருப்புகளுக்கு மட்டும் பணி எஞ்சியுள்ளது. 6,45,627 கிலோ மீட்டர் நீள சாலையில், 20,950 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் 7,523 பாலங்களில் 1,974 பாலங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2-ல் 50,000 கிலோ மீட்டர் ஊரகச் சாலைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மொத்தம் 49,885 கிலோ மீட்டர் நீள சாலையில் 4,240 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 765 பாலங்களில் 254 பாலங்களும் முடிக்கப்படாமல் உள்ளன. கொரோனா பரவல், ஊரடங்கு, மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்தப் பணிகள் தாமதமடைந்தன. இந்த ஒப்புதலுக்கு பின்னர் இவை விரைவில் முடிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772578

******


(Release ID: 1772578)



(Release ID: 1772606) Visitor Counter : 648